எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 ஜனவரி, 2021

போலிப் பொறையுடைமை

இதை வணங்கு
அதை வணங்கு
இந்தக்குழுமத்தில் சேர்
அந்தக்குழுமத்தில் சேர்
அந்தச் சாமியார் கடவுள்
இல்லையில்லை இவரே கடவுள்
நான் சொல்பவர்தான் கடவுள்
நீ வணங்குவது கடவுளல்ல
முடியவில்லை வாதப் பிரதிவாதங்கள்
பேச்சற்று ஓடும் 
மந்தைக் கூட்டமாய்
மனம்புழுங்கியபடி
பின் செல்லுதல்
பொறையுடைமையாமோ
போலித் தெய்வங்களின் பின் 
போலிப்பொறையுடைமையாம். 

  

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

உயரத்தனைய உயர்வு

கானமயிலாடக் 
கண்டிருந்த வான்கோழி
தானும் தோகை விரித்து
ஆடியதாய் எண்ணியது. 
வெள்ளத்தனைய மலர்நீட்டம்
அதுதன் உயரத்தனைய இறகு

வியாழன், 21 ஜனவரி, 2021

உழுதவன் கணக்குப் பார்த்தால்..

பாளமாய் வெடித்து
வாழ்வில்லாத வயல்கள்
அறுவடைக்குமுன்னே
முளைக்கும் நெற்கதிர்கள்
ட்ராக்டர் உழவில்
இழுபடும் பூமி
விளைச்சலின் பலனோ
தரகர்கள் கையில்
உழுதவன் கணக்குப் பார்த்தால்
உழக்கென்ன
உழுதவனே மிஞ்சுவதில்லை.. 


  

செவ்வாய், 12 ஜனவரி, 2021

உள்விகாரம்

எங்கெங்கோ 
ஓடிக்கொண்டிருக்கிறது நதி
தன்னை மட்டும் நாடி
ஓடிவந்ததாய் மகிழ்ந்து கொண்டிருக்கிறது
விருட்சம்
உயரக்கிளைப் பறவைகள்
உண்மையை ஓங்கி உரைக்கின்றன
எதுவும் செவியேறாமல்
வேர்ப்பாசத்தில் மூழ்கிக் கிடக்கிறது விருட்சம்
விருட்சம் கடந்து 
உள்விகாரம் வெடிக்க
சாக்கடை கலந்து
சந்தனமென நினைத்து
நாராசமாய் மணத்துக்
கடல் ஓடுகிறது நதி. 
 
  

திங்கள், 11 ஜனவரி, 2021

தோடு

தோட்டை வீசி இருளில்
நிலவை உண்டாக்குகிறாள்
ஒரு தாய்

நோட்டைப் பார்த்து எப்போதுமே
உறவைத் துண்டாடுகிறார்கள்
சில தாய்கள்.
  

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

கொள்ளுப் பைகள்

துணுக்குகளாய் சிதறிக் 
கிடக்கின்றன ஞாபகங்கள்.
வந்ததும் பார்த்ததும்
வென்றதும் சென்றதும்
சுழலில் சிதறும் நீர்த்துளிகளாய்
இழுத்தும் மூழ்கியும்
நனைத்தும் எடுத்தும்.
முக்காடை எடுக்கிறேன்
முக்குளிக்கவேயில்லை
பிரமையும் கானலும்
கொள்ளுப் பைகளாய் முன்னே. 

வெள்ளி, 8 ஜனவரி, 2021

கூதலும் காந்தலும்

தென்னையிளங்காற்றாடிக்
கசிந்திறங்குகிறது வெய்யில்
வேர்க்காலில் நீர்முடிச்சுகள்
நேற்றுப் பெய்த மழையிருப்பு.
விசிறிக் கொள்கின்றன மட்டைகள்
கூதலையும் காந்தலையும்
வண்ணங்கள் சிதற
தென்னையை வட்டமிட்டு
எழுகிறது ஒரு பட்டாம்பூச்சி. 
  
Related Posts Plugin for WordPress, Blogger...