எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2012

தொடர்பு.

எப்போதும் நீள்கிறது
என் கவிதை..
முடியாத சொற்களோடு
இழுபடும் நம் தொடர்பாய்..

ஞாயிறு, 29 ஜூலை, 2012

வார்த்தைச் சறுக்கு..

வார்த்தைகளில்
சறுக்கு விளையாட்டு.
அபாயமான பள்ளங்களில் ஆழ்த்தி
ஆள் சோர அடிக்கிறது.

வெள்ளி, 27 ஜூலை, 2012

அங்குசம்

யானைக்குக் கவளம்.
கிளிக்கு நெல்மணி.
சங்கிலியும் கூண்டும்.
கட்டுடைத்துப் பாகனைக்
கரியாக்கும் கரி.
நகங்களும் அலகுமிருந்தும்
தத்தி உள்செல்லும் கிளிக்கு
வெட்டுப்பட்ட இறக்கைகள்
முளைப்பதேயில்லை

வியாழன், 26 ஜூலை, 2012

மனக்கோட்டை.

சூளையிலிருந்து வந்து
எந்தக் கோட்டையும் ஆகாமல்
பாழடைந்து கொண்டிருக்கிறது
செங்கல் அடுக்கு.

செவ்வாய், 24 ஜூலை, 2012

காதல் சிம்மம்

நட்புத்தூண் உடைத்து
காதல் சிம்மம் விசுவரூபமெடுக்கிறது
நம்மை வகிர.

திங்கள், 23 ஜூலை, 2012

சாத்தியம்.

முட்டாளைப் போல நடிப்பதையும்
முட்டாள் என ஒத்துக் கொள்வதையும்
சாத்தியமாக்குகிறது காதல்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

விடுவித்தல்..

தாங்கமுடியாமல் வந்து
தாங்கமுடியாமல்
வெளியேறினாய்
விடுவிக்க முடியாமல்
கிடக்கிறது வீடு.

வியாழன், 19 ஜூலை, 2012

வலைகள்..

சென்ற சூரியனையா..
வரும் நிலவையா ..
எதைப் பிடிக்கக் காத்திருக்கின்றன
இந்த வலைகள்..?

செவ்வாய், 17 ஜூலை, 2012

தவழ்தல்..

தங்கக் குழந்தையாய்
தவழ்ந்து செல்கிறது
பூமியின் மடியில் வெய்யில்.

இரவுப் பூக்கள்.

இரவைக் கண்டதும்
வெண்பூக்களை மலர்த்துகின்றன
கரண்டு மரங்கள்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

(சு)வாசம்..

வேகமாய் வந்து
வேகமாய் வெளியேறினாய்
உன் சுவாசம் இன்னும்
அலைகிறது இங்கு.
உன் வாசத்தோடு.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

நடிகர் பாரதி மணி

நடிகர் பாரதி மணி:-
 *********************

எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி ஐயா. தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர்.

அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய,” சில நேரங்களில் சில மனிதர்கள் ” என்ற புத்தகத்தில் அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர்.

இவர் மது தண்டவதே. நேரு., இந்திரா காந்தி.,ராஜீவ் காந்தி., மொரார்ஜி தேசாய்., காந்திபாய் தேசாய் .,ஷேக் ஹஸீனா( பங்களாதேஷின் முன்னாள் அதிபர்) ., அன்னை தெரசா., சுஜாதா., ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பம் பெற்றவர். இவர் நடித்த 13 திரைப்படங்கள் விருது வாங்கி இருக்கின்றன. இலக்கியம்., நாடகம்., கர்நாடக இசை அறிவு., திரைப்படம்., பல அரசியல்தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என பரந்துபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர். பிரபல இயக்குனரின் புது திரைப்படத்துக்காக ஸ்டில்ஸ் போட்டோ செஷனுக்கு சென்று வந்திருந்தார் இவர்..இவரைப் பற்றி இவர் சொன்னவை..

நாகர் கோவில் பக்கத்திலுள்ள பார்வதிபுரம் என் சொந்த ஊர். திருவனந்தபுரத்தில் என் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் வேலை செய்ததால் அங்கே சாலை ஸ்கூலில் படிப்பு அதன் பின் எஸ் எல் பி ஸ்கூலில் 8 ஆவது வரை படிப்பு. அங்கே நீல. பத்மனாபன் என் வகுப்புத் தோழர்.

எஸ் எஸ் எல் சி முடித்த பின் டெல்லி சென்று அங்கே தமக்கை பகவதி வீட்டில் தங்கி பி. காம் ., எம் பி ஏ படித்தேன்

முதன்முதலில் பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். 1955 இல் என் முதல் சம்பளம் 136 ரூபாய் எட்டணா. பின்பு ஸ்டேட் ட்ரேடிங் கார்பரேஷனில் பணி செய்தேன். அதன் பின் இண்டர்னேஷனல் ட்ரேடிங்கில் பணி. லைசன்ஸ் பர்மிட் கோட்டா ராஜ் இருந்ததால் பேப்பர்., செண்ட்;, சீனி., சல்ஃபர் ஆகிய பொருட்களை இறக்குமதி செய்தோம் ஸ்வீடனில் இருந்து .

ஃப்ரான்க்ஃபர்ட்டில் MAN நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் போது 1978 இல் பணியை ராஜினாமா செய்தேன். அப்போது என் சம்பளம் 78,000. ரூபாய்கள்.

க. நா. சு அவர்கள் மகள் ஜமுனா என் வாழ்க்கைத் துணைவி., மகள்கள் இருவர்., ரேவதி., அனுஷா. இருவரும் பெங்களூரிலும் டெல்லியிலும் இருக்கிறார்கள்.

சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என் தந்தையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார். பம்மல் சம்பந்த முதலியார். ., சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி எல்லாம் பேசுவார்கள். என் தந்தை ஹேம்லெட் நாடகத்தை ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக வாசிக்க நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அப்போது அவர்களுக்காக உணவு எடுத்து மாடிக்கு கொண்டு செல்லும் என்னைப் பார்த்து ஒரு நாள் ராஜமாணிக்கம் பிள்ளை சொன்னார் ., இவனை ட்ராமாவில் நடி்க்க வைக்கிறேன் அனுமதி கொடு என்று. என் தந்தை அனுமதித்ததும் எனக்கு இரண்டு மாதங்கள் தான் பள்ளி விடுமுறை என்பதால் சிறு சிறு வேடங்களில் நடிக்க வைத்தார்கள். ,க்ருஷ்ண லீலாவில் க்ருஷ்ணரின் நண்பனாய்., நல்லதங்காளில் 2 வது 3 வது பிள்ளையாய். வேஷம் கொடுத்து நடிக்க வைத்தார்கள்..

இதன் மூலம் எனக்கு டிசிப்ளின் வந்தது. ஆரோக்கியம் வந்தது. ட்ராமா க்ரூப்பில்தான் ஆசனம் எல்லாம் கற்றுக் கொண்டது.

டெல்லிக்கு 1955 இல் போன போது பூரணம் விசுவநாதனை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு நாடக நடிகர் மட்டுமல்ல . நகைச்சுவை ஒரங்க எழுத்தாளரும் கூட.

எம் பி ஏ செய்த பிறகு இப்றாஹீம் அல்காசியிடம் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து மேடை நடிப்பை நன்கு கற்றுக் கொண்டேன். லண்டன் ட்ராமா ஆஃப் ஸ்கூலில் சேர்ந்து வாய்ஸ் மாடுலேஷனை கற்றுக் கொண்டேன்.

தமிழ்ச்சங்கத்துக்கும் மற்றும் ஓரங்க நாடகம். ரேடியோ நாடகம் என 3000 நாடங்கள் நடித்திருக்கிறேன். தி. ஜானகிராமன் டைரக்ட் செய்து இருக்கிறார்.

இ . பா வின் நாடகமான மழை எங்கள் முதல் நாடகம். என் திருமணம் கூட நாடக மேடையில்தான் நடந்தது.

என் மனைவி ஜமுனா எங்கள் நாடகத்தில் நடிக்க அழைத்து வரப்பட்டவர்தான். டெல்லியில் தமிழ் ட்ராமாக்களில் தமிழ் நடிகைகள் கிடைக்க மாட்டார்கள் எனவே ஐஏஎஸ் ஆஃபீசர்களிடம் அனுமதி கேட்டு அவர்களின் மனைவி அல்லது மகளைநடிக்க வைத்தோம். அப்படி நடிக்க வந்தவர்தான் என் மனைவி ஜமுனா.

 ஹைதராபாத்தில் உள்ள எங்கள் ஆல்வின் கம்பெனிக்கு ஜி எம் மாக ப்ரமோஷனில் போகச் சொன்னார் பிர்லா. ட்ராமாவுக்காக டெல்லியிலேயே இருப்பதாக இதை மறுத்து விட்டேன்.

1973 இல் DBNS தக்ஷிண பாரத் நாடக சபாவை நிறுவி அதன் மூலம் நாடகங்கள் நடத்தி வந்தோம். ஔரங்கஜீப்., சந்தி ., மழை., போர்வை போர்த்திய உடல்கள் ., சுஜாதாவின் .”கடவுள் வந்திருந்தார் ”. சி. சுசெல்லப்பாவின் ,”முறைப்பெண்” முக்கியமானவை .

இந்திரா பார்த்தசாரதியின் ,”மழை., போர்வை போர்த்திய உடல்கள்.,” ஆகிய நாடகங்களை சென்னை ஆர் ஆர் சபாவில் நடத்தினோம். கிட்டத்தட்ட 2000 மேடை நாடகங்கள் நடத்தி இருப்போம்.. சகஸ்ரநாமம் எங்களை ஊக்குவித்தார்.

மதுரை நிஜ நாடக இயக்கத்துக்காக முறைப்பெண் நாடகத்தில் நான்., என் மனைவி ஜமுனா., என் பெண் ரேவதி ஆகியோர் நடித்தோம்.

முத்துசாமி போன்ற கூத்துப் பட்டறை ஆட்களெல்லாம் நவீன நாடகத்தை வழங்கி நாடகக் கலையை பொது ஜனத்திடம் இருந்து விலக்கி வைத்து விட்டார்கள்.. ஸ்டைலிஸ்டு ஒரு வெரைட்டி. அதுவே நாடகம் இல்லை. தேர்ட் டைமன்ஷன் ஆஃப் ப்ளே (மூன்றாவது கோணம்) என்பது விஜய் டெண்டுல்கர்., சம்புமித்ரா., திருப்தி மித்ரா நாடங்களில் இருக்கும்.

 1991 இல் என் முதல் படம் பி பி சி எடுத்த எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கியபடம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்., ஜெயபாரதி., ஞானசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த 40 படங்களில் 13 படங்கள் விருது பெற்றவை.. அவற்றில் சில எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன்..

சினிமாவில் நடித்தாலும் சில சீன்களில் கோமாளியாக நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பதில்லை.

கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் கிட்டத்தட்ட 100 ராகங்களுக்கு மேல் கண்டுபிடிக்கத்தெரியும்.இசை விமர்சகர் சுப்புடுவே என் திறமை பார்த்து ஆச்சர்யம் அடைவார்.

என்னுடைய இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் ஒரு அத்யாயமே எழுதலாம். இங்கே தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் என் வீட்டில்தான் தங்குவார்கள்.

இலக்கியத்தில் இ. பா, சுஜாதா ஆகியோருடன் பழகி இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைதான் ஊருக்கு நூறுபேர் என்ற படம்.

முதல் அரிதாரம் பூசியது 1944 இல் . இப்போது சமீபமாக அரிதாரம் பூசியது மார்ச் 6 ஆம் தேதி..

சினிமா மொழி வேறு. நாடக மொழி வேறு. டைரக்டர் லெனின் சொல்வார். என்னையும் சிவாஜியையும் ஒன் டேக் ஆக்டர் என்று.

ஆண்டவன் எல்லா செல்வங்களையும் என் தகுதிக்கு மீறியே அள்ளித் தந்திருக்கிறான். இப்போதைக்கு நல்ல நண்பர்களின் தேடல் தொடர்கிறது. என் புத்தகத்தைப் படித்த தர்மபுரி வாசகர் ஜெயவேல் என்னைப் பார்ப்பதற்காகவே சென்னை வந்து என்னுடன் நாலுமணிநேரம் பேசிக்கொண்டே இருந்தார். இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்..? நான் கொடுத்து வைத்தவன்.


( 1. பாரதி மணி ஐயா உங்களைப் பற்றி நமது வாசகர்களுக்கு சொல்லுங்களேன்.. 2. நாடகத்துறையில் மற்றும் சினிமாத்துறையில் நீங்கள் வந்தது எப்படி..? பாரதி படம் பற்றி சொல்லுங்கள் 3. தில்லி மும்பை போல சென்னையிலும் தியேட்டர்களுக்கு வரவேற்பு இருக்கிறதா.. 4. கூத்துப் பட்டறை., தியேட்டர் என்பவற்றில் பயிற்சி எடுப்பவருக்கு உங்கள் நடிப்பு முன்மாதிரியாய் இருக்கிறதே.. இது எவ்விதம் நிகழ்ந்தது. 5. இலக்கிய இதழ்களில் வெளிவரும் உங்கள் கட்டுரைகள் பொது ஜன ஈர்ப்பு பெற்றுள்ளது.. உங்கள் புத்தகம் சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றி சொல்லுங்கள்.. 6. தில்லி வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.. 7. ஐந்தாண்டு திமுக ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்..? 8. உங்கள் இலக்கிய சிநேகிதர்கள் பற்றியும் அரசியல் சிநேகிதர்கள் ., திரையுலக சிநேகிதர்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.. 9. இலக்கிய வாசிப்பு வாசகனுக்கு எப்படி இருக்க வேண்டும்.. 10. நீங்கள் நடித்த அனைத்து படங்களும் அவார்டு வாங்கி இருக்கின்றனவே.. நீங்கள் நடித்ததால் அவார்டு கிடைக்கிறதா.. அல்லது அவார்டு கிடைக்கும் படமாக பார்த்து நீங்கள் நடிக்கிறீர்களா) இதெல்லாம் நான் கேட்ட கேள்விகள். இதன் மிச்ச பதில்கள்  நேரம் கிடைக்கும்போது பகிர்வேன்.:)

புதன், 4 ஜூலை, 2012

கடவுள் பொருள்.

ஹைட்ரஜனும் ஆக்சிஜனுமாய்க்
கலந்து கிடக்கிறோம்
காதல் நீரோடு நீராய்
கடவுள் பொருளும்
நிறைந்திருக்கிறது நம்மோடு..!

செவ்வாய், 3 ஜூலை, 2012

வரம்

பொறுமையைக்
காணிக்கையாகக் கேட்கும்
நிம்மதியற்ற நேரத்தை
வெறுப்பெனும் உண்டியலில் போட்டுக்
கடந்தாக வேண்டியிருக்கிறது..
நமக்குப் பிடித்த சாமியின்
வரம் கிடைக்க.

நிலவும் நீயும்

இருண்டு கிடந்தது மாலை..
வெள்ளி வெளிச்சம் வந்தது ..
நிலா என்கிறார்கள்.
நீயாகத் தெரிகிறது எனக்கு.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஒற்றைச்சொல்..

ஒற்றைச்சொல்:-
**********************
அடிபட்டு உதிர்ந்த
ஒற்றைச் சொல்
சடலமாகிக் கிடக்கிறது.

சொல்லைப் பெற்றுக்கொண்டவர்கள்
அழத்துவங்குகிறார்கள்
சொற்கள் இழந்து.
Related Posts Plugin for WordPress, Blogger...