எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

நிற்றல்

கிளையாட்டிக் கொண்டிருக்கின்றன
தோட்டத்து மரங்கள்
தலையாட்டிப் பார்க்கிறான்
குட்டித் தம்பு.
கழுத்து நின்றதும்
மரம் பார்ப்பதில்லை அவன்
ஆனாலும் தம்போக்கில்
கிளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

  

திங்கள், 28 செப்டம்பர், 2020

வெய்யில் வளையங்கள்

வெய்யில் வளையங்கள்
பூமியின் மீது விழுகின்றன.
அவ்வளையத்துள் நழுவி
உருண்டோடும் பந்தாய் பூமி.
  

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

நிழல் வாழ்வு

நிழல் வார்த்தைகள்
உன் பின்னே 
ஓடி வருகின்றன.
விடியலில் 
உன் மதுக்கோப்பைக்குள்ளும்
இரவில் உன் வாயினுள்ளும் 
குடியிருக்கும் அவை
சாராயம் ஏறுவதுபோல்
சரசரவென ஏறுவதும்
பின் நாற்றத்தோடு வீழ்வதுமாய்
வாழ்கின்றன.
என்னடா இந்த நாறப் பிழைப்பென
அவை நாராசத்திலிருந்து கூவுவதை
ஒருபோதும் சட்டை செய்ததில்லை நீ.
இருந்தும் சொற்கள்
எச்சமாய் விழுந்தும் எழுந்தும்
இருந்தும் இல்லாமலும்
நிழல் வாழ்வில்.


  

வியாழன், 24 செப்டம்பர், 2020

இனிக்கும் வேம்பு

கதவைத் திறந்ததும்
குதூகலிக்கின்றன கிளைகள்
வரவேற்கவும் வழியனுப்பவும்
பூச்சொரிகின்றன
வாலாட்டி அமரும் 
குருவிகளுக்குத் தேனும்
சிலவற்றுக்குக் கொட்டையும்
சிலவற்றுக்குப் பழமும். 
வேம்பும் இனிக்கிறது
எல்லாப் பறவைகளுக்கும். 

  

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நிரம்புதல்

இரை எடுத்த பெருமகிழ்வில்
தொப்பையை அசைத்து
அமர்கின்றன பறவைகள்
வயிற்றை நிரப்பிய குதூகலத்தில்
வாயாடிக் கொண்டிருக்கின்றன கிளைகள். 

  

திங்கள், 21 செப்டம்பர், 2020

ஆமோதிப்பு

சிச்சிலிப்புக் கொட்டித்
திரிகின்றன பறவைகள்
ஆமோதித்துத் தலையாட்டிக் 
கொண்டிருக்கின்றன இலைகள். 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

பறவைப் பார்வை

கடலையும் கட்டிடங்களையும்
அளக்கிறது பறவை
பறவைப் பார்வையால்
அளந்து கொண்டிருக்கிறேன்
இம்மூன்றையும். 

  

சனி, 19 செப்டம்பர், 2020

பூத்தல்

மாறும் மாறும் 
எப்போது மாறும்
ராகு கேது
நாகபாதை விரிக்க
பூர்வஜென்ம
மலர்ச்சோலையில் 
காத்திருக்கிறேன்.
நெளிந்து செல்லும்
நாகங்களுக்கிடை
நழுவி ஓடியும்
மேலே பூக்கிறது ஒரு
நாகலிங்கப் பூ. 

  

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வளையம்

ஏதோ ஒரு பூவின் வாசம்
நிழல் உருவங்கள்
காதுள் கேட்கும் குரல்கள்
கிணற்றுள் மூழ்கும் குடமாய்
நீர் வளைய நினைவுகள்
அடுக்குகளால் ஆனதா உலகம்
அலைந்து அளைந்தும்
நீளும் கைகளைப் பிடிக்கவே முடிவதில்லை
ரீங்காரம் இடுகிறது நீர்
இறங்கிக் கொண்டே இருக்கிறது கயிறு
தட்டுப்படுவதில்லை
தரையும் ஆகாயமும்
தண்ணென்ற குளிர்வில்
பாசம் தின்னும் தலைப்பிரட்டையாய்
நீந்தத் தொடங்குகிறேன். 


  

வியாழன், 17 செப்டம்பர், 2020

உயிருடை

நிலைக்கண்ணாடியில்
அறைக் கதவுகளுக்கிடையில்
வாசல் நடையில்
சாவி துவாரத்தில்
ஆடிச் செல்கிறது ஒரு பிம்பம்
முன்னோர் ஒருவரின்
சாயலும் வாசனையும் கொண்டு
கண்ணோரத்தில் நடமாட்டம்.
விதிர்த்துத் திரும்பும்போதெல்லாம்
விசிறிகள் போல் ஆடுகின்றன
எங்கோ கொடியில் தொங்கும் உடைகள்
உடைகள் கழற்றி உலவும் அவர்களுடன்
உயிருடை கழற்றாமல் உலவுகிறேன் நானும்.
  

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

உண்மை

எத்தனை முறை
நீ பொய்யுரைத்தாலும்
நம்பிவிடுகிறது உள்ளம்.
நீ எது சொன்னாலும்
அது உண்மையாகத்தான்
இருக்கவேண்டும் என
மனதில் செதுக்கிய
எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
இருக்கட்டும் போ
அது உண்மையோ பொய்யோ
நான் உண்மை என்றே நம்பிக்கொள்கிறேன்.
உன் மேல் வைத்த நம்பிக்கைக்காக மட்டுமல்ல
என் மன நிம்மதிக்காகவும்தான். 

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரே உலகம்.

எங்கள் உலகத்தில்
நாங்கள் நால்வர் மட்டுமே
நான் அவர்
இரண்டு சேட்டைக்காரப் பயல்கள்
பின்னொருநாள் மாறியது
மொணமொணத்துக் கொண்டிருந்த
நாங்கள் மட்டுமே
எங்கள் உலகத்தில்.
சேட்டைக்காரன்களுக்கென்று
ஒரு தனி உலகம்.
பின்னும் ஒருநாள்
சேட்டைக்காரன்கள் 
தம் பிள்ளைகளோடும்
பார்யாளோடும் அவர்கள் உலகத்தில் 
குடிபுகுந்தார்கள்.
இப்போது
எங்கள் பெற்றோரின் உலகம்
எங்களின் உலகம்
பிள்ளைகளின் உலகம்
பேரப் பிள்ளைகளின் உலகம்
என்று வேறு வேறாய்க்
குட்டி போட்டது ஒரே உலகம்.

  

புதன், 9 செப்டம்பர், 2020

நூல் வெய்யில்.

பால்கனிச் சுவரோரம்
நீர்க்கற்றையென 
குளிர்ச்சியாகக் கசிகிறது வெய்யில்
வண்ணக் காகிதமாய்
மிதக்கும் பட்டாம்பூச்சியொன்று
நூல்களாய்ப் பிரித்துச் செல்கிறது
அவ்வெய்யிலை. 
  

திங்கள், 7 செப்டம்பர், 2020

உறைவு

புகைப்படத்தில் நாங்கள்
கண்ட அளவிலேயே
உறைந்திருக்கிறது
அந்த நகரமும்.
அதன் பூங்காவும் பூக்களும்
இராட்டினமும் கூட
வாளேந்திய மங்கைகள்
கண்சிமிட்டாமல்
நோக்கியபடியே இருக்கிறார்கள்.
நதியும் படகுகளும்கூட
எங்களுக்காகக் காத்து நிற்கின்றன.
எங்கெங்கிருந்தோ கீறிப் பாயும் 
வெளிச்சமும் கூட
இன்னும் பிரகாசமிழக்கவில்லை.
ஒரு கால் உடைந்த நாற்காலி
அப்படியே நின்றிருக்கிறது.
கண்ணில் காக்கைக் கோடுகளும்
காதோர நரைகளும்
பூக்கத்தொடங்கி இருக்கும்
இந்த இலையுதிர் காலத்தில் 
எங்கள் இளம்பருவமும்
அப்புகைப்படத்தில்
உலைவுறாமல்
உறைந்திருப்பதுதான்
உச்சபட்ச மகிழ்ச்சி.
  

புதன், 2 செப்டம்பர், 2020

சுடர் விடுதல்.

நெடுங்கோட்டைச் சுவரென
நீண்டுகிடக்கிறது
நமக்கிடையான உறவு.
சில முதலைகள் 
உள்நுழைந்து அகழியை
அகழாய்வு செய்கின்றன.
எச்சரிக்கை வீரர்களின்
பாரா ஒலி வேறு அசந்தர்ப்பமாய்.
விடியலுக்குள் நீ வந்து சென்ற கனவை
இருளோடு தேய்த்து
அழித்துவிட நினைக்கிறேன்.
சூரியன் புலரும் பொழுதில்
சுடர்விட்டுத் துலங்கும்
உன் நினைவை என்ன செய்ய. 

  
Related Posts Plugin for WordPress, Blogger...