எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

உச்சிக்கும் பூமிக்கும்..

சூரியக் கனலிலிலிருந்து
பிரிந்து பறக்கின்றன
சாம்பல் மேகங்கள்.

பறவைகள் இங்குமங்குமாய்
விசிறிக் கொண்டிருக்கின்றன 
வெளிறிய வானத்தை

மரக்கிளைகளை முட்டி 
மறைந்துவிடுகிறது 
ஆகாய விமானம்

கழுத்திலும் கண்ணோரத்திலும்
கோடிடும் முதுமைச் சாலையாய்ப்
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன.

பருவத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்
காகபுஜண்டராய்க் கண்காணித்து அலுக்கிறது
உச்சிக்கும் பூமிக்குமாய்ப் புதையும் மனது. 


செவ்வாய், 13 ஜூன், 2023

கடின நெடி

ஒரு உன்மத்தம்தான் உன்னைச் செலுத்துகிறது
ஒன்றை உன் உரிமையானதாய்க் காட்ட.
விழுதைப் போலப் பற்றி இருக்கிறாய்
விழுந்துவிடலாம் என்றாலும்.
நீ பூசிக்கொள்ளும் ஒவ்வொரு சிரிப்பிலும்
வாழ்ந்த கணங்களின் கடின நெடி.
கடக்கின்றவர்க்குப் பழைய கள் என்றாலும்
உன் கரங்களில் எப்போதும் புதிய மொந்தை
மனச்சுரப்பில் நீயாய்ச் சுரந்து நீயாய்ச் சேமித்து
நீயே மாந்தி நீயே மயங்கி
காலங்கள் கடக்கட்டும் உன் சிந்தை மயக்கத்தில்
தெளியலாம் என்றேனும் அன்று 
உன் முன் பாளைகள் வெடித்திருக்கும்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

பெருக்கம்

மஞ்சளும் சந்தனமும்
கொட்டிக்கிடக்கிறது
சொல்கேட்ட கல்யாண விநாயகர் சந்நிதியில்.

பரிட்சை வேண்டுதல்களை ஏற்று
வேல்கொண்டு வினைதீர்க்கக் காத்திருக்கிறார்
நெல்லி மரத்து விநாயகர்

திருமண பந்தத்தில் தானும் மாட்டாமல்
மாட்ட விரும்பாதவரையும் ரட்சித்து
ராம ராம என்கிறார் ஆஞ்சநேயர்

எல்லாரும் எம்மக்கள்தான்
என்கிறாள் சூலத்தோடு அமர்ந்திருக்கும்
காளியம்மா. 

சுற்றி வருகையில் நூறாண்டுகளாய்க்
கொட்டிக்கிடந்த நெல்லி இலைகளும்
சிறுமுட்களும் நெருடுகின்றன பாதத்தை.

கோவில்களுக்குப் பின்
தகரப் பாதுகாப்பில் மறைந்திருக்கிறது
தாமரைக் குளம்

சுற்றிலும் பனையடிக் கருப்பர், 
பதினெட்டாம்படிக் கருப்பர், 108 பிள்ளையாருடன்
புதிதாய் எழுந்தருளி இருக்கிறார் யோக சனீஸ்வரர்.

எங்கள் ஐயாவின் காலத்திலிருந்து
நாங்கள் பல்கிப்பெருகியதைப் போல் 
நெல்லி மரத்தாரும் தன் படை பட்டாளத்தைப் பெருக்கியிருக்கிறார்.

ஐயா உம் அணிவகுப்பு அருமைதான், பெருமைதானெனத்
தினம் வரும் சூரியனோடு சிலாகித்துச்
சுற்றி வந்து மகிழ்ந்து நிறைகிறோம் நாமும். 

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

கண்ணேறு

மஞ்சள் துகில் சரிகிறது
குட்டிச் சூரியன் எட்டிப்பார்க்க
துருவன் திருஷ்டிப் பொட்டிடுகிறான்.

மரங்கள் சாமரம் வீச
பறவைகள் கானம் இசைக்கின்றன
தவழும் சூரியன் ஏந்தி உருள்கிறது பூமி

மேகம்,மலை, மழையில் எல்லாம் சவாரி
வானவில்லிலும் கூட வழுக்கி இறங்குகிறான் சூரியன்
நீர்ச் சாரல்களை வழித்து முகம் துடைக்கிறது காற்று. 

செம்மாந்து நிற்கிறது வானம்
செங்காந்தள் விரல்களால் சூரியனை ஏந்தி
ஆரத்திசுற்றிக் கண்ணேறு கழிக்கிறது இரவு.



வியாழன், 9 மார்ச், 2023

துண்டாடுதல்

தார் ரோட்டில் 
குதித்தோடும் வெய்யிலுக்குக்
கவரி வீசிக்கொண்டிருக்கிறது
சாலையோர மரம்

வெக்கையோடு வீசும் காற்றை
விளாரிக்கொண்டிருக்கிறது
கருவேலம்

முள்ளாய் வெடித்த கம்மாயில்
சூம்பிக்கிடக்கின்றன
வெள்ளரிகள்

பறக்கவோ நிற்கவோ நடக்கவோ
என்ன செய்வதெனத் திகைத்துக்
காலூன்றத் தவித்துக் கொண்டிருக்கின்றன 
பறவைகள்.

வெப்பத்தைக் கக்கி
நீரை உறிஞ்சிக் கருவேலத்தோடு
போட்டி போட்ட சூரியன்
துண்டாய்ப் பிரிந்தோடுகிறது தொலைக்காட்சியில்



 
Related Posts Plugin for WordPress, Blogger...