எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2015

நானும் உமா மகேசும்.



மாட்டிக்கொள்வேனோ :-’

கவிதையென்றால்
எத்தனை பவுனில் இருக்கும்
எனக் கேட்கும் நகைப்பிசாசுகளிடம்
மாட்டிக்கொள்வேனோ.

கவிதையென்றால்
பாலியெஸ்டரா ஜியார்ஜெட்டா
எனக் கேட்கும் துணிக்கிறுக்குகளிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
எந்தத் தியேட்டரில்
நடக்கிறது எனக்கேட்கும்
சினிமாப் பைத்தியங்களிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
கணக்கில் பௌதீகத்தில்வரும் டிரைவேஷனா
எனக்கேட்கும் புழுக்களிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
புதுவகைக் கம்ப்யூட்டரா
எனக் கேட்கும்
இயந்திரக் கிறுக்களிடம்
மாட்டிக் கொள்வேனோ

    ```````

உமா மகேஸ். 

மாட்டிக் கொள்ள
மாட்டாய் ! மாட்டாய் !

கவிதையென்றால் உன்
கண்ணிலிருந்து சில கணங்களில்
தெறித்து விழும்
கனவுத் துணுக்கா என்றும்

கவிதையென்றால்
வானம் வயதானதும் விடும்
நட்சத்திரப் பெருமூச்சா
என்றும்

கவிதையென்றால்
பூக்களுக்கு நீ சூட்டிய
இன்னொரு பெயரா என்றும்

கவிதையென்றால்
காகிதத்தைக் கருக்காமல்
காற்றுப்பட்டு அணையாமல்
கனலும் நெருப்பா என்றும்

கவிதையென்றால்
பிஞ்சுக் குழந்தை
தடுக்கித் தவித்து எழுதும்
முதல் அ வா என்றும்

கவிதையென்றால்
எழுதுவோரிடமிருந்து
படிப்போர்க்குத் தொற்றும்
சந்தோஷ ஜுரமா என்றும்

கேள்வி மலர்த்தும்
உதடுகள் உள்ளவரை
கவிதைக்கு அடையாளம் தேடி
விளம்பரம் கொடுக்கும்
மனிதர்களிடம் நீ
மாட்டிக் கொள்ள
மாட்டவே மாட்டாய். !

PLEASE DON’T WORRY.


சனி, 30 மே, 2015

நிம்மதியின்மை:-



நிம்மதியின்மை:-

மஞ்சள் முடியைச் சுமந்து
இளமைக் கனவுகளைப் பொதித்துக்
குச்சியாய்ச் செத்துக்கிடக்கும்
பயிர்ப்பிணங்களைப் பார்க்கையில்

பயிர்த்தாடியை அரையுங்குறையுமாய்ப்
பிடுங்கி எறிந்துவிட்டு
வலிதாளாமல் முகம் விகாரமாய்
படுத்துப் புரளும் வயல்மனிதர்கள்.

ஞாபகம் பிடுங்கப்பட்ட வயோதிகமாய்
சாக்லெட் தின்றுவிட்டுக் கசக்கிப்போட்ட
ஜிகினாக்காகிதமாய்
சுளையெடுக்கப்பட்டுப் பிய்த்துப்
போடப்பட்ட தோலாய்
அரைகுறையாய்ப்
பிரசவித்த தாயாய் இருக்கும்
அந்தக் கட்டம் கட்டிக் கொண்ட
மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம்
நிம்மதியின்மை.

ஒரே சமயத்தில் ஓராயிரம் பிள்ளை
பெற்று அத்தனையையும்
அப்படியே அரிவாளுக்கு
வாரிக்கொடுக்கும் தியாகத்தாய்..

அப்போதெல்லாம் பார்வையை
மறைப்பது கண்ணீர்த் திரைகளல்ல
இரத்தக் கலங்கல்கள்.

இந்தத்தாய் கருத்தரித்துப்
பிரஸவிக்கும் குழந்தைகள்
கண் எதிரே பச்சைமண்களாகவே
பிடுங்கி எறியப்பட்டபின்னும்
இவர்கள் கருத்தரிப்பது
எதற்காக இழப்பதற்கா

இன்றைக்கு இந்தப்
பேனா நோயாளிகளுக்கும்
உபாதை பொறுக்கவில்லை.
நிப் முனை வாயால்
இங்க் வாந்தி எடுத்துக்
கொண்டேயிருக்கின்றார்கள்.

இந்த நிம்மதியின்மை
வாந்திகளை எதில் ஏந்தமுடியும்
இந்தப் பேப்பர் பேசின்களில்தானோ

-- 1985 aam varuda diary

வெள்ளி, 29 மே, 2015

பழசு.:-



பழசு.:-

செத்துப் போன பாம்பைத்
தட்டச்சாய் அடிக்காதே
பிறகு அது
உன் மேலும் என் மேலும்
சதைச்சேறு வீசும்

ஊராரின் பற்கள் அவலுடன்
அதில் கிடக்கலாம்
நம் முன்னோர்களை சந்தியில்
நிறுத்தக்கூடிய
ஆதார எலும்புகள் கிடைக்கலாம்
செத்த பாம்பைத் தூரப்போடு
தட்டச்சாய் அடிக்காதே

உன் சரித்திரமும்
என் சரித்திரமும் அம்பலமாகும்
மூன்றுகோடிப் பற்கள்
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்

செத்த பாம்பைப் புதைத்துப்போடு
அது தானாகத்
தோலுரிக்காது.
சதைச்சேறும் அடிக்காது.

--1985 diary

வியாழன், 28 மே, 2015

இது ஒரு கோழியின் கொக்கரக்கோ:-



இது ஒரு கோழியின் கொக்கரக்கோ:-

இது ஒரு சாகித்ய சங்கீதம்
இது இசைக்கப்படுவது
இளநெஞ்சங்களின் பொன்மஞ்சங்களில்

இது ஒரு நேர்முக வர்ணனை
இது கூறப்படுவது
குட்டை மரங்களின் குறுநிழலில்

இது ஒரு சதங்கை ஒலி
இது குலுங்கி எழுவது
குமரிகளின் வாயசைப்பில்

இது ஒரு பொன்மலர்
இது பூத்து வருவது
இறைவனின் கையணைப்பில்

இது இரு கவிதை வெள்ளம்
இது பொங்கி வருவது
தமிழ்த் தாயின் அரவணைப்பால்

தமிழ் அன்னைக்கு அடியவளின் வணக்கங்கள்.!
இது ஒரு கோழியின் கொக்கரக்கோ.!
தன்னம்பிக்கையை முன்நம்பிக்கையாய்
முதல்நம்பிக்கையாய்க் கொண்ட
கோழியின் கொக்கரக்கோ.

இந்த நம்பிக்கையை
அளித்து வளர்த்த
ஃபாத்திமா அன்னைக்கு வணங்கங்கள்.

எங்கள் காலேஜ் ஓரங்கள்
சமுத்திர தீரங்கள்
ஹாஸ்டல் பகுதிகளே
கான்கிரீட் கப்பல்கள்
எங்கள் முதல்வர் அவர்கள் காப்டன்
வார்டனே உதவி காப்டன்.
சிஸ்டர்களே இதன் மாலுமிகள்

இதில் 3 வருடம் மட்டுமே
பயணிக்கும் பேறு பெற்றவர்கள்
இந்த மாணவச் செல்லங்கள்.
பயணியர்க்காகத் தம் உழைப்பைக்
கொடுக்கும் உண்மை ஊழியத் தொண்டர்கள்
எங்கள் அட்டெண்டர்கள்
இவர்களை அலைகளால்
அசைக்க முடியுமோ ?
இவர்களைக் கவலையலைகளால்
அசைக்க முடியுமோ ?
நேர்வழியில் செலுத்தும் காப்டன்களும்
மாலுமிகளும் இருக்கும் வரை
இவர்களைத் திசைதிருப்ப முடியுமோ?
இது வாழ்க்கையின் கவலை அலைகள்
எட்டாத எட்டமுடியாத இன்பத்தீவு !
இதில் பயணிப்பவரில் சிலர் மட்டும்
சிலர் மட்டுமே
பாதிதூரம் பயணங்களிலேயே அந்தரத்தில்
கைவிட்டாற்போலத் திருமணப் படகு
கிடைத்தவுடன் குதித்துவிடுகிறார்கள்

ஹாஸ்டலோரத்தில் இரயில் பாதை
பாதையின் குறுக்குக் கட்டைகள்
போலத்தான் நாங்களும்
அடுத்த வருட முடிவில் நாங்களும்
இந்தப் பரவஸமூட்டும்
இரயில் சிநேகிதியை விட்டுப்
பிரிய வேண்டுமென
நினைக்கையிலே ஊதல் ஓசையுடன்
உள்ளே புகும் இரயிலின்
நினைவுவந்து நெஞ்சில்
தடம் இடுகின்றது.
பத்துக் கவுரவர்களின்
ஆயிரம் பிள்ளைகள் போல்
எத்தனை மரங்கள்
பனை தென்னை மரங்கள்
அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலில்
தலையை வளர்த்திருக்கும் மரங்கள்
பரிட்சை சமயங்களில்
கெபியைச் சுற்றித்தான்
எத்தனை மனன முணுமுணுப்புகள்
அதனால்தானோ என்னவோ
கெபி இருக்கும் மலையில்
அத்தனை வெடிப்புகள்
எத்தனை பிளவுகள்.

எங்கள் கப்பலிலே ஏழுவகைப் பாகங்கள்.
முதல் வருடத்தின்
முத்துக்குளிப்பு MARY’S OWN இல்
முதிர்ந்தவரின் முணுமுணுப்பு MADONA வில்
மூன்றடுக்கின் உயரக் கர்வத்தில் LORETTO
மௌனத்தவத்தின் உச்சியில் ANNOUNCIATA.
இரைச்சல்கள் இறைந்து கிடக்கும் DINING HALL
தினமும் ஒருவராவது முணகிக்கொண்டிருக்கும் SICK ROOM.
இறைவன் தியானிப்பில் இனிய CONVENT.

இந்தக் கப்பல் (HOSTEL) கப்பல்
கடல் அலைகளில் மிதக்கவில்லை.
அது தன்னம்பிக்கை அலைகளில்
அல்லவா மிதக்கிறது.

இது தன்னைத் தள்ளாட வைக்க விரும்பும்
சோம்பேறி மூர்க்க அலைகளைத்
தள்ளாட வைத்துவிடும்.
மூர்க்க அடி கொடுத்துவிடும்.

இது உறுதியானது.
இது நிலையானது.
இதன் பயணத்தின் சுவையை
எம்மைத்தவிர யாராலும்
உணரமுடியாது என்பதால்
கர்வப்படுகிறோம்.

இது மாலைநேரக் கோழியின்
குறுகுறுத்த கூவல் அல்ல
இது சாம்பல்போர்வையை
விலக்கி வரும் வெற்றிச்சூரியனை
வரவேற்க ஒரு அசட்டுத்
தைரியத்துடன் புறப்பிட்டு
விழிப்புக்கொண்டு காத்திருக்கும்
ஃபாத்திமாவின் ஹாஸ்டல்
கோழியின் கொக்கரக்கோ.

-- 1985 diary 

Related Posts Plugin for WordPress, Blogger...