எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜூலை, 2020

நதிமகள்

பூ மூடிச் செல்லுமவளை
விலக்கி விலக்கிப் பார்க்கிறேன்.
நாணத்தால் இன்னும் 
முகம் மூடி முகம் மூடிச் 
சுழன்றோடிச் செல்கிறாள்
நதிமகள். 

  

ஞாயிறு, 26 ஜூலை, 2020

இனிப்பு நீர்

அனலும் காற்றும்
மூச்சுக் குழலெங்கும்
கனவும் நனவுமாய்
சுற்றிச் சுழல்கிறது.
தடைப்படும் மூச்சினால்
சுருங்கித் திணறும் நுரையீரல் 
என்றோ செய்த சாம்பவிக் கிரியாவை
நெஞ்சம் முழுக்க நிரப்புகிறது
இனிக்கத் துவங்குகிறது
நாவில் படும்போதெல்லாம்
கசந்து கண்ணைப் பிடுங்கிய
கபசுரக் குடிநீர். 
  

திங்கள், 20 ஜூலை, 2020

குட்டிப் பிரச்சனை.

வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள்
வன்முறையாளராகிறார்கள்.
தூண்டுகருவியாகத் தாயோ தந்தையோ
அவர்களைப் பயன்படுத்தும்போது
எப்போதுமே பிரச்சனைகளின்
மைய அச்சாணியாகிறார்கள்
தாய் தந்தைமேல் சாணியைப் பூசவும்
தயங்குவதில்லை அவர்கள்.
தங்களைப் பயன்படுத்திக் கொண்ட அனைவரையும்
ஒரு கட்டத்தில் விசுவரூபமெடுத்துப்
பயப்படுத்தி விடுகிறார்கள்.
பிரச்சனைக் குழந்தை என்பது
பிரச்சனைப் பெற்றோர் பெற்றெடுத்த
குட்டிப் பிரச்சனையே.
இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும்
பிரச்சனைகளைத் தவிர வேறொன்றையும்
உயிலெழுதிவிட்டுப் போவதில்லை.
இதையும் விளம்பரமாக்கிப்
புகழ் வெளிச்சத்தில் மின்னிக்
கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
நாடே உழன்று கொண்டிருக்கும்
நோய்ப் பிரச்சனையையும் மறந்துவிட்டு
இவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையில்
சுழன்று கொண்டிருக்கிறது
  

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கலிகால தெய்வம்.

வீடே கோவில்
வீட்டினரே தெய்வம்
இன்னும் ஒரு வருடத்துக்கு
இதுதான் பாதுகாப்புக் கவசம்
ரணம் ருணம் தவிர்க்கத்
தனிமையைக் கற்பிக்கும்
கொரோனா யட்சிணியோ
ராட்சசனோ பேயோ பூதமோ
பிசாசோ கருப்போ தெரியவில்லை.
ஆனால் நேசம் பாசம் நெருக்கமென
இன்னுமுள்ள ஆயுளை
நெகிழும் உறவுகளோடு
வாழ வாய்ப்பளித்திருக்கும்
கலிகால தெய்வம்.

  

சனி, 18 ஜூலை, 2020

சுய சிறை.

மிக நீண்ட வேனிலைப் போல
நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்
விடியற்காலைக் குடுகுடுப்பைக்காரனைப்போல
உலவி நிமித்தம் சொல்கிறது.
ஒதுங்கி ஒளிந்திருந்து அனைவரும்
ஒட்டுக்கேட்டபடி பதுங்கி இருக்கிறார்கள்.
நல்லகாலம் பொறக்குதோ இல்லையோ
கெட்டகாலம் ஒழியட்டுமென
வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவர்கள்போல
புதைகுழிப் பேய்களாய்
விழிவிரித்துக் கிடக்கிறார்கள் மனிதர்கள்.
குடுகுடுப்பைச் சத்தம் தேய்ந்து ஓய்ந்தபின்னும்
வாசல்படிகள் திறக்கப்படுவதேயில்லை.
சுயசிறைக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மிரண்டு
அவநம்பிக்கையோடு தள்ளியே நிற்கிறார்கள்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...