எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2016

பேய்ச்சாமி

தினம் செல்லும்
ரயிலின் கூவல் ஓலத்தில்
கவிழ்ந்து கிடக்கிறது
ஒரு செம்பருத்தி.,
ரத்தச் சூல் பெருக.

திருவனந்தலில் கொய்து
கருக்கருவாளில் முடிந்து
பேய்ச்சாமி கொத்தியிருக்க
கையறு நிலையில்
உன்மத்தமாய்ப் பெருகிறது
உப்புவெள்ளம்.

அழகா.

காம்பழகா
மொட்டழகா
கண்விரிக்கும் சூரியன்முன்
நாணிக் கவிழ்கிறது
புதிதாய்ப் பூத்த செடி.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பூதம்.

தனிமையில் தோயும் போதெல்லாம்
அலாவுதீனின் பூதமாய் எழுந்து
என்னைத் தின்னக் கேட்கிறது
உன் நினைவு.




********************************

துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

முதுமையும் நிலவும்.

மிகக் கம்பீரமாகத் திகழ்ந்தவர்களையும்
குழந்தைகளாக்கி விடுகிறது
முதுமை.

***********************************

பகல்கம்பளம் சுருட்டி
இரவுப்பாய் விரித்துக் கொண்டது
நிலவு.

************************************

புற்களுக்கு வியர்வை
பனித்துளி
பூக்களுக்கு வியர்வை
தேன்துளி.

பொய்ச்சவுக்கைகள்.

மறைக்க மறைக்க
முகம் இருளடைந்துவிடுகிறது
பொழுது சாயச் சாய
பொய்ச்சவுக்கைகள் விரித்தாடும்போது
சூரியனும் கீறல்தோற்றத்தோடு.

புதன், 26 அக்டோபர், 2016

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

திரை அசைந்துகொண்டிருக்கிறது
துளசி மணக்கும் உன் நீள்மார்பில்
நானனிந்த பூக்களின் வாசம்.
உறங்குகிறாய் தலைசூடும் உள்ளங்கைகள்
எனைஅழைக்கும் தாமரையாய்.
பிரிந்தறியா நமது கனவொன்றில்
இதழ் இதழாய் இதம் பதமாய்
விளையாடிய சிரிப்பொன்று உதிர்கிறது
ஆண்டவளாய்ப் பிச்சியாய்க் கோதையாய்க்
கோர்த்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்.

சொல் மின்னல்

சொல் மின்னல்

கண்களிலிருந்து கைகளுக்கு
இடம் பெயர்கிறது ஒரு நதி
கவலையாய்க் கூப்பியிருக்கும்போது.
ஒற்றைச் சொல் மின்னலில்
கருணை மழை கிளைவிடலாம்
நம் கரங்களின் சங்கமத்தில்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

குளிர்தல்

உன் பிரியமும் என் பிரியமும்
ஒரு கூழாங்கல்லில்
சந்தித்துக் கொண்டன
நீரோட்டமும் எதிர்நீரோட்டமுமாய்
குழம்பிச் சுருண்ட அது
கூர்மையிழந்து குளிர்ந்திருக்கிறது.

திங்கள், 24 அக்டோபர், 2016

நிலையற்றது.

ஜன்னல் கதவைத்
தட்டிக் கொண்டிருக்கின்றது ஒரு இலை.
திறக்கவோ  மூடவோ
நிலையற்ற தாழ்ப்பாளோடு
காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றது கதவு.

மீட்பில்லாதது.

எவ்வளவு கவிழ்த்தாலும்
ஒரே மாயக் குடுவையில்
திரும்பத் திரும்ப நிரம்பும் யுக்தி
உனக்கேயானது

***************************

ப்ரியத்தைப் போலக் கனமானதும்
சுயவெறுப்பை விளைவிக்கக்கூடியதும்
மீட்பில்லாததும் எதுவுமில்லை.

******************************

முகம்பார்க்கும் கண்ணாடியாய்
தவிர்க்கமுடியாமல்
திராணியற்றுத் திணறுகிறது
எதிர்படும் முகங்களைப்
பிரதிபலிக்கும் முகம்.

**************************

யுக்திகளும் யூகங்களும்
யுத்தங்களும் நிரம்பியவைதான்
யதார்த்தங்கள்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

மனமீனும் பரந்த கடலும்

வார்த்தைக் குடுவைக்குள்
சிக்கித் திரிகிறது
மனமீன்.

முன்பே விடை கொடுத்துவிடுகிறாய்
இன்னின்னதுதான் நடக்குமென்ற யூகத்தில்
தப்புவதில்லை உன் கணிப்பிலிருந்து எதுவும்
நிகழுமுன்பே முடிவெடுக்கத் துவங்குகிறாய்
என்பதில் தெரிகிறது உன் சாணக்யத்தனம்
முடிவற்ற வட்டக் குளத்தின் சிற்றலைகளாய்

ஒரு சம்பவம் நிகழ்கிறது
சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி
வெய்யிலின் அனல் அலையாய் அலைக்கழிக்கிறது
சாக்பீஸ் கோடுகளால் சாலைச் சித்திரம் வரைகிறது.
ஒரு புடவையைக் கயிறாக்குகிறது.
கரிக்கட்டையாய் வேகவைக்கிறது.
ஒரு குளம் சிலந்தி வலைபோல் ஈர்க்கிறது.
உறைந்த ரத்தம் விழி நரம்புகளை முறுக்கேற்றி
வாழ்ந்தபோது சொல்ல இயலாக் கோபத்தைத் தெறிக்கிறது.
ஈனத்தனங்களைச் சமாளிக்கமுடியாமல் சமாதியாகிறார்கள்.
அடையாளச் சாம்பலைச் சுமப்பவர்கள்
வீட்டின் வெளியேயே வைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களை.
தீர்த்தமாடச் செல்பவர்களின் முங்குதலாய்க்
கழுவிவிடுகிறது ஒரு பரந்த கடல் முன்னெச்சங்களை.
கரையேறுகிறார்கள் கரை ஏறமுடியாதவர்களைக்
கரைத்துக் கழித்த கழிவிரக்கத்தில்.
அலை அடித்துக் கிடக்கிறது ஒன்றின்மேல் ஒன்றாய்.


முளைத்தல்.

எத்தகு விதைகளும்
முளைப்பதில்லை
ஒரு மரத்தை வெட்டிய இடத்தில்.

*********************************

மொழிகளை விட்டுப் பிரிவது
எளிதானதல்ல
அதைவிடத் துயரம்
மொழிகளற்ற
விழிகளைப் பிரிவது. 

புதன், 19 அக்டோபர், 2016

புத்தகத் திருவிழா போகலாம். :-


புத்தகத் திருவிழா போகலாம். :-

புத்தகத் திருவிழா போகலாம்
பொம்மைப்படப் புத்தகங்கள் வாங்கலாம்.
புதுப் புதுச் சேதிகள் கற்கலாம்
பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்.

பாட்டி சொன்ன கதைகள் இருக்கும்.

தாத்தா சொன்ன விடுகதை இருக்கும்

அக்கா போட்ட புதிர்க்கணக்கு இருக்கும்

அண்ணன் சொன்ன திகில்ப்படமிருக்கும்.

வாத்துக் கூட்டம் இல்ல நாம
ஒழுங்காய்க் கற்று வாசிக்கும் கூட்டம்
மடுவில் விழும் ஆட்டுமந்தை இல்ல நாம
மந்தம் போக்கும் அறிவுக் கூட்டம்.

நல்ல நல்ல புத்தகங்கள் வாங்குவோம்
நாடு நகரம் மக்கள் பத்தி வாசிப்போம்
நல்வழிப்படுத்தும் விஷயங்களை சுவாசிப்போம். 
புத்தகங்கள் நமக்கு என்றும் நல்ல நண்பனாம்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிவேணி :-

திரிவேணி :-

ஒரு பூவைபோல
உன்னைப் பிரிகின்றேன்.
உன் காலடிமண்ணை முத்தமிட்டபடி.

கம்பீரச் செடியாய் நின்றிருக்கிறாய்
உதிர்ந்த கண்ணிகள்
எண்ணிக் கொண்டு.
.
உன்னடியைச் சுற்றிலும்
என்னைப் போன்ற பூக்கள் கண்டு
நானும் உரமாகிறேன்.

அடுத்து ஒரு பூஜென்மமிருந்தால்
சந்திப்போமெனச்செல்கின்றன
மகரந்தச்சேர்க்கை வண்டுகள்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மொக்கு

விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.

நிழலைக் கூட காலடியில்
அடக்குகுறது உன் ஞாபகத் தகிப்பு.
கசகசக்கும் உன் நினைவின் வாசத்தோடு
கரைகிறது மாலை.

வண்டுகளாய் முத்தமிடுகின்றன
அந்திச்சூரியனை மேகங்கள்.
விரைந்து வீழ்கிறது
தப்பிய முத்தங்களைத்
துரத்திப் பிடித்தபடி இரவு.

தொடர்கிறது உன் ஞாபகம் மட்டும்
சுருளும் இருளுடனும் கூட.
விடியலில் உன்னைப் பூப்பதற்காய்ச்
சூல்கொண்ட தேனுடன்
காத்திருக்கிறது ஒரு மொக்கு

ஓவியக் காதல்

காதலர்களின் கரங்கள் பிரிவதேயில்லை
அவர்களின் காந்தப் பார்வையும்.
நூற்றாண்டுகளாய் நிலைத்தே இருக்கின்றன
கண்காட்சியில் கண்ட ஒரு ஓவியத்தில்.

வியாழன், 6 அக்டோபர், 2016

நினைவு அழிப்பான்.

எச்சரிக்கையாயிருந்தும்
படர்த்துகிறது கருமையை
நினைவு அழிப்பான்.

புதன், 5 அக்டோபர், 2016

எத்தனை எத்தனை..

எத்தனை பொய்கள்

எத்தனை பொய்கள்
சித்தம் பேதலிக்கும்
எத்தனை பொய்கள்.

எத்தனை வார்த்தை
எத்தனை வார்த்தை
அத்தனை குளிர்நஞ்சு
எத்தனை வார்த்தை.

எத்தனை உண்மை
எத்தனை உண்மை
மத்தனை மதியள்
எத்தனை உண்மை

அசை

அசை நல்லது.
அளவுக்கதிகமாய்
நசை மீறும் வரை.


கழிவரல் இனிது
ஒல்காத் துயரில்
உளம் மூழ்கும்வரை.



மடலூர்தல் மிடிமை
மிக்கூறும் மனம்
சாழலில் தாழும் வரை.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

ஆள்காட்டி

பெருங்கனவுகளை
அங்கங்கே ரகசியமாய்ப்
புதைப்பதாய் நினைத்திருக்கிறேன்.
கண்ணி வெடிகளாய்
அசந்தர்ப்பமாய் வெடித்து
ஆள்காட்டிக் கொடுக்கின்றன அவை.

திங்கள், 3 அக்டோபர், 2016

தாயுமான தேவதைகள்

குட்டி அணைப்பினிலும்
கட்டிச் சிரிப்பினிலும்
மந்திரக் கோலில்லாமல்
இளமையாக்குகிறார்கள்
தந்தையை.. மகளெனும்
தாயுமான தேவதைகள்.

க விதை விருட்சம்

ஒரு விதையைப் போல
ரகசியமாய்ப் புதைக்கிறேன்
உன் நினைவை.
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
கியா கியா தாம்பூலம் எனக்
கைவிரித்து மடக்க மடக்க
கவிதை விருட்சமாய்க்
கிளைவிட்டெழும்பிக்
காட்டிக் கொடுத்தேவிடுகிறது
எனக்குள் என்னை.

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

கானகம் தோறும்

தேடித் தேடிக் களைக்கின்றன
இருப்பை வாசிக்கும் குவளைகள்.
உறக்கத்தின் கோட்டை
ஒரு போதும் திறப்பதில்லை.
பிச்சியாக்குகின்றன
பித்தம்தீர்க்கும் அலரிப்பூக்கள்.
உன்மத்தம் அறியாமல்
ஊமையாய்க் கிடக்கின்றன
ஊமத்தைகள்.
தன்னுடலின் சுகந்தம் வீசுவது
தன்மனவெளி மட்டுமே..
உணர்ந்தும் உருத்தேடி
உருவற்றுச் சோர்கிறது
கானகம் தோறும்
ஒற்றைக் கஸ்தூரிமான்.
Related Posts Plugin for WordPress, Blogger...