எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

போ நீ போ

சுவாசமே சுவாசமே என்றும்
உன்னைத்தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டதென்றும்
பாடிக் களித்தவர்கள் இன்று
போ நீ போ
தனியாகத் தவிக்கின்றேன்
துணை வேண்டாம் போ நீ போ
எனப் பாடுகிறார்கள்
கொரோனா காலக் கொடுமைகள்
பாடல்களிலும் பல் பதிக்கின்றன. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

செம்மாந்தல்.

மஞ்சள் இஞ்சி மிளகு
மாமருந்தாகிவிட்டது
சுக்குமி ளகுதி ப்பிலி என்று
கேலி செய்தவர்கள்
கசாயத்தின் பிடியில் காய்ச்சலைக் 
கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரும்
நிலவேம்பும் சுவையற்ற நாக்கில்
கசப்புப் பாயாசங்களாக
வழிந்தோடுகின்றன. 
கோள்களும் கிரகங்களும்
நாட்டை சுத்தமாக்கிவிட்ட மகிழ்ச்சியில்
செம்மாந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

  

சனி, 29 ஆகஸ்ட், 2020

நியாயத் தராசு

நியாயத் தராசு ஏறி இறங்குகிறது
மூச்சுக்கு முன்
மூச்சுக்குப் பின் என.

முள்ளில் இல்லை
தட்டிலும் இல்லை
ஊடாடும் காற்றில்தான் இருக்கிறது
நியாயத்தின் உயிர்த்தல். 
  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அண்ணாரைப் போல..

இந்தக் காலத்தில்
மறைந்தவர்கள்
மனம் கனக்கச் செய்கிறார்கள்.
பட்டினத்தார் பாடலொன்று
கத்தும் நமைப்பார்த்துக்
கணக்கென்ன என்கிறது. 
இன்னொன்றோ
அண்ணாரைப் போலத் 
திரியச் சொல்கிறது..
இரண்டும் கெட்டானாகி
மூன்றாம் உலகு விரிகிறது.


வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நிழல் பிரசவம்

விளக்கிலிருந்து பிறக்கும் தீபம்
மாடத்துள் பிரசவிக்கிறது
மூன்று நிழல் விளக்குகளை..

  

புதன், 26 ஆகஸ்ட், 2020

ஆலமும் காலமும்

தலையிலிருந்து வால்வரை
விழுங்கி விழுங்கி
உயிர்க்கின்றன அரவுக் கிரகங்கள்
விழுங்கும் ஒவ்வொருமுறையும்
வாதாபியாய் வெளிப்படுகிறேன்
எப்போது ஜீரணமாவேனென்பதை
தர்மராஜனே அறிவான்
ஆலமும் காலமும்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கின்றன. 
  

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

நானென்ற ஒன்றா..

ஆயிரம் நிலவை அழைத்தவர்
மூச்சுள்ளும் 
உன்மத்தம் பிடித்தலைகிறது
கிருமி அலை..
அவ்வலை சிந்தும் துளிகளில்
நான் யார் நீ யார்
என்றொரு ஆராய்ச்சி நடக்கிறது
ஒவ்வொரு அலையாய்ப்
பிடிந்தலைந்தும்
குழப்ப முடிச்சுக்கள்
கரையில் தள்ளுகின்றன
யோசித்தும் சுவாசித்தும்
பிழைத்துக் கிடப்பது யார்
நானா  .. நானென்ற ஒன்றா.. 
  

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பயன்..

மூச்சுக் குழலுக்குள் 
முக்குளித்து மூச்செடுக்கிறது.
சாதா காய்ச்சலும் காங்கையும்
சள்ளைப் படுத்துகிறது.
கொடுமை கொடுமை என
கோவிலுக்கும் செல்ல விடுவதில்லை. 
என்னே பயன் எனில்
தனித்தனியாய்க் கிடந்தோரை
தனிமையில் தள்ளுவதுபோல்
குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது 
கொரோனா.
  

புதன், 19 ஆகஸ்ட், 2020

பச்சோந்தி

பச்சோந்திபோல்
உடல்மாறும் கிருமி
மனிதரைத் தாக்க
முள்முடி சுமந்தலைகிறத
கடைசிவிருந்தில்
மூச்சுக் காட்டிக் கொடுக்க 
நுரையீரல்தான்
தீர்ப்புக் கூறும் இடமாகிறது

  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இஞ்சியால் ஆனது உலகு

இஞ்சி சட்னி
இஞ்சித் துவையல்
இஞ்சிப் புளி
இஞ்சி மண்டி
இஞ்சி ரசம்
இஞ்சி சூப்
இஞ்சி ஜூஸ்
இஞ்சிக் குழம்பு
இஞ்சி சாதம்
இஞ்சிக் கொழுக்கட்டை
இஞ்சியால் ஆனது உலகு,
கொரோனாவுக்குப் பின். 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அலையும் கிருமி

நுரையீரலில் புகும் கிருமி
ஊஞ்சல் கட்டி ஆடுகிறது
உயிருடனும் 
உயிர்வாழ்வதற்கான சேமிப்புடனும்.

சுருங்கும் நுரையீரலாய்ச்
சுருங்குகிறது சேமிப்பு.

சறுக்கிவிழுந்து
குதித்தோடுகிறது உயிர்
போராட முடியாமல்.

இன்னொரு ஊஞ்சல் தேடி
விரிந்த தலையோடு 
அலைந்து கொண்டிருக்கிறது கிருமி. 

  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கபசுரம்.

காங்கையா காய்ச்சலா
கழுத்தை வருடிச் செல்கிறது
கபசுரக் குடிநீர்.
  

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

பூக்கும் காதல்.

முற்றிய மரமும்
துளிர்விடுகிறது
வருடந்தோறும் 
பூக்கும் காதலில்.
    

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

உயிரென்பது..

எத்தனை சட்டைகள்
எப்படி உரிந்தன
எங்கே இருக்கிறேன் நான்
உணர்வா சுவாசமா
உயிரென்பது என்ன?
  

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வாசனைப் பரிசு.

குலாவிக் குலாவி
மரங்களைக் கொஞ்சிச்
செல்கிறது காற்று.
குலாவலுக்குப் பரிசாய்
வாசனை முத்தங்களைக் 
கொடுக்கின்றன மரங்கள். 
  

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாலாட்டு.

தாழ்ந்து தலையாட்டும் கிளையைத்
தாயாகத் தாங்கித்
தாலாட்டிச் செல்கிறது நதி. 
  
Related Posts Plugin for WordPress, Blogger...