எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 மே, 2026

சிக்கி முக்கி கல்

சிக்கி முக்கி கல் 


சிக்கி முக்கி கல்லைத் தேய்த்து 

சிறு நெருப்பைக் கண்டுபிடித்தார்.

அரணிக் கட்டை கொண்டு கடைந்து 

யாக வேள்வி செய்து வைத்தார் 


தீக்குச்சியில் மருந்தை அடைத்து 

நெருப்பை அதில் ஒளித்து வைத்தார் 

உரசும் போது உயிர் பெற்று 

ஒளிரும் அந்தத் தீக்குச்சி


விறகை கொண்டு மண் அடுப்பினிலே

விதம் விதமாய்ச் சமையல் செய்தார் 

சுருட்டைத் தூளும் சிராய்த்தூளும் 

சுள்ளிகளும் கொண்டு அடுப்பெரித்தார். 


குமுட்டி அடுப்பு கோட்டை அடுப்பு

கரி அடுப்பு  இரும்பு அடுப்பு 

ரம்பத்தூள் அடுப்பு  தவிட்டு அடுப்பு 

மண்ணெண்ணெய் அடுப்பு, சாணவாயு அடுப்பு,


எரிவாயு அடுப்பு மின்சார அடுப்பு

சூரிய அடுப்பு தூண்டல் அடுப்பு

எத்தனை அடுப்பு எத்தனை சமையல்

இத்தனையும் ஒரு சாண் வயிறு நிரப்ப.


சுடுகாற்றலை கொண்டு சமைக்கின்றார்

எரிவாயு கொண்டு சமைக்கின்றார் 

மின்சாரம் கொண்டு சமைக்கின்றார்

சமைத்து சமைத்து உண்கின்றார். 


உணவைச் சமைத்து உண்ணும் மனிதரே

மனதை செம்மையாய்ச் சமைத்து வாழுங்கள்

உணவைப் பகிர்ந்து உண்ணக் கொடுத்து

மனிதம் போற்றி மகிழுங்கள்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

இனிப்பு ஈ..

விரட்ட விரட்ட ஈயைப் போலவே
சுற்றுகிறது உன் நினைவு..
என்னை இனிப்பாக்கி..

வியாழன், 2 ஏப்ரல், 2026

கார்மேகம்

கார்மேகம்

 

கார்மேகம் வந்தது

கனத்த மழை பெய்யுது.

 

நீர்நூலைச் சேர்த்து சேர்த்து

அருவி நெசவு செய்யுது.

 

ஓடைத்துண்டாய் விழுகுது

நதிச்சேலையாய் நெளியுது.

 

அனைத்தும் ஓடி ஓடிவந்து

நீலக்கடலில் கலக்குது.

 

நீர்மேல் சூரியன் உலவுது

கதிரில் வெப்பம் பரவுது .

 

ஆவியாகி நீர் எழும்புது

மேலே கொஞ்சம் செல்லுது

 

கருத்த யானை உருக்கொண்டு

கார்மேகம் ஆகுது


மீண்டும் மழை பெய்யுது

இதுவே இயற்கை சுழற்சியாம்


திங்கள், 2 மார்ச், 2026

இனிய எளிய தலைவர்கள்

இனிய எளிய தலைவர்கள்


காந்தித் தாத்தா வந்தாரு

சத்திய வழியில் நடந்தாரு.

நேரு மாமா வந்தாரு

நல்லாட்சியைத் தந்தாரு .

அண்ணல் அம்பேத்கர் வந்தாரு

சட்டம் ஒழுங்கு செய்தாரு.

கர்மவீரர் வந்தாரு

கல்வியோடு சத்துணவு தந்தாரு.

 

இனிய எளிய தலைவர்கள்

நாட்டை உயர்த்திச் சென்றார்கள்.

சுதந்திரத்தைத் தந்தார்கள்

சுகமாய் வாழச் செய்தார்கள்.

மக்கள் மனதில் நிறைந்தார்கள்

மகத்துவமான மனிததெய்வங்கள்.

இவரை நாமும் போற்றுவோம்

இவரை பின்பற்றி வாழுவோம்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இயல்பாய்..

நிறுத்து
வெளியேறு என்கிறார்கள்
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மௌனத்தின் சுவர்
அச்சுறுத்துகிறது
பேச்சிழந்தபோதெல்லாம் துயில்கிறேன்
எழுந்ததும் வார்த்தைகளும்
என்னுடன் விழித்துப்
போட்டி போடுகின்றன.
இருவரும் போராடுகிறோம்
ஒருவரை ஒருவர் விட்டுவிட.
சகித்துக் கொண்டு
வாழவும் பழகிவிட்டோம்.
மீளாத்துயில்வரை
என்னையும்
வார்த்தைகளையும்
நீங்களும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளுங்களேன்
Related Posts Plugin for WordPress, Blogger...