எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

முன்னோருக்காய்.

சிறுமேகமாய் எழும்புகிறது
சமையல் புகை
மேகத்தைக் கொத்தி விளையாடுகின்றன
நீள்மூக்கு இலைகள்
மழைச்சாரல் அர்க்யம் செய்கிறது.
சோடச உபசாரங்கள் நிறைவுற
பதார்த்தங்கள் காத்திருக்கின்றன
கருத்தபறவையொன்றின் வடிவில்
தாகம் தணிக்க வரும் முன்னோருக்காய்.
  

புதன், 25 டிசம்பர், 2019

தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்கள்.

கண்ணுக் குட்டி, செல்லம், வெல்லம், லட்டு
கைபேசியில் முகம் காட்டும்
பிள்ளைகளைக் கண்டதும் துள்ளிவரும் கொஞ்சல்கள்
மருமக்களின் காதுக்கு எட்டிவிடுமுன்
வெட்கப்படும் மகன்கள் கோபிக்குமுன்
எதில்பொத்தி வைப்பது
எப்படி மறைப்பது.
தாய்மையின் ரகசியக் கடவுச் சொற்களை.
  

வியாழன், 19 டிசம்பர், 2019

வென்று வாழுங்கள்

உதவிக்கரம் நீட்டி ஓடோடி வருவீரே
அபயக்கரம் காட்டி இனி அன்புசெய்ய யாரிருக்கா.
எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேருண்டு.
எம் உள்ளத்தையும் உம்முடன் எடுத்துக்கொண்டு வாழ்ந்து காட்டிச் செல்லுவதும் நீர்தானே.
ஆற்றுக்கால் பகவதி நீர் 
அன்பின் ஊற்றுக்கால் நீர்தானே
வைகையென நீர்சொரிந்த
சொக்கனின் மீனாட்சி உம்மிடம் 
"என் சுந்தரனும் என்னோடு இங்கிருக்க
நீயும் ஒரு சுந்தரனோடு சுகமாக வந்தாயோ
என்னாட்சி மதுரையிலே இனி 
உன்னாட்சியும் நடக்கட்டுமென
வருகவென வரவேற்றுத்
தாய்போலக் கை விரிப்பாள்.
நடக்கட்டும் மதுரையிலே
உங்கள் இருவரின் பேராட்சி
நானிலத்தில் நன்மையே விளையட்டும்.
அமெரிக்க மண்ணைவிட்டு
அன்னை பூமி சென்றபின்னும்
உங்கள் அன்புக்கடிமைகளை 
மறக்காதீர் ஒருபோதும். 
தாயாய்த் தோழியாய் 
யாதுமாய் இங்கிருந்தீர்
தாய்நாடு சென்றபின்னும்
தகவல் தொடர்பு கொண்டிடுக
தாயவளாம் மீனாட்சியிடம்
எமக்காகவும் வேண்டிடுக.
இப்பிரிவு பௌதீகப் பொருண்மைக்குத்தான்.
உள்ளப் பிரிவு நாம் அறியாதது.
உடல் நலம், உள்ள நலன் போற்றி
இன்றுபோல் என்றும் ஒன்றாயிருப்போம்.
வாழ்க வளமுடன்
வென்று வாழுங்கள் மதுரையிலும்.
உங்கள் அன்பெனும் அமுதம்பருகி
இனிது வாழும் விஜி சத்யாவின்
அன்பு முத்தங்கள் ஆயிரம்
  

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

துளிர்த்தெழு

இதுகாறும்
கடல்மேல் பொழிந்த மழையாய்
வீணானது எங்கள் பேரன்பு.
இன்னும் பொழியக் காத்திருக்கிறோம்
மண் விலக்கி முளைவிட்டெழு
எங்கள் சிறுவிதையே
இலைச் சிறகுகளோடு
துளிர்த்தெழு
எங்கள் செல்லத் தேவதையே
 

செவ்வாய், 10 டிசம்பர், 2019

காவி

பிள்ளைப்பிராயத்திலிருந்து
காவி என்னை லாவிக்கொண்டுதான் இருக்கிறது.
துறவறத்தை நோக்கிச் செல்லல் மற்றும்
தன்வயம் இழந்து தெய்வமயமாதல்
வெண்மையும் நீலமும் கருப்பும் கூட
அதற்குத்தானென்றறிகையில்
சிவந்து குழம்பித் திரிகிறது என் காவி ரத்தம்.

வியாழன், 5 டிசம்பர், 2019

கங்கை

கரையெங்கும் சாம்பலும் எலும்புகளும்
அகோரி நர்த்தனங்களும் தீயின் நாக்குகளும்
கடல்நோக்கி ஓடுகிறாள் கங்கை
தன்னையும் கரைத்துக்கொள்ள..

செவ்வாய், 19 நவம்பர், 2019

எனக்கானது

தனிமையின் சூட்டுவெளியில்
கிரிகோர் ஸாம்ஸாபோல்
முடங்கிக் கொள்ள ஏங்கும் மனது
ஒவ்வொரு இரவிலும்
என்னுள் உயிர்க்கும் அவன்
இருளும் மூலையும் தேடி முடங்குகிறான்
இனிச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை
எல்லா உதாசீனங்களையும் பருகியாயிற்று
எல்லா விரக்திகளையும் துப்பியாயிற்று;
வெய்யில் வந்து சூடுவைக்கும்போது
உயிர்த்தெழ வேண்டியதாகிறது
இன்னும் இருக்கும் நாட்களைக் கடைத்தேற்ற.
இனி இருளும்கூட எனக்கானதில்லை.
  

ஞாயிறு, 17 நவம்பர், 2019

தொடரும்..

முடிந்தும் முடியாத கூந்தலுடன்
பாத்திரங்களுடன் பேசியபடி
துணிகளுடன் உறவாடியபடி
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு
இன்னொரு அடுப்பங்கரைக்கு
இன்னும் சில உணவுவகைகள் கற்க
மாநிலம் விட்டு மாநிலம்
கண்டம் விட்டுக் கண்டம்
தாவணியிலிருந்து, புடவையிலிருந்து
குளிர்காலக் கால்சராய் கோட்டுக்களோடும்
கற்றுக் கொண்ட பழமையின் கெட்டிப்போடும்
ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது
தங்கள் பாத்திரங்களோடு அவர்கள் பயணம்..

வியாழன், 14 நவம்பர், 2019

கூர்

சீராக வெட்டப்பட்ட நகங்கள்தான்
தாட்சண்யத்தோடு தட்டச்சித் தட்டச்சி
மழுங்க மழுங்க ராவிக்கொண்டிருக்கின்றன
கூரான கருத்தையும் சுயத்தையும்.

புதன், 13 நவம்பர், 2019

ஆநிரை

குளிரும் மழையும்
ஒன்றன்மேல் ஒன்று
கவிழ்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு நாற்காலியில் அமர்ந்ததும்
காத்திருந்து சூழத் தொடங்குகின்றன
நம்மையும்.
முற்றுகைக்குட்பட்ட கோட்டைக்குள்
ஆதரவற்ற ஆநிரைகள்போல்
சிலிர்க்கிறது உடல்.

ஞாயிறு, 3 நவம்பர், 2019

அகழி முதலை

வேண்டும்போதெல்லாம்
விரியும் உன் இமைகள்
வேண்டாதபோது
தாழவீழும் கோட்டைக் கதவுகள்..

ஆசைச்சொற்கள் தீண்டுமுன்
மென்று சீரணித்து விடுகிறது
அசட்டையாய்த் திரும்பிச் செல்லும்
உன்பின் நழுவிவிழும் அகழி முதலை

  

திங்கள், 28 அக்டோபர், 2019

கொடுக்கு

ஈரத்துணிகளின் பின்புறம்
காத்திருக்கிறது ஒரு கருந்தேள்,
ஒரு பொன்வண்டு, ஒரு பட்டாம்பூச்சி.
விரல்களைப் பரிசோதிப்பதில்
ஒரு கொடுக்கைப் போல் இனிப்பதில்லை
ஒரு பொன்வண்டில் நழுவலும்,
ஒரு இறக்கையின் தடவலும்.

  

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கல்லா.

சாராயக்கடைகள் மூடப்படுவதேயில்லை
முதல்நாளோ மறுநாளோ
தங்கள் கல்லாவை நிறைத்துவிடுகின்றன
நோய்க்கூறு கொண்ட ஈரலோடு மனிதனையும்
மஞ்சள் கயிறு கொண்ட கழுத்தோடு மனைவியையும்
  

புதன், 23 அக்டோபர், 2019

சாட்சி

எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
முதுவேனில் எறும்புபோல்
வலைப்புற்றில் சேமிக்கிறேன்.
புத்தகக் கதவுகள் கொண்டு
இழுத்துமூடிக்கொள்கிறேன்
கரையான்கள் வரும்வரை
எறும்புத் தின்னிகள்
கைபட்டதும் கரைகிறோம்
கரையானும் நானும்
சேமித்த எழுத்துக்கள்
சிதறிக்கிடக்கின்றன
ஒரு வாழ்விருந்ததன் சாட்சியாய்
  

திங்கள், 14 அக்டோபர், 2019

இதழ் கள்

இப்படியாகத்தான் அது இருக்குமென்று
அதுவரை அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை
இதழிலிலிருந்து இதழ்வரை
இதமாகத் தாவி அமர்ந்து தேன் குடித்த
பட்டாம்பூச்சி மென்மையாக
இதழ் தட்டிப் பறந்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு முத்தமென்று.
சிறகின் ரேகைகள் வரி வரியாய்ப் படிந்த தடம்நீவி
ஆண்டுக்கணக்காய்த்
தேடிக்கொண்டிருக்கிறாள்
இன்னுமந்தப் பட்டாம்பூச்சியை.
  

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

முதுசங்கள்.

பெருவிருட்சங்கள் நிரம்பிய தெருக்கள்
கைபிடித்து நடக்கவைக்கின்றன
கிளைகளின் ஊடாய்.
தொலையாத அழகு
தோன்றித் தோன்றி தொடர்கிறது
நடவில்லை எம்மரத்தையும்
நட்டவர்களையும் கண்டதிலை
எப்படிக் கிளைத்தன எப்படி விளைந்தன
வீடேறும்போதுதான் உறைக்கிறது
முதுசங்கள் விழுதுகளால் விதைகளால்
சுயம்பாய் உயிர்த்திருப்பது.
  

வெள்ளி, 29 மார்ச், 2019

தண்டட்டிக்காரி

வேலிப்படல் மறைக்கும்
வெண்பூசணிக்கொடி
கித்தான் படுதா உரசும்
கல்வாழைப்பூ
வெள்ளாட்டுக்குட்டியோடு
வயிறு சதைத்த வான்கோழி
கெக்கெக்கென குதூகலிக்க
வட்டிலிலே கஞ்சியோடு
வறுத்த கருவாடு உண்ணும்
தண்டட்டிக்காரியின்
குழல் அலசும் காற்றுக்கு
வேலிப்படல் தள்ளிப்புக
வேகமென்ன பத்தலையா
வெக்கமாகிப் போச்சுதாமா
வேலிக்கருவை பிடித்துக்
கால்தடுக்கி நிற்பதென்ன
வெய்யிலோ உள்நுழைந்து
வெதவெதப்பா நடப்பதென்ன
வேர்க்கும் சுங்குடியை
விசிறியாய் அவள் வீச
ஆசுவாசம் கொண்டு
அவள் வாசம் சுமந்த காற்று
மூச்சுப் பிசிறடிக்க
முந்தானையைப் பற்றுதம்மா
  

புதன், 27 மார்ச், 2019

நம்பர் கவிதை

நீ பகுபதம் நான் பகாப்பதம்.

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.

வகுபடு எண்ணில்

நீ ஈவாக இருக்க

நான் மீதியாய்க் கிடக்கிறேன்

(நான் மட்டும் தக்காளித் தொக்கா

நானும் எழுதிட்டேன்

" நம்பர் கவிதை")
  

திங்கள், 25 மார்ச், 2019

வார்த்தைக் க்ரீடை

சுழலாய்ச் சருட்டிவிடுமெனத் தெரிந்தும்

வண்ணமயமாய்க் கவர்ந்திழுக்கிறது

வார்த்தைக் க்ரீடை.
  

வியாழன், 14 மார்ச், 2019

கூம்புதல்.

பூக்களைக் கத்தரித்து
ஜாடி மகிர செருகியாயிற்று.
நிரம்பி வழிகிறது வரவேற்பறை.
புன்னகைகள் பிடுங்கப்பட்ட துயரத்தில்
கூம்பிக் கிடக்கின்றன தொட்டிகள்.
  

செவ்வாய், 12 மார்ச், 2019

இருதிணை.

பாம்பின் தலைக்கும்
உடலுக்கும் பதிலாக
இருவேறு உயிராகப்
புதுப்பித்தாயிற்று.
இரண்டுக்குமிடையில்
சிக்கித் தவிக்கும் மனம்
இருதிணைச் சிந்தனையில்
உயிர்தெழுவதில்லை
  

புதன், 6 மார்ச், 2019

முடக்கம்.

நகரத்தின் மையத்தில்தான்
அமைந்திருக்கிறது வீடு.
நாலாதிசையும் பறக்கிறது சிந்தனை.
நகர்விலும் பெயர்தலிலும்
புதிதாக என்ன முளைத்துவிடப் போகிறதென
முடங்கிப் படுத்திருக்கிறது மனம்.
வெம்மையில் குளிர் கர்ப்பமாய்
சுருட்டி ஒளிந்திருக்கிறது சாளரம்.
தொப்புள் கொடியாய்
போஷித்துக் கொண்டிருக்கிறது
திறந்து மூடும் வாயில்.

செவ்வாய், 5 மார்ச், 2019

ஒளிர்தல்.

ஐந்து முகங்களில்
ஒளிர்கிறாள்...
கண்மூடித் திறக்கிறேன்
ப்ரகாசமான முகத்தோடு..
தீபத்தால் தீபத்தை
ஏற்றுதல் இதுதானா.

புதன், 6 பிப்ரவரி, 2019

தேவதை ரூபம்.

பின்னிரவின் கனவில்
ஆவியைப் போல்
அலைகிறது நினைவு.
போர்வையைச் சுருட்டிப்
புதைந்து கொள்கிறது யட்சிணி.
வெளியேறும் வழியின்றி
படுத்துகிறது ஒரு பேய்.
பின்னும் விடியலில்
விழித்தெழுகிறது ஒரு பூதம்.
கண்கசக்கி விழிக்க
கண்ணாடியில் கையசைக்கிறது
ஒரு பிசாசு.
எத்தனையோ பார்த்தவன்
அத்தனையுடனும்
வாழத்துவங்குகிறான் ராட்சசனாய்
வெளிச்சம் விழத்துவங்க
இரண்டும் அவசரமாய்
தேவதைரூபம் தரிக்கின்றன.
  

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மனிதனும் இயற்கையும் :-

மனிதனும் இயற்கையும் :-

“மனிதனைத் தேடுகிறேன் “ என்றாராம் ஒரு அறிஞர். மனிதனைத் தேடுகிறேன் என்றால் என்ன பொருள். அவர் கண்பட எதிர்ப்படுகிறவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? நிகழ்காலத்தில் இல்லாவிடினும் இறந்தகாலத்துள் ? அவர் மனிதர் இல்லையா ? அந்த அறிஞன் தேடி விழைந்திருப்பது மனிதனின் உருவத்தையல்ல. மனிதம் என்னும் கருணைய எனப் பொருள் கொள்ளலாம். தற்காலத்துள் மனிதத்துடன் இயற்கையின் வறுமையும் சேர்ந்து இயற்கைத் தேட வேண்டியதாகவுள்ளது.

வளமையைச் செழுமையாய் அளிக்கும் இயற்கைக்கும் வறுமையளிக்க மானுடத்துக்கே வல்லமையுண்டு. மேகக் குழந்தைகள் உறங்கும் மலையன்னையைச் சின்னாபின்னப்படுத்தி குகைப்பாதைகளாக மாற்றவும், மேகநீர் தேக்கி மாணிக்கச் சில்லறை சிந்தும் மரக்குழந்தைகளைக் கெல்லி எறிந்து கட்டடப் பிசாசுகளாய் உருமாற்றவும் தெரிந்த இந்த மனித மந்திரவாதிகளின் கைகளில் இயற்கை என்பது ‘ குரங்கு கையில் பூமாலை ‘.

{வனங்கள் விலங்குகளின் தாயகம்.வனங்களில் சந்தனம் தேக்கு மரங்கள் அதிகம். அவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.}

மனிதம் அழிய இயற்கை அழிகிறது. அழிபடுகிறது. ‘நிலமென்னும் நல்லாள்’ என வள்ளுவன் குறிப்பிட்ட நிலமங்கை, ‘ சாது மிரண்டால் காடு கொள்ளாது ‘ என்பதாய் அங்கங்கே சீற்றமெடுத்ததன் விளைவு, பூகம்பமாய் வெடித்து மனிதனை உள்விழுங்கித் தன் சுயம் விரித்துள்ளது.

தற்காலத்தில் மலைகளை உடைத்துச் சில்லுகளாக்கிக் கருங்கற்களாக, ஜல்லிக் கற்களாக எடுத்துவிடுகிறார்கள். மலைகளை உடைக்க வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். விஞ்ஞானக்காரணங்களின்படி ஆராய்ந்தோமானால் அவை பூமியில் நடுக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. மலைகள் அரண்களாகவும், பல்வேறு மருத்துவப் பயனுள்ளவைகளாகவும் இருக்கும்போது தாதுப் பொருள்களுக்கு வேண்டியே மலைகள் சிதைக்கப்படுவது கொடூரமானதாகும்.

இயற்கையென்பது மனிதனுக்குப் பயன்தர வேண்டித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையென்பது மாறக்கூடியதுதான் என்றாலும் அதை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பவன் மனிதன். தானாய் மாறும் பொருளுக்கு வினையூக்கியாய் செயல்படுவது மானுடம்.

பசு நடந்த
பாலைகளில்
கிளைக்கும் புல்
மனிதன் நடக்கும்
சோலைகளில்
பட்டுப் போகின்றது.

இயற்கையின் பாதை மாற்றிய பயணத்தை நடத்திச் செல்வது கலியுகக் கண்ணன்கள். இவர்கள் இயற்கையை வெற்றிபெற அழைத்துச் செல்லவில்லை. போரிட்டு மடிய வேண்டியே அழைத்துச் செல்கிறார்கள்.

கலியுகக் குருக்ஷேத்திரத்தில் வெற்றிபெறப் போவது சகுனித்தனம்தான் – கௌரவர்களாய் விசுவரூபமெடுத்து நிற்கும் செயற்கைதான் – என்பது தெரிந்தும் விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கும் பாண்டவர்களாய் இயற்கை.

இயற்கை ஜானகி சுயம்வரத்துக்காய் முறிபடக்காத்து நிற்கும் தனுசு. அதை முறிக்க இத்தனை இராவணங்களா ?

“நகரம்
அது மானுடம் அடையும்
கல் மரங்கள்
முளைத்த காடு.”

“எங்கெங்கும்
கட்டிடங்கள்
முகம் மாட்டும்
மனிதர்களாய்”

“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் “ இது இன்றைய அரசியல்வாதப் பச்சோந்தியின் வார்த்தைகள். பச்சோந்தியின் மூலம் வெளிப்பட்ட வார்த்தைகளானாலும் இதனால் கிடைக்கும் நன்மை மறுக்க முடியாதது. ஒரு காலகட்டத்தில் காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் அழித்துக் கொண்டிருந்த மனிதர் குலம் இப்போது சோலைகளையும் சாலை ஓரப் பூங்காக்களையும், மிருகக் காட்சி சாலைகளையும், பண்ணைகளையும் விரும்பி விரும்பி வளர்ப்பது நகைப்புக்கு இடமூட்டுவதாக உள்ளது.

இயற்கையை அழித்துவிட்டு செயற்கைச் செறிவில் நதிகளையும் மலைகளையும் காட்சி சாலைகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கும் மனிதனின் வீண் செயலை என்னவென்று  உரைப்பது ? இது ‘வேலியில் செல்லும் ஓணானைக் காதில் விட்டுக் கொள்ளும் ‘ கதைக்கு ஒப்பாகும்.

பாலைவனங்களைக் கூட விட்டுவைக்கவில்லை மனித இனம். அணுகுண்டுகளை வெடிக்க வைத்துப் பரிசோதித்ததன் மூலம் மனித குலத்தின் நாசத்துக்கே உலைவைத்ததுள்ளதும் மனித இனம்தான். இதனால் அங்கு பிறக்கும் அடுத்த தலைமுறைகள் கைகால் ஊனத்துடன் மற்றும் மூளை வளர்ச்சியற்ற நிலையில் பிறக்க நேர்கிறது. அந்த இடங்களில் தாவரங்கள் ஏன் புல் பூண்டுகள் கூட உயிர்ப்பிப்பதில்லை.

பீடபூமிகளையும் ஆக்ரமித்துக் கொண்டது மனித இனம். கரிசல் மண் வளமுள்ள பகுதிகளில் பருத்தி பயிரிடப்படுகிறது. மண்ணின் வளத்தை எந்தெந்த வகைகளில் உறிஞ்ச முடியுமோ அந்த அளவு அட்டையாய் உறிஞ்சிக் கொண்டு நிலத்தைப் பாழ்படுத்துகிறது மனித இனம்.


ஆலைக்கழிவுகளில் பாதிக்கப்படுவது ஆறுகளும், அது சங்கமிக்கும் கடலும்தான். அந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தி உழப்படும் நிலங்களும் கெட்டுப்போகின்றன. இவ்வறெல்லாம் இயற்கையைச் செயற்கை ஆக்கி விடுகிறோம். மண்ணில் பிறந்து மண்ணில் மரிக்கும் நாம் மண்ணைக் கெடுத்துவிட்டே மரிக்கிறோம். இனிமேலாவது சிந்திப்போமாக.
  

திங்கள், 4 பிப்ரவரி, 2019

உட்குரல்.

There is a voice inside of you
That whispers all day along.
‘I feel that this is right for me.
I know that this is wrong’
No teacher, no preacher, parent, friend
Or wise man can decide.
What’s right for you just listen to

The voice that speaks inside.

உன்னுள்ளிருந்து ஒலிக்கும்  குரல்
நாள்முழுதும் கிசுகிசுக்கிறது.
’இதை நான் சரி என்று உணர்கிறேன்
அது தவறென்று எனக்குத் தெரியும்”
ஆசிரியரோ பிரசங்கியோ பெற்றோரோ நண்பரோ
அல்லது ஞானமுள்ளவரோ அதை தீர்மானிக்க இயலாது.
உனக்கு எது சரியானது என்பதைத் தீர்மானிக்க
உன்னுள் பேசும் குரலை உற்றுக் கேள். 

  

வியாழன், 24 ஜனவரி, 2019

மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-

மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவியின் நிலை :-

கவிமணி கூறும் மருமக்கள் வழி மான்யத்தில் நான்காவது மனைவி மிகவும் அழகானவளாக வர்ணிக்கப்படுகிறாள். அவளின் மஞ்சள் பூச்சும், மயக்கிடும் பேச்சும், கொஞ்சிடும் மொழியும், தாசிகள் மெட்டும் தன் கணவனை மயக்கி விட்டதாக ஐந்தாவது மனைவி ஆத்திரத்துடன் பகிர்கின்றாள்.

அவள்
“அடுக்களை வந்திடாள் – அரக்குப் பாவையோ ?
கரிக்கலம் ஏந்திடாள் – கனக சுந்தரியோ ?
வாரிகோல் ஏந்திடாள் – மகாராணி மகளோ ?
வெய்யிலில் இறங்கிடாள் – மென்மலர் இதழோ ?
குடத்தை ஏந்திடாள் – குருடோ நொண்டியோ ?”


என்று கூறுவதன் மூலம் ”நான்காவது மனைவி கணவனைக் கைக்குள் போட்டுக் கொண்டவள். அவள். அலங்காரத்தினால் கணவனை மயக்குகின்றாள். அதே சமயம் அவள் செய்யவில்லை எனக் கூறும் வேலைகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறும் “ஐந்தாம் மனைவி  மேலும் கூறுகின்றாள். “நான்காமவள் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு துரும்பைக் கூடத் தொடுவதில்லை. எந்நேரமும் அலங்காரம் செய்யவும், கணவனை மயக்கி மற்றவரை ( மற்ற மனைவியர் நால்வரையும் ) ஏச்சுக்குள்ளாக்கிடும்  பாவியாகக் காட்டப்படுகின்றாள். இதுவே மருமக்கள் வழி மான்யத்தில் நான்காம் மனைவியின் நிலை.
  

திங்கள், 21 ஜனவரி, 2019

தொட்டும் தொடாமல்.

தாலாட்டும் காற்றோடு
தடதடக்கிறது ரயில்.
கொறிக்கக் கொஞ்சம்
புத்தகங்கள் கைவசம்
ஃபில்டர் வாசனையோடு
செம்பழுப்புக் காஃபி பக்கம்.
நீளமான தண்டவாளங்கள்போல்
இணைந்து செல்கிறது உரையாடல்
இறங்கும் ஊர் வந்தபின்னரும்
கூந்தல் சுழலும் கழுத்தோரம்
ஒரு முத்தம் தராத ஏக்கத்தில்
பிரிந்து போகிறது வண்டித் தடம்.
மெல்லிதாய்ப் பிரிந்த வியர்வை வாசம்
ரயிலிலிலிருந்து குதித்திறங்கித்
தொட்டும் தொடாமல்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.
  

செவ்வாய், 1 ஜனவரி, 2019

வாள்களும் பூக்களும்.

பனிபெய்திருக்கும்
பன்னீர்ப் பூக்கள் கொட்டி
வாசனை தெளிக்கும் சாலை உனது.
ரத்தச்சிவப்பில்
காட்டமான குல்மோஹர்கள்
வெகுபிரியம் எனக்கு.
சந்திக்காத சாலைகளின்
வெவ்வேறு முனைகளில்
வந்து சேர்ந்த நம்மை
வெகுவேக வாகனங்கள்
ஒன்றாய் நிறுத்திவைக்கின்றன.
பசுவின் மென்மையாய்ப்
பன்னீர் சிந்தும்
உன் பார்வைப்பூக்களை
என் செவ்வாள் கொண்டு வெட்டுகிறேன்.
ஆயுதபாணியை அடிக்கலாம்
நிராயுதபாணியையுமாவென
உடைந்து விழுகின்றன எனது வாள்கள்.
புதிதாய்ச் சேகரமாகின்றன
அம்மாபெரும் சாலையில்
வாள்களும் பூக்களும்.

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்.

நிலாத்தட்டும் சூரியத்தட்டும்
ஏறி இறங்கித் தாழ்கின்றன.
சிதறிவிழும் நட்சத்திர தானியங்களை அள்ள
அலையை விரித்துப்
பறக்கத் தொடங்குகிறது கடல்
  
Related Posts Plugin for WordPress, Blogger...