எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 மார்ச், 2026

இனிய எளிய தலைவர்கள்

இனிய எளிய தலைவர்கள்


காந்தித் தாத்தா வந்தாரு

சத்திய வழியில் நடந்தாரு.

நேரு மாமா வந்தாரு

நல்லாட்சியைத் தந்தாரு .

அண்ணல் அம்பேத்கர் வந்தாரு

சட்டம் ஒழுங்கு செய்தாரு.

கர்மவீரர் வந்தாரு

கல்வியோடு சத்துணவு தந்தாரு.

 

இனிய எளிய தலைவர்கள்

நாட்டை உயர்த்திச் சென்றார்கள்.

சுதந்திரத்தைத் தந்தார்கள்

சுகமாய் வாழச் செய்தார்கள்.

மக்கள் மனதில் நிறைந்தார்கள்

மகத்துவமான மனிததெய்வங்கள்.

இவரை நாமும் போற்றுவோம்

இவரை பின்பற்றி வாழுவோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இயல்பாய்..

நிறுத்து
வெளியேறு என்கிறார்கள்
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மௌனத்தின் சுவர்
அச்சுறுத்துகிறது
பேச்சிழந்தபோதெல்லாம் துயில்கிறேன்
எழுந்ததும் வார்த்தைகளும்
என்னுடன் விழித்துப்
போட்டி போடுகின்றன.
இருவரும் போராடுகிறோம்
ஒருவரை ஒருவர் விட்டுவிட.
சகித்துக் கொண்டு
வாழவும் பழகிவிட்டோம்.
மீளாத்துயில்வரை
என்னையும்
வார்த்தைகளையும்
நீங்களும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளுங்களேன்

வெள்ளி, 16 ஜனவரி, 2026

குளிர்

ஓவியமாய்ச் சமைந்திருக்கிறது
மின்விசிறி
ஆனாலும் குளிர்கிறது

புதன், 31 டிசம்பர், 2025

வீடு சேர்தல்

புத்தக விமர்சனம் வந்திருக்கிறது
ஒரு நாளிதழ் வாங்க வேண்டும் என்றாள்.
இன்றைய நாளிதழா?
இதுதான் பெயரா
என்று கடையிலிருந்து புரட்டியவன்
அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லையே என்றான்.
ஒன்பது ரூபாய்க்கு ஓராயிரம் கேள்வி.
வீடு வந்து சேர்ந்த நாளிதழைப்
புரட்டிப் பார்த்து இதுதான், இதேதான்
அரைப்பக்கம் வந்திருக்கே என்று
சொல்ல நினைத்தவள் மௌனித்தாள்
மனைவி எழுதிய புத்தகம் பேர் தெரிந்தால்தானே
இது அதன் விமர்சனம் என்று தெரியும்
அவரவர் உலகில் அவரவர்.
வீடு சேர்தல்தான் முக்கியம்

செவ்வாய், 2 டிசம்பர், 2025

ரயிலோடும் முன்றில்

பயண ஆரம்பத்தில்
வழியனுப்ப வந்தபோது பார்த்தது.
மேகம் மூடியழவும்
திசைமாறியதில்
எங்கோ காணாமல் போனது.
இருள்பூவாய்ப் பூத்த கண்கள்
தேடிச் சோர்ந்து குவிந்தன.
புலரும் வரை
தேடித் தேடி ஓடித்தேய்ந்த அது
ஏதோ ஒரு திசையில் திரும்பி
எட்டிப் பிடித்தே விட்டது
வெள்ளிப் புன்னகை முகத்தோடு
Related Posts Plugin for WordPress, Blogger...