எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 டிசம்பர், 2018

அந்தகாரத்தில் சாமி.

இருண்மையான உலகத்துள்
அடைத்து வைத்திருக்கிறோம்
எமது ஈசன்களை.
நாம் தரும் சிறுவெளிச்சமே
போதுமானதென்று நினைக்கிறோம்.
உணவுப் பொருட்களைக் கொட்டி
அபிஷேகமென்கிறோம்.
விட்டுப் போனவற்றை
யாக குண்டத்திலும்.
பூக்கள் மேல் பூக்கள் சாற்றி
மூச்சுத் திணற அடிக்கிறோம்.
களிம்பு பீடம் சுற்றுகின்றன
கரப்பான்கள்.
பணக்காரச் சாமியென்று
வைர க்ரீடம் ஏற்றுகிறோம்.
உண்டியல் கொள்ளாப் பணத்துடன்
மேலெறியப்பட்ட கோரிக்கைகளை
கவனம் கொண்டு மோனத்திலாழ்ந்து
அந்தகாரத்தில் தனித்திருக்கிறார் சாமி.
  

வியாழன், 27 டிசம்பர், 2018

செந்நிறச் சர்ப்பம்.

பசுமை தோய்ந்த மலையில்
ஒரு நீலப்பூ பூத்திருக்கிறது.
மஞ்சள் பறவை ஒன்று
சிகப்பு அலகில்
வெள்ளை மகரந்தம்
தோயப் பறக்கிறது.
அரக்கு மலையில்
சாம்பல் நிறச் சாலைகள்
வழிந்து விழுகின்றன.
வானவில் வண்ணங்களில்
கொழுப்பு சுமந்த இறைச்சிகள்
திமில்களுடனும் குளம்புகளுடனும்
அசைந்தோடுகின்றன.
பருந்துப் பார்வையில்
செந்நிறச் சர்ப்பமொன்றைத்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்.
சீறித்தப்பிக்க விரும்பா அதுவும்
உன்னைச் சுற்றத் தொடங்குகிறது.
  

தீபாவளி.

எட்டுமணிப் பட்டாசுக் கூச்சலில்
நிரம்பிக் கிடக்கின்றன தெருக்கள்.
பட்சணக் கடைகளைவிட
பிரியாணிக் கடைகள் அதிகம்.
பாப்ளின் பாவாடைகளும்
ஜப்லா ஜாக்கெட்டுகளும்
டார்பாலின் கீழ் உருவமாய் அசைகின்றன.
நகரும் வெளிச்ச முகத்தோடு நடனமாடுகின்றன
அங்காடிகளும் காவல் ஊர்திகளும்.
குஸ்கா தேக்ஸாக்களோடு
குடைக்கம்பி பிடித்துக் காத்திருக்கிறார்கள் வியாபாரிகள்.
நாலு பேருக்கு நல்லது செய்ய
நமனிடம் பிணையாகியிருக்கிறான் நரகாசுரன்.
தெறித்துத் தெறித்துப் பயமுறுத்தும்
மழைக்குமுன் தீபாவளி வந்துவிடுதல் நலம்.

புதன், 19 டிசம்பர், 2018

ஒரு துளிப் புல்.

பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
தவழ்ந்து கிடக்கும் அம்மலை.
எங்கும் ஏதும் நிற்கவோ நடக்கவோ
கிடக்கவோ இடமில்லை அதன் மீது.
வழு வழுத் திட்பமாய்
காற்றைக் கூடத் தள்ளி விடுகிறது அது.
வெய்யில் மழை வேண்டா விருந்தாளிகள்.
பனி அணைத்த விடியலில் ஈரம் மினுமினுக்கும்.
எதன்மீதும் அதற்கு வெறுப்பில்லை
எதிர்ப்பில்லை பொருட்டில்லையெனினும்
அதனைப் பொருட்படுத்தி அண்டி
இடுவலான ஈரத்தில்
உயிரைப் பிடித்துப்
பிணைந்தாடிக் கொண்டிருக்கிறது
ஒரு துளிப் புல்.
  

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

நிரம்பித் ததும்பும் கானகம்.

அதிகம் பேசாதேயென்கிறாய்
பேச்சைத் தவிர என்னிடம்
வேறு நூலேணியில்லை.
அதைப் பிடித்து என் உப்பரிகையில்
நுழைந்த ராஜகுமாரன் நீ.
உள் நுழைந்ததும்
சுருட்டி வைத்துவிட்டாய்
எனதான ஏணிகளை.
அந்தப்புரத் திரைச்சீலைகள்
குளிர்ந்து கிடக்கின்றன.
என் மாடமாளிகையும்
கூடகோபுரமும் வெய்யில்படாமல்
இறுகிக் கருகி.
எங்கோ தூரத்து அகழியில்
முதலைச் சத்தம்.
காற்று மரங்கள் வழி
பழ வாசனையைக் கொணர்கிறது.
ஒளித்துவைத்த நூலேணியின்
ஒரு இழையாவது தேடுகிறேன்.
பசி தீர்க்கப் பழமரம் அழைக்கிறது.
பேச்சற்ற போதில் பறக்கவோ
குதிக்கவோ தயாராகிறேன்.
கடும்பசியில் இருக்கும்
முதலைக்கு உணவாகிறேன்
அல்லது கானகம் பார்த்துவருகிறேன்.
சிறிது வெய்யில் வேண்டுமெனக்கு.
தூக்கி வீசிவிடு என்னை நூலேணியோடு.
என் சில்வண்டுக்குரல்களால்
நிரம்பித் ததும்பட்டும் கானகம்.
  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

கீறல்கள் நாவலில் வேதமணி வாத்தியார் பாத்திர உருவாக்கத்திற்கான நோக்கம் :-

முன்னுரை :- வேதமணி வாத்தியார் கீறல்கள் நாவலில் படைக்கப்பட்ட நோக்கமே ஒரு மனிதனின் உபகார குணத்தையும், கிறித்துவக் கம்யூனிசத்தையும் விளக்குவதற்காகத்தான். மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வூட்டவும் பயன்படுத்துகின்றார்.

“ பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னயப் பெத்தா இளநீரு “ என்ற வரிகளைப் போலப் பிள்ளைகள் கூடப் பெற்றோருக்கு உதவாத நிலையில் வேதமணி வாத்தியார் ஊசியிலிருந்து கப்பல் வரையிலான எல்லாப் பொருள்களையும் கொடுத்து உதவுகின்றார்.

“துன்பங்களின் சுயதரிசனங்களில்
துணைகளும் மாரீசமான்களே “ என்ற புதுக்கவிதைப்படி இல்லாமல் வேதமணி வாத்தியார்  உபகார சிந்தையுள்ளவராக, ஒவ்வொரு நேரமும் நொடித்துவிடும் இரட்டை மாட்டு வண்டியை, மாட்டைத் ( முத்தையா குடும்பத்தை ) தூக்கிவிடும் உபகாரராகவே உருவாக்கப்பட்டுள்ளார். அவர் இந்நாவலில் உருவாக்கப்பட்ட நோக்கத்தைச் சிறிது இவண் ஆராய்வோம்.

பொருளுரை:- முத்தையாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். அதன் வீழ்ச்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் அருகிருந்து ஆறுதல் அளிக்கும் ஆதர்ஷ புருஷனாக வேதமணி வாத்தியார் சித்தரிக்கப்படுகின்றார்.

பாத்திர உருவாக்கத்திற்கான காரணம். :-

ஆசிரியர் தாம் கூறும் முறைப்படிப் பார்த்தால், செல்லையா பொது நலத்திற்கும், துரை சுயநலத்திற்கும் பலியான பின்பு, எஞ்சியிருக்கும் இரு பெண் மகவும் பாரமான பின்பு, முத்தையாவைச் சரிப்படுத்த, ஆறுதலளிக்க ஒரு ஆள் தேவை. அது சாமுவேல் நாட்டையாரால் இயலாது என நினைத்திருக்கலாம் ஆசிரியர். மேலும் வேதமணியும், முத்தையாவும் நெருங்கிய நண்பர்கள். வேதமணியின் வாதத்தைக் கேட்டுத்தான் முத்தையாவே தன் மூத்த மகனின் கொள்கையில் நம்பிக்கை வைக்கின்றார். அவனை ஏற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்.

கிறித்துவக் கம்யூனிசம் :-

வேதமணியின் கிறித்துவக் கம்யூனிசக் கொள்கைகள் சிறப்பானவை. இக்கதையில் கிறித்தவத்தையும், சமுதாயத்தையும் இணைத்து ஒன்றாக்கி கிறித்துவ கம்யூனிசச் சமுதாயமாக மாற்றினால் நலம் பயக்கும் என்பதை விளக்கவும், கம்யூனிசம் கிறித்தவத்திற்கு எதிரி அல்ல என்பதை விளக்கவும், இவரின் பாத்திரம் பயன்படுகின்றது.

ஆசிரியரின் ஒரு பாகம் :-

மேலும் இப்பாத்திரம் ஆசிரியர் தன்னில் ஒரு பகுதியை விளக்கப் படைத்தது போலவும் தோன்றுகிறது. இவர் தம் முன்னுரையில் கிறித்துவத்துக்குக் கம்யூனிசம் எதிரி அல்ல என்று கூறுவதன் மூலம் மேலும் கிறித்துவக் கம்யூனிசம் கொண்ட ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை இவர் தன் நாவலில் பல இடங்களில் குறிப்பிடுவதன் மூலமும், வேதமணி, சாமுவேல், செல்லப்பா ஆகிய மூவர் மூலமும் இக்கருத்துத் தெற்றென விளங்குகின்றது.

பல இடங்களில் முத்தையாவுக்கு ஆறுதல் கூறுமிடங்களிலும் ஹார்லிக்ஸ் அமிர்தாஞ்சன் குப்பி முதல் பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது வரையிலும் இவர் முன்னின்று செய்வது,  நொடித்துப் போன குடும்பத்திற்கு இவர் முன்னின்று முதுகெலும்பாக உதவுவது, புலவர்கள் தாம் புகழ்ந்து பாடும் வள்ளல் வறுமையுற்றவனாய் ஆனாலும் பெருஞ்செல்வம் படைத்த உலோபியிடம் செல்லாமல் வறுமையுற்ற அள்ளி வழங்கும் வள்ளல் குணத்தை உடையவனிடமே வருவார்களாம். அதுபோல் உள்ளது.

விழிப்புணர்வுத் தூண்டல்:-

விழிப்புணர்வைத் தூண்டவும் இவரின் பாத்திரம் பயன்படுகின்றது. ஆசிரியர் தான் புகுத்த நினைக்கும் விழிப்புணர்வை வேதமணியின் சிந்தனை ஓட்டங்களிலும், சொல்வன்மையிலும் வெளிக் கொணருகின்றார். கம்யூனிசம் மதத்துக்கு எதிரானது அல்ல என்பதை அப்பாவிடம் ( வாசகர்களிடம் ) வலியுறுத்துவதும், அடிமை மக்கள் தங்கள் அடிமைப்படுத்தப்படுகின்றோம் என்பதை உணர்ந்து , திருந்தி, அடிமைப்படுத்துபவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றார்.

முடிவுரை:-


இவ்வாறு வேதமணி கீறல்கள் நாவலில் ஆலோசகராக, உபகாரராக, புதிய சிந்தனை ஓட்டங்களின் புதல்வராக, அகிம்சாவாதியாய, அமைதி வழியில் ஆணவத்தை ஒடுக்க விரும்பும் மிதவாதியாக, மதத்தையும், சமுதாயத்தையும் இணைக்க ஒரு கருவியாக, பழமையையும் புதுமையையும் சரிப்படுத்த ஒரு பாலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றார். அவர் இவ்வாறு உருவாக்கப்பட்டது இந்நூலில் ஆசிரியர் தான் கூற விரும்பிய எண்ணவோட்டங்களைப் பிரதிபலிக்க, தான் கூற விரும்பிய கருத்துக்களைத் தெளிவான, அமைதியான முறையில் விவரிக்க, ஆசிரியரான வேதமணியைப் பயன்படுத்தியுள்ளார். 

சனி, 1 டிசம்பர், 2018

டீச் பண்ணுகிறார்களா அன்றி டீஸ் செய்கிறாயா :)

19. 6.85.

அன்பிற்கினிய மதூ,

நலம். நலமறிந்த மகிழ்வு. நாளும் நலங்களே விளையட்டும். !

முகமறியா நட்பாய் முகிழ்த்து, வேர்க்கால் பரப்பிய ஸ்நேகக் கைகுலுக்கலில் குடும்ப உறவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி தோழீ !.

வண்ணப் பூக்களோடும், பிஞ்சு மழலைகளோடும் எனக்கும் நிறைய பரிச்சயமுண்டு – உன்னைப் போல் !. என் வீட்டில் குடியிருக்கும் ஆசிரியர் ஒருவரின் சின்னப் பெண் அருணா – ஒன்றரை வயது – அவளோடுதான் என் பொழுதுபோக்கு. செல்லமாய் ’ஜிக்கு’.  

முத்தக்காவை நான் கேட்டதாகச் சொல்லேன் ! அவர்கள் என்ன டிகிரி முடித்துவிட்டு வீட்டிலுள்ளார்களா ? அவர்களின் திருமணம் எப்போது ? இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? ( வற்றல் மிளகாய் காய வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ) வீடு முழுக்க பிள்ளைகள் மயமாய் வீற்றிருப்பாய். காலப் பறவையும் கடிதே சிறகை அசைத்துப் போகும். !

டைப் ரைட்டிங் ஹையர் எக்ஸாம் எழுதப் போகிறாய். தம்பிகளிருவரும் லோயரா ? இன்ஸ்டிட்யூட் பேர் என்ன ? இன்ஸ்ட்ரக்டர் எப்படி ? நன்றாக டீச் பண்ணுகிறார்களா ? அன்றி நீ டீஸ் செய்கிறாயா ?

ஹிந்தி வகுப்பு எப்போதிருந்து ஆரம்பம் ? வீணை கத்துக்க வேண்டியதுதானே ? நான் கூட வயலின் கத்துக்கலாமென்று யோசிப்பில் ! ஆனால் டைம்தான் போதமாட்டேங்குது. ஷார்ட் ஹேண்ட் க்ளாஸ், எம் ஏ ந்னு நேரம் அதுக்கே சரியா போறது.

உனக்கென்னப்பா ! ஜாலியா வீட்ல உட்கார்ந்து புஸ்தகத்தைப் புரட்டியபடி, கவிதை எழுதிட்டு, ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் லெட்டர் போட்டுட்டு, ஃப்ரீயா இருப்பே ! பொழுது போக்குறதுக்கு குட்டிங்களும் முத்துவைப் போன்ற ஸிஸ்டர்ஸும்.!

உனக்கு அக்டோபருக்குள் மூன்று முடிச்சு என்று எழுதியிருந்தாயே ! மணாளன் யார் ? அதையேன் எழுதல. எனக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்பதாலா ?

பர்த்டேக்காக இன்று ட்ரெஸ் வாங்கினேன்.

ஃபாத்திமாவிலேயே எம் ஏ தமிழ் பண்ணப் போறதா எழுதினேயே. ஏன் பண்ணல. கரஸ்பாண்டண்ட்ல எம் ஏ பண்ண உத்தேசமா ?  அல்லது பி எல் அல்லது எனி அதர் பிஜி கோர்ஸ் .

நிஜமாய் அரும்பின எதுவுமே அழிவதில்லை. உருமாறிப் போனாலும் உண்மைகள் மாறுவதில்லை. ஸ்நேகமும் அப்படித்தான்.

வீட்டில் எல்லாரையும் கேட்டதாக விளம்பு.

கவிதைகள் படித்தேன். சுவைத்”தேன்”.

அற்புதம். மீதி உன் லெட்டர் பார்த்து.


என்றென்றும் அன்புடன் மனோ. 
  

வியாழன், 29 நவம்பர், 2018

ராணித் தேனீ.

அவள் ராணியாயிருப்பது துயரமாயிருக்கிறது.
நாய்க்குட்டியாய்ப் பிரகடனப் படுத்தியபின்னும் அவள்
ராணித்தேனீபோல் நினைத்துக் கொள்கிறாள்.

கூடுகளைப் பத்திரப்படுத்தியபடி அலையும் அவளுக்கு
நீங்கள் வழங்கிய உணவைத்
தரையில் இருந்து எடுத்துத் தின்பது அசௌகர்யம்தான்

பிழியப் பிழியப் பல்சுவை தரும் அவள்
நீரை இன்னும் நக்கிக் குடிக்கப் பழகாதவள்.
அல்லதைத் தின்ன ஒவ்வாதவள்.

பசித்திருக்கும் அவளைச்
சாலையோர இலைச்சத்தங்கள்
சலனப்படுத்த வேண்டுமென்ற தாபம் புரிகிறது..

மூக்கின் நுனி ஈரமாக கன்னம் நனைக்கப்
பறந்துவரும் அவளை
பழக்கதோஷ நாயென்று நினைக்கலாம்.

கூடுகளை பிழியப்பட்ட அவளோ
இன்னொரு கூட்டைக் கட்டி ராணியானபின்னும்
நீங்கள் விரும்பியபடியே காட்சி தர விழைகிறாள். 
  

செவ்வாய், 27 நவம்பர், 2018

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. )

உன் கடிதம் படிக்கையில் .. ( நட்பின் கவிதை. ) 

** உன் கடிதச் சேதியறிய
தெருமுனை வரை நீளும்-
என் விழிமுனைகள் ! –
தபால்காரனை எதிர்பார்த்து !

என்னைத் தாண்டிப்போகும்
கடிதம் சுமந்து
கிழட்டுச் சைக்கிள்
வெறுமையைத் தந்து !

மனசோடு சேர்ந்து
வாயிற்படியும்
மௌனமாய்ச் சிரிக்கும் !

** பழைய சைக்கிள்
பல்லிளித்து நிற்கும் ஒருநாள்
என் முன்னால்.

மனசு குளிர்ந்ததை
உதடுகள்
புன்னகையால் உச்சரிக்கும்.

சைக்கிளைப் போல்
வயசான தபால்காரன்
ஒரு கிறுக்கல் முகவரிக்கு
முகம் யாரெனக் கேட்பான்.

மனசின் சோகம்
கண்கள் காட்டும்.!

** இப்படியே நாட்கள் கழிய
எப்படியோ ஒருநாள்
உன்கடிதம் கைக்கு வரும் !

சுற்றுமுற்றும்
விழிகள் சுழலும்-
சுற்றம் யாருமில்லையென்று
மனசு மகிழும். !

** சத்தம் வராமல்
உறை கிழியும்
சமையற்கட்டின்
மூலையில் அமர்ந்த

என் கையில் !
  

திங்கள், 26 நவம்பர், 2018

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

கனவுகளின் ஊர்வலம் ( நட்பின் கவிதை )

பகல் வெளியில்
அகல் விளக்கேந்தி
மனிதனைத் தேடிய
அறிஞனைப் போல்
முழுநிலா முற்றத்தில்
புதியதொரு சமுதாயம்தனைத்
தேடுகிறார்கள் – புதியவர்கள் !.

காற்று கையசைக்க,
மலை முகட்டில்
தவழ்ந்துபோகும்
மேக ஊர்வலங்கள்.!

கற்பனை கட்டவிழ்க்க,
எண்ணங்களில் முகிழ்க்கும்
கனவுகளின் ஊர்வலங்கள் !

0     0    0    0

கனவுகள் :-

வானமும் பூமியும்
உரசிக் கொள்ளும்
தொடுவானமாய்,

நிழலும் நிஜமும்
தொட்டுக் கொள்ளும்

பொய்க் கோபம் !

0 0

காப்பியம் முதல்
திரைப்பட காதற்
காட்சி ஈறாய்
கனவுகளே முன் நிற்கும். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும். !

இன்றில் நிகழ்வில்
இதுவா செல்லும் ?

விழிகளில் மின்னல் வெட்டி,
மனசுக்குள்
மழை பொழிந்ததென்பார்.
மொழிகளெலாம்
செந்தமிழ் கவியென்பார் !

இதயத்துள்
கல்யாணக் கனவுகள் தெளிப்பார்.!

திருமணமெனில்
திசைமாறிப் போவார். !

கனவில் கண்டே
துணையினை அடைந்ததாய்
காப்பியம் சொல்லும் !

இன்றின் நிகழ்வில்
இதுவா செல்லும் !

0    0

மாங்கல்யம் ஏறுமென
மங்கலக் கனவுகளில்
எங்கள் தேசப் பெண்கள் !

ஆனால்..

குறைந்த விலைக்கு
எந்த மாப்பிள்ளையும் கிடைப்பதில்லை !

தேர்தல்களில்
சரித்திரங்களை மாற்றுகிற
இந்தத் தாய்க்குலங்களின்
சரித்திரத்தை மாற்றுவது யார் ?

நேசிக்கும் நெஞ்சினை
வாசிப்போம் –
வாழ்க்கை நம் கையில்!

0 0

திருவோட்டில் முட்டையேந்தி
பகற்கனவு கண்ட
பிச்சைக்காரனைப் போல்

வாங்கிய பட்டங்களைத்
தாங்கியபடி
வேலை தேடி ஊர்வலம் போகும்
இளைய தலைமுறையின்
ஊமைக் கனவுகள்!

உதவாத பட்டம் தர
ஊருக்கொரு கல்லூரி வேண்டாம்
ஆளுக்கொரு வேலை தர
ஆலைகளே பெருகிடல் வேண்டும். !

0 0

கேள்விக் குறியாய்
பிறை நிலவாய்
வயல் வெளியில்
வளைந்து நிற்கும்
மனிதர்கள் !

வெளிச்சக் கனவுகளை
விழிகளில் தேக்கிய
கறுப்பு உருவங்கள். !

விளைநெல்
நிலம் நோக்கித்
தலை சாய்க்கும். !

இவர்கள் நிலை கண்டு
தலை சாய்ந்த செங்கதிரும்
கண்ணீராய் மணி நெல்லை
மண் மடியில் சிந்தும். !

உடல் முழுதும்
வியர்வை முத்துச் சுமந்த
இவர்களின் கனவுகள் யாவும்
கானற் கனவுகள் !

0 0

செய்தித்தாள்களில்
எண்களைப் பார்க்கும் வரை
அவனுக்குள்
ஆயிரமாயிரம் கனவுகள். !

பரிசு இல்லையெனினும்
தினம் தினம்
அரும்பி அழிந்து
முளைத்துத் தழைத்துப்
பூக்கும் நம்பிக்கை !

0 0

வெற்றி இலக்கினை நோக்கி
வீறுநடை போடும்
போராளியின் இலட்சியக் கனவுகள் !

வாழ்க்கையை மறந்து
வாலிப வயதில்
ஆயுதமேந்திய இவர்களின்
கனவுகள் ஊர்வலம் போவது
தூக்கத்தில் அல்ல
துக்கத்தில் !

இந்தக் கனவுகள்
சுகமானவையல்ல
சுமையானவை.  !

0 0

நிலத்திலிருந்த அனுராதாவை
வான வெளியில்
நீந்த விட்ட
விந்தைக் கனவுகள் !

அம்மானைப் பாட்டியாயிருந்து
அம்புலியை
மனிதன் காலால்
எட்டி உதைத்தது –
விஞ்ஞான சாதனை !

0 0

நீள்வெளி வானமதை
வெளிப்பதாய்
கனவு காணும் வெண்ணிலா !

பாவம் :
தன் முகம் முழுதும்
இருள் கவிந்து
காணாமற் போகும் !

மீண்டும் வளர்ந்து
தேய்ந்து..
முடிவுறா
ஒரு வர்க்கப் போராட்டம். !

0 0

இனியோரே!

கனவுகள் காணக்கூட
கண்ணிமைகளை மூடாதீர் !

விழிகள் கூட
காணாமல் போகும்
விந்தை தேசமிது !

0 0

திடமான கனவுகள்
தீர்க்கமானவை
தீர்க்க தரிசனமானவை !

மோனக் கனவுகளில்
மூழ்கிக் கிடக்கும் சமூகத்தின்
விழிகளைத் திறப்போம். !

புதிய தலைமுறைக்கு
நற்பாதை சமைப்போம் !

ஞாலம் முழுதும்
நம்பிக்கை விதைகளை நடுவோம் !

கால வெள்ளத்தில்
காய்ந்த விதைகளும்
முளை விடும் !

விதை முளைகள்
வெடிக்கையில் –
பூமியும் காயம்படும் !

ஞாயிறு, 18 நவம்பர், 2018

The Quarry :-

The Quarry :-

The Quarry by W. H. Auden is a ballad. The Ballad is a mixture of beautiful traditional folk songs and modern literary touches. The reader is kept guessing until its climax and conclusion. The poem is in the form of a series of questions and replies.

The beginning of the poem is arresting in its abruptness. It is the lover who poses questions to which his ladylove answers. The situation is that the lover has been chased by a band of soldiers for unknown reasons and in order to escape from that the lover has taken shelter with his lady love.

As the poem begins, the lady hears the sound of drumming at a distance and becomes curious to know who the drummers are. The lover merely says that it is a group of soldiers. The subsequent stanzas clearly show that the group of soldiers have been moving towards a definite direction.

The soldiers come with their swords in the air shining brightly against sunshine. The lady asks the lover what the soldiers are doing and he replies that they are perhaps performing their morning routine. Suddenly the soldiers take a turn and the lover immediately kneels down. The lady asks the lover why the soldiers have reined their horses and who they wanted to see.  He thinks it is the person or the farmer. But the soldiers passes them all. It is here that the lover conveys her even as the soldiers break open the door to enter their house. The poem ends here and leaves the conclusion suggestive to the readers.


The poem Quarry by W. H. Auden made us very interesting from the beginning till the end. But at the end the poet W. H. Auden leaves that to the imagination of the readers. We assume that he would be caught up by the soldiers. 
  

வெள்ளி, 16 நவம்பர், 2018

The “Secret Of Works” by Vivekananda :-

The “Secret Of Works” by Vivekananda :-

Helping man spiritually is the best help than helping him physically. The next best help that can be rendered to man is intellectual help. Vivekananda asserts that ignorance is death, knowledge is life. The physical help can never bring permanent satisfaction. The highest type of help is that makes us strong spiritually.

Every work must necessarily be a mixture of good and evil: yet we are commanded to work incessantly. Work incessantly but not attached to it is the one central idea in Geetha. Mind is compared to a lake where ripples arise and disappear but it leaves a mark. Similarly every work that we do leaves an impression on our minds and some of the impressions determines what we are. This is what is called “Smaskara”. Everyman is impelled to do good or bad by these impressions. If the mind is full of good impressions, it will not allow the man to do evil.

Liberation means freedom from the bondage of good as well as evil. A golden chain is as much a chain as an iron one.

Love never comes until there is a freedom. You should work like a master and not like a slave. There is no true love possible in the slave. Real existence, real knowledge, and real love are eternally connected with one another, the three in one. The true love can never react so as to cause pain either to the lover or to the beloved. If lovers cannot get near enough, they feel pain. But if there is real love, this does not rest on physical attachment. Lovers may be a thousand miles away from each other, but their love does not die and will never produce any painful reaction.

All thought of obtaining returns for the work we do, hinders our spiritual progress: may in the end it brings misery. The selfless and unattached man may live in the very heart of a crowded and sinful city, yet he will not be touched by sin.


Karma yoga means readiness to act and help everyone without any thought of return. The true life of action is indeed harder than the equally true life of renunciation.
  

புதன், 14 நவம்பர், 2018

விளி.

கோப்பை புதிது
மதுவும் புதிது
இதழ்கள்தான் அரை நூற்றாண்டுக்கானவை.

உப்பும் எலுமிச்சையும்
உராய்ந்து ருசிகூட்ட
கலகலக்கிறது டகீலா.

புளித்த பார்லித்தண்ணீரோ
கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீரோ
பெருக்கெடுத்தோடுகிறது பீர்.

ஆப்பிளோடு நுரைக்கிறது வோட்கா
நுரைக்காத செந்நீராய் திராட்சைரசம்.
நொதித்து வடித்தெடுத்த ஸ்பிரிட்

விதம் விதமாய் உண்டிங்கு போதை
எதிர்பாரா சமயம் பாயும் உன் பார்வையும்
ஆதூரத்தோடு நீ விளிக்கும் என் பெயரும் போல்.
  

புதுப்பிக்க இயலாமல்..

திடீரென விழுந்த
வார்த்தை அணுகுண்டால்
நின்று போயிருக்கிறது
நமது உரையாடல்.

சிதறிக்கிடக்கின்றன
கட்டிடங்களைப் போல
நமது உள்ளங்கள்.

எடுக்கவும் கோர்க்கவும்
உடுக்கை இழந்தவன் கைபோல்
இல்லை இங்கொரு நட்பு.

புதைகுழியில் மணற்செறிந்த
உடலுடன் புதைந்துகிடக்கிறது
புதுப்பிக்க இயலாத உயிர்.
  

வெள்ளி, 2 நவம்பர், 2018

குகைக்குள் விரியும் காடு.

பரணின் செம்பழுப்பு அப்பிய
துருப்பிடித்த ட்ரெங்குப் பெட்டியின்
பழைய நோட்டுப்புத்தகங்களில்
சில நட்புகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
தூசி தட்டிப் படிக்கப்படிக்க
ரயில் குகைக்குள் விரியும் காடென
ஒரு பிரயாணப் பொழுதை
அவை சுவையாக்கி விடுகின்றன.
நீளும் பெட்டிகளாய்
ஒன்றன்பின் ஒன்றாய்
கைகோர்த்து ஓடிவந்தாலும்
வெவ்வேறு இடங்களில்
சில நின்று விடுகின்றன.
கூடவே வருபவற்றின் சுமையும்
சுகமும் பரிமாறிப் பரிமாறி
நைந்துபட்டாலும் சில
கல்வெட்டாய் உறைந்திருக்கின்றன. 

  

புதன், 31 அக்டோபர், 2018

மதியப் பொழுதைத் தின்பவள்.

நீர்க்கண்ணிகள் வளைந்திறங்கி
வெடித்துக் கிடந்த நிலத்தைச்
சுருக்குகின்றன.
பனை விசிறிகள்
ஆசுவாசமாய் நீர்க் கவரி வீசுகின்றன.
பொடிப்பொடியாய்த்
தெறிக்கும் நீரில் சிறுவிதையாய்
முளைத்துக் குதிக்கின்றன தவளைகள்
ஒரு கால்வாய் கோடிழுக்கத் துவங்கி
நெளிந்து காட்டாறாகிறது.
துணிகளைத் துவைக்க வந்தவள்
புழுக்களைச் சுவைக்கும்
குருவிகளின் கொத்தலை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நீளமாய் ஓடி சட்டென்று சுருங்குகிறது
ஒரு வெக்கைப் பகல்.
தோட்டத்து செத்தைகளில்
செம்பசையாய் குழுமியிருக்கிறது
விழப்போகும் இளநீருக்கான தளம்.
மெத்தையில் புத்தகங்களோடு
அரைவிழியினை அங்குமிங்கும்
அசைத்துக் கொண்டிருக்கிறாள்
மதியப் பொழுதைத் தின்பவள்.
  

செவ்வாய், 30 அக்டோபர், 2018

கண்களின் வண்ணம்.:-

கண்களின் வண்ணம்.:-


ஓங்காரம் உச்சரித்து
ஒழுங்கசைவில் அமர்ந்து
உள்முகமாய்ப் பார்க்க
ராபின்பறவைப் புருவம் துடிக்கிறது.
நீலமேகம் அசைந்து கடக்கிறது
கடலாய் எழும்பித்தாழ்கிறது இமை
பசுமைப் பயண அடுக்குகளில்
மசமசப்பாய் மஞ்சள் அலைய
செங்கல் வண்ணத்திலொரு அருவியும்
செஞ்சாந்துத் தடிப்போடு ஒரு சூரியனும்
வழிந்திறங்க விழிக்கோளம் உருள்கிறது
உள்நிலவின் வெளிச்சத்தில்.
நிறம்விரித்து நிறம் குவித்துக்
கருமைக்குள் உருண்டு உருண்டு
களைப்பாறிக் கிடக்கிறது.
கண்களின் வண்ணம்.
  

திங்கள், 29 அக்டோபர், 2018

வலை அலை வெளி.

நமது போர் நம்முடனே
வட்டமானதும் தட்டையானதும்
நம் உலகம்.
ஒளிதலுக்கு இடமில்லா
வலை அலை வெளியில்
நமது வியூகங்களும்
யூகங்களும் நம்மையே
மையப்படுத்துகின்றன.
கனவு வெளிகளில்
காக்கி மனிதர்கள் சுற்றியிருக்க
வளையமிட்ட நூல்கற்றையில்
தலை நுழைக்கிறேன்.
விழிகளைக் களவாடிய
குற்றமொன்றுதான் உனது.
தடதடக்கும் இறக்கைகளோடு
பட்டாம்பூச்சியாயிருக்கிறாய்.
முட்டி மோதி மோதி என்
இருட்டறையை வண்ணமாக்கியிருக்கிறாய்.
விலங்குகள் உன் விரல்தீண்டுமுன்
சதுரத் திறப்பில்
உன்னைத் தப்பிக்கவிடுகிறேன்.
நீ உதிர்த்துச் சென்ற
வண்ண வாள் கொண்டு
என்னைச் சிரச்சேதம்
செய்கிறேன்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கொதிமலை.

நீலவண்ணம் பொதிந்த
பெண்ணுடல் கடலை ஒத்திருக்கிறது.

நதிகளின் சங்கமிப்பும்
மழையின் உயிர்த்துடிப்பும்
பெருஉப்பைப் போக்குவதில்லை.

நீளமாய் மடிந்து மடிந்து
மன அலை விரித்துச்
சொல்லவந்ததைத் சொல்லாமல்
முழுங்குகிறாள்.
சமயத்தில் சுற்றியிருக்கும்
அனைத்தையும்.

நீலம் நீலத்தோடு கரைகட்டாதவேளை
உள்ளோடிப் பார்த்தால்
தெரியக்கூடும் சில கொதிமலைகளும்
பல கப்பல்களும்
இன்னும் உள்ளிழுக்கும் பள்ளத்தாக்கும்.
  

செவ்வாய், 16 அக்டோபர், 2018

விடியல்.

இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது
கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு.

பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள்
அலையாய்த் தழுவும் காற்றில்.

நிலவில் ஊறிக் கொண்டிருக்கும் மரம்
நனைந்தாடுகிறது பால் மயக்கத்தில்.

சத்தமின்றி விரைந்தாடுகின்றன இலைகள்
கசிந்திறங்கும் குளிரின் பிசுபிசுப்பில்.

கலங்கரை விளக்காய் கனவில் ஈர்க்கிறது
கலவியற்றுக் கலந்தவளின் கண்கள்.

வெளிறும் கடல் வற்றத் தொடங்குகிறது
துருவனின் கைபிடித்துக் கரையோர மணலாய்

சிறைப்படுகிறது திசையற்றுத் திரியும் சூரிய மீன்
வடிகட்டியாய் அலையும் விடியலின் கூரிய கரங்களில்.
  

திங்கள், 15 அக்டோபர், 2018

ஆடும் ஆனையும்.

கல்லூரிக்கான வழித்தடத்தில்
அமைந்திருந்தது அம்மலை.
ஏதோ ஒருவிதத்தில் அவை
வெருட்டியிருக்க வேண்டும்
மாமிசம்போல் எப்படி
வெட்டிப் புசித்தார்கள்
உதிர்ந்த எலும்புகள்
சுண்ணாம்புக் கவிச்சியுடன்
செரிக்கமுடியாத குன்றாய்க்
கெக்கலிக்கிறது அவர்களைப் பார்த்து.
ஆட்டை வெட்டலாம்
ஆனையை வெட்டமுடியாதென
நீண்டு நிமிர்ந்து கிடைக்கிறது
சிறிதே தள்ளி தப்பித்த ஒன்று
  

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஓநாய் வணக்கம்.

பனிப்பாறைகளுக்குள்
உறைந்துள்ளன எச்சங்கள்
கருத்தும் அழுகியும்.
தழையுண்ணிகளாய் இருப்பதோ
மாமிச பட்சிணிகளாய் இருப்பதோ
கணங்கள் முடிவெடுக்கின்றன.
துண்டு துண்டாய்ப்
பிளவுபடுகின்றன நிலங்கள்
துளிர் உண்ணும் உண்ணிகளால்.
தீமை உரித்துத் தந்திரம் வடிக்க
பனி எச்சங்களால் உயிர்க்கும்
ஓநாய்கள் வணக்கத்துக்குரியதாகின்றன.
  

வியாழன், 11 அக்டோபர், 2018

ஒளிவிலகல்

சிதறிச் சிதறி விழுகின்றன
எழுத்துக்கள் குவிப்பானில்.
குழியாடியும் குவியாடியும்
குழிவீழல் சிக்கலாய்.
வலமூளைக்கும் இடமூளைக்கும்
அலைநீளங்கள் அதேதான்
பெருமூளையில் விழும் நிஜங்கள்
ஒளிவிலகலில் நிழல்களாய் நீளும்.
  

செவ்வாய், 9 அக்டோபர், 2018

அலைவு.

இரவை சுதி மீட்டுகிறது
கடிகாரம்.
கொசுக்களோடு ராகமிசைக்கின்றன
சில்வண்டுகள்.
தென்னங்கீற்றுடன்
உசாவிக் கொண்டிருக்கிறது மின்விசிறி.
கட்டம் கட்டமாய் நகர்ந்து
கண்ணாமூச்சியாடுகிறது நிலவு.
வீட்டுக்கும் தோட்டத்துக்குமாக
அலைந்து கொண்டிருக்கிறது இருள்.
  

விளைந்தவைகள்.


டிக் டிக் டிக்
குறைந்துகொண்டிருக்கிறது
லப்டப்
மழைக்கொத்திகள்
பூமியைக் கொத்த
விளைந்தவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறது மனம்
தேய்ந்து கொண்டிருக்கிறது
மழைச்சொட்டின் சத்தம்.
அமோக விளைச்சல்தான்
நீர் வார்க்கிறது பனை.
மரம் விட்டு மரம் பறக்க
இறகை விரிக்கிறது பறவை.

  

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சூரியச் சாமரம்.

இரவில் விழுந்த மழைமுத்தங்கள்
இலையெங்கும் வழிந்து கிடக்கின்றன.
பாலாவியாய்க் காற்றில் அலசி
இலைகளை உலர்த்துகிறது தோட்டம்.
சூரியச் சாமரம் இலைவெளி புகுந்து
தூபம் போட்டுக் கொண்டிருக்கிறது.
கூதலை உண்ட புள்ளினங்கள்
உறைந்து கரைந்து சிறகு விசுறுகின்றன.
  

வெள்ளி, 5 அக்டோபர், 2018

கழிமுகம்.

ஊசியாய் இறங்குகிறது மழை
ஆணியடிக்கிறது பூமியை.
சிரச்சேதம் செய்கிறது செடிகளை
பசிய கவிச்சி பரவுகிறதெங்கும்.
விழுந்து கிடக்கும்
மரக்கட்டைகளை இழுத்துக்கொண்டு
முள்முடி சுமந்து
கழிமுகம் பயணிக்கிறது நீர்.
  

உதிர் ஏக்கம்.

உதிர் ஏக்கம் இன்றி
கூதிர்காலத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன
முதிர்பூக்கள்.

மலர்வதே ஒரு தவமாய்
மலர்வதே ஒரு வரமாய்
மலர்வதே ஒரு பலமாய்.

முதிரும் புதிருமாய்
புன்னகைப்பது பார்த்தும்
மொக்குகள் கிளைக்கின்றன

நீர்பட்டு நார்பட்டுக்
காயரும்புகளும் சேர்ந்துவிடுகின்றன
மாலையாகும் விரிபூக்களுடன்.
  

புதன், 3 அக்டோபர், 2018

வனமடி.

முரசடித்து முழங்கிச்
செல்கிறது மேகம்.
மலைமுலைகளில் பாலாய்ப்
பெருகிவழிகிறது அருவி.

வனமடியிலிருந்து
துளிர்க்குழந்தைகளை
விரல்பிடித்துத்
தூக்குகிறது சூரியன்

ஈர ரத்தமாய்
வேர்வருடி
பசிய வாசத்தோடு
நழுவிக்கொண்டிருக்கிறது நதி

கதகதப்பு பரவப்பரவ
கலகலக்கிறது
பறவைகளின் தாலாட்டால்
கனிந்திருக்கும் காடு.
  

வெளி.

விசிறும் மழையில்
நனையாமலிருக்க
விசிறிக்கொண்டு
விரைகின்றன தட்டான்கள்.

மஞ்சள் பூக்களுக்கு
இறகு முளைத்துப்
பறக்கின்றன பாப்பாத்திகளாய்.

வண்ணங்கள் கலைந்துவிடுமென்ற
பயம்விடுத்து
வானவில் வரைகின்றன வண்ணாத்திகள்

வெண்டிலேட்டர் வீட்டுக்குள்
குடும்பத்தோடு குந்தி
வெளி வெறித்துக் கொண்டிருக்கின்றன புறாக்கள்.

திங்கள், 1 அக்டோபர், 2018

நீயாகிய நான்.

கண்ணோடு கண் நோக்கி
கருத்தொருமித்திருந்த கணம்
யௌவனம் புகுந்தது

யானும் நீரும்
செம்புலம் கலக்க
சாரல் தெறிக்கிறது

இம்மையிலேயே
மறுமை தொடர்கிறது
நீயாகிய நானும்
நானாகிய நீயுமாய்.

  

புதன், 26 செப்டம்பர், 2018

கதகதப்பு.

எப்போது வருகின்றன
எப்போது செல்கின்றன
குரலற்ற புறாக்கள்

பால்கனித் தொற்றில்
எச்சங்கள் இல்லை

படபடக்கும் இறக்கைகள்
சிறுகணம் ஒலிக்கும்.

ஜன்னல் விளிம்பில்
கீறல் படாமல்
காற்றுப் பைகளால் செல்லத் தட்டு.

கண்ணுள் வீழாமல்
கவனம் காக்கின்றன.

கதகதப்பை மட்டும் கசியவிட்டு
கதவோரம் சுற்றிக்கொண்டிருக்கின்றன
சில மென் இறகுகள்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கொள்ளளவு.

காட்டாறாய் வழிந்து
கொண்டிருக்கிறது
மேல்நிலைத் தொட்டி.

அருவி நீரெனக்
குளியலாடிக் கொண்டிருக்கின்றன
குருவிகள்.

தலையைச் சிலுப்பி
உதறும் துளிகளில்
மிதந்துகொண்டிருக்கிறது
நடைபோட்டுக் கொண்டிருந்த எறும்பு.

நின்று சொட்டும் நீருக்குச்
சாதகப் பட்சியாய்
வாய்விரித்துக் காத்திருக்கின்றன
சில புறாக்கள்.
  

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

குழப்ப மொட்டு.

தினம் பொழிகிறது மழை
குளிரில் நடுங்குகிறது
பால்கனிச் செடி.

சூரியனின் வெப்பமும்
நிலவின் தட்பமும் கூட
தோராய வீதத்தில்.

மும்மாரி தினமாரியானதில்
அணுங்குவதில்லை என்றாலும்
அணுக்கப் பயத்தில்.

காற்றும் மழையும்
கைகோர்த்துப் பிடித்திருக்கின்றன
பூவாடும் கிளையை.

எத்தனையோ தினம் பூத்திருக்க
குழப்ப மொட்டும் பூவானதை
கிளைவிரித்துப் பார்க்கிறது செடி.
  

திங்கள், 17 செப்டம்பர், 2018

கர்மம் தொலையாமல்..

பசியெடுத்துப் பிய்க்கும்
வல்லூறுகளின் பிடியில்
அங்கம் கிழிந்தபடி
மரணாவஸ்தையில் எலி.

தண்ணீர்த் தொட்டியின்மேல்
தாகவிடாய் தீராமல் குதற
பொங்கி வழியும் தண்ணீரோடு
எலியின் ரத்தமும் சிறுநீரும்.

நீரிருந்தும் கர்மம் தொலையாமல்
புண்ணியாசனமும்
தர்ப்பணமும் ஒருங்கே
செய்து கொண்டிருக்கிறது தொட்டி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கடந்து செல்லும்..

மைல்கற்களுக்குக்
காவலாய் நின்றிருக்கின்றன
சாலையோர மரங்கள்.

உச்சாணிக் கம்பியில்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மஞ்சள் இமை மைனாக்கள்.

கடந்துசெல்லும்
ஒவ்வொரு பாலத்தையும்
கடகடத்து அறிவிக்கிறது ரயில்

இன்று நாளை இன்று நாளை
இருப்பும் மறைவும்
லப்டப்பிட்டு உயிர்க்கிறது இதயம்

இருத்தலின் சுயகம்பீரம்
தானே பெற்றுவிடுகின்றன
தினம் மலரும் பூக்கள்.
  

சிற்றம்பு.

வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

  

வியாழன், 6 செப்டம்பர், 2018

கரைதல்.

குந்தித் தின்றால்
குன்றும் கரையுமாம்
குந்தித்தான் தின்கின்றன
குருவியும் காக்கையும்
தாங்கள் கரைந்தபடி..
  

திங்கள், 3 செப்டம்பர், 2018

உடன் போகும் காலம் வரை..

மஞ்சள் மோகம்
முகிழ்த்தெழ
சிந்தூர நெற்றியும்
சிவப்போவியக் கரங்களும்
மெட்டி விரல்களும்
சன்னஞ்சன்னமாய்
ஓவியம் வரைகின்றன.

சிறுபொழுதும் பெரும்பொழுதும்
சிறுமூச்சும் பெருமூச்சும்
கலந்துகட்டி
பனிபூக்கப் பனிபூக்கச்
சூரியனும் சந்திரனுமாய்ப்
பிரசவிக்கின்றன.

நரையோடித்
திரையோடியபோதும்
மோகம் முப்பதும்
ஆசை அறுபதுமாம்.
பிடித்த பிரதிமையின்
தீராப் ப்ரேமைக்கு
நாட்காட்டி உரிக்கும் தாள்கள்
நலங்கூறும் பூங்கொத்தாம்.

மங்கலமும் மனையறமும்
மனமாட்சியும் பொலியும் மனம்
அபத்தங்கள் நிகழ்ந்தாலும்
அபவாதம் வந்தாலும்
அயர்ந்தும் போவதில்லை
துயர்ந்தும் போவதில்லை
உயிர் பிணைந்து முன்னிற்கும்
உடன்போகும் காலம் வரை.

  

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சாணை.

நீண்ட நாள் கழித்துக் கவிதை போல ஒன்று எழுதுகிறேன்.
திரும்பத் திரும்ப நீ அழைத்த என்பெயர் காதில் ஒலிக்கிறது.
இனிப்பாய் உன் குரல் பட்டுக் கனிந்திருந்தது என் பெயர்.
நான் உச்சரித்துப் பார்த்தேன் ஒரு மாற்றமுமில்லை.
மருகி மருகி வேண்டி நிற்கும் வார்த்தைகளைத் தள்ளுகிறேன்
இரக்கமுடையவள் என்று கூறிக்கொண்டே
வார்த்தைச் சாணையால் வீறுகிறேன்
கீறல்களோடு நீ தனித்திருக்க.
மறுதலித்து நடக்கிறேன்
அது என் பெயர்தான் ஆனால் அல்லவென்று.
  

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

இருப்பின் விகசிப்பு.

எங்கும் வியாபித்திருக்கும்
உன்னை உணர்கிறேன்

எங்கோ விசிறும் சிறு கேலியும்
நையாண்டியும்கூட உன்னை வரைகிறது.

உன் அக்கறையும் விசாரிப்புமில்லாமல்
பலவருடங்கள் ஓடினாலும் இன்னும் உன்குரல் காதில்.

பேசிக்கொள்வதில்லை என்பதாலேயே
புரிந்துணர்வு பெருகுகிறது

எப்போதும் சந்தித்துக்கொள்ளவேண்டாமென்ற
வைராக்கியம் இறுகுகிறது இருப்பின் விகசிப்பில்

நலமாயிரு எப்போதும் எங்கும்
நீ இங்கேயும் நான் அங்கேயும்
  

புதன், 22 ஆகஸ்ட், 2018

இசைவும் அசைவும்.

காற்றின் இசைவுக்கேற்ப
நடனமாடிக்கொண்டிருக்கிறது
அசைவறியாப் பூ .
  

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

நுதலின் நிபந்தம்.

பருவம் முகிழ்த்த சூதகம்
பச்சிளம் பிறப்பின் சீராம்.
நரைத்த திரைத்த கேதம்
ஞமனின் நடுவன் சீராம்

மூங்கில் நுணலாய்
உருவம் சாய்த்த
இரும்பது துரும்பாய்
உள்ளம் ஓய்த்த
உவப்பை ஒழித்த
பெருங்கழி ஓதம்
நுதலின் நிபந்தம்.  

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கான(க)ம் பெரிது.

இருளும் குளிரும்
நெருக்கமாய்ப் போர்த்தியிருக்கும்
இலைகளுக்குள்ளும்
கதகதப்பாய்க்
குடியிருக்கின்றன
கான(க)ம் பெரிதென்று வாழும் குயில்கள்.

திங்கள், 30 ஜூலை, 2018

அன்புத் துலா.

எவ்வளவு இட்டாலும்
என் தராசுத்தட்டை
மேலேற்றி விடுகிறாய்.
அள்ளிக்கொட்டி
என் தலைஉயர்த்திவிட்டுத்
தாழ்ந்தே கிடக்கிறது
உனதன்பு.
  

இறப்பும் பிறப்பும்.

இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுதான்.
நமக்கு என்னாளோ என்று
பலர் கலங்க
வகையாய் வந்து மாட்டிக்கொண்டோமே
என்று ஒருவன் கலங்க
இறப்பின் துயரும்
பிறப்பின் துயரும்
ஒன்றுபோலத்தான்
இருதுயர்.

- 1988 ஆம் ஆண்டு டைரி.
  

ஞாயிறு, 22 ஜூலை, 2018

இயல் உலகம்.

உடலும் நிறமும் கொண்டு
தீட்டப்படும் வண்ணங்கள்
உடலை அறிவதற்குக்
கரை உடைக்கின்றன.

அணையைத் தடுக்கும்
கற்களிலும் விதைகளைப் பாய்ச்சிச்
செல்கின்றன வலசைப்பறவைகள்.

உடல்வேறு மனம்வேறெனக்
கருதும் மனிதர்க்கு
இன்பந்துய்த்தலே இலக்கு.

மனதை உடலாயும்
உடலை மனமாயும்
கருதும் மனிதர்க்கு
இசைவாய் இயல்வதில்லை
இயல் உலகம்.

புதன், 18 ஜூலை, 2018

விரல்களைத் தின்னும் வர்ணங்கள்.

ஒரு நூறு முறை
மன்னிக்கப்படுகிறீர்கள் நீங்கள்.
உங்கள் ஜாதியை மதத்தைத்
தூக்கிப் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறீர்கள்.
கூண்டு ஜன்னலோரம்
கையசைத்துச் சிரித்துச் செல்லும் அரசியல்வாதியாய்
குற்றங்களின் பிடியுள் நிம்மதியாயிருக்கிறீர்கள்.
கவசமாய் அல்ல கேடயமாய்க்கூட
அவை உங்களைக் காப்பதில்லையென உணர்ந்தும்
கேன்களுடன் அமர்ந்து போஸ்கொடுக்கும்
துக்கிரி நிலைக்குத் தள்ளப்பட்டபோதும்
அடங்குவதில்லை உங்கள் மாச்சர்யம்.
பிறகு நீங்களே விரும்பாவிட்டாலும்
உங்கள் கைபிடித்து விரல் ரேகைகளை
அவர்களே பதித்துக் கொள்கிறார்கள்.
விரல்களைத் தின்னும் வர்ணங்களோடு வாழ்ந்தும்
ஆதிக்க வர்ணமாகவே அடையாளங் காட்டப்படும் நீங்கள்
உங்கள் அசல் உரிமை பெறக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
  
Related Posts Plugin for WordPress, Blogger...