எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2020

பாலாவியாய்..

நதியின் செதில்களில்
நீரின் மினுமினுப்பு
உச்சிச் சூரியனிலிருந்து
உலாவருகிறது கானல் நீர்
பாலாவியாய் மிதந்தலைகின்றன
பாலீதீன் பைகள்
விசிறியடிக்கும் காற்றில்
வட்டமிட்டலைகிறது மணல். 

  

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நீளும் கொடுக்குகள்.

தெரிந்தும் தெரியாததுபோல்
கொட்டிவிட்டு
விலகிச் செல்கிறது தேள்.
அடிக்க விரையுமுன்
பதுங்கிவிடும் அது
அடுத்து எதிர்பாராமல்
கொட்டும்போதுதான்
வெளிநீட்டுகிறது கொடுக்கை
எது தேளென்று 
கொட்டும்வரை தெரிவதில்லை
மறைந்திருக்கும் கொடுக்குகள்
காலம் வந்தால் நீளும்
நியாயத் தராசுகள் என்று
வாழக்கற்பிக்கப்படுகிறோம் நாமும். 
  

வியாழன், 22 அக்டோபர், 2020

பூமிப் பறவை.

சூரியத் தாவரத்தில்
ஒளிக்கிளைகள் நீள்கின்றன.
பூமிப் பறவை இளைப்பாறுகிறது 
அக்கிளைகளில்.
சிலசமயம் வெளிச்சப்பூக்களைப்
பிடித்துண்ணுகிறது.
இருள்கூட்டில் உறங்கி உயிர்த்து
உருண்டோடி உண்ணத் தொடங்குகிறது
மற்றுமொரு புதுப்பூவை. 

  

புதன், 21 அக்டோபர், 2020

பூமியின் இரக்கத்தால்..

பூமியின் இரக்கத்தால்..

நதி ஓட முடிகிறது.
மலை நிற்க முடிகிறது
மரம் வேரோடுகிறது
பறவை பசியாறுகிறது

மீன் துள்ளித் திரிகிறது
இலை அசைந்து களிக்கிறது
பயிர் எழும்பிச் சிரிக்கிறது
நானும் உயிர் வாழ்கிறேன். 

  

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நதி, மரம், சூரியன்.

ஓடிவரும் நதிநீரை
இலைதூவி வரவேற்கிறது மரம்.

வரவேற்கும் விருட்சங்களின்
வேர்வருடி இதமாக்குகிறது நதி.

நதியின் மேல் குதித்து
ஆனந்த நீராடுகிறது சூரியன்

குளியலாடும் சூரியனைக்
கரம் ஏந்திக் களிக்கிறது நதி.

மின்னும் நதியில் 
முகம் பார்த்துக் களிக்கிறது மரம் 

நதி வழி மரமேறி
ஊஞ்சலாடுகிறது சூரியன். 

கொஞ்சும் சூரியனோடும் கெஞ்சும் மரத்தோடும்
ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 


  

திங்கள், 12 அக்டோபர், 2020

ஞாபகச் சொட்டுகள்

ஒரே இடத்தில் 
உறைந்து கிடக்கும் 
எண்ண நீர்
உருகிக் கரைந்து
ஞாபகச் சொட்டுக்களாய் வடிய
வெகுநேரம் ஆகிறது. 

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஜலதரங்க மழை

கருத்துத் திரண்டு
வலதும் இடதும் மோதி
மேளம் இசைக்கிறது
மேகம்

ஒன்றிலொன்று உருண்டு
முன்னும் பின்னும் புரண்டு
முரசொலிக்கிறது
இடி

வெளிச்சப் புல்லாங்குழல்களாய்ப்
பின்னிப் பின்னி இறங்கி
சாக்ஸபோனாகின்றன
மின்னல் கம்பிகள்

மரங்களைக் கிண்ணங்களாக்கி
இலைகளைக் கரண்டிகளாக்கி
ஜலதரங்கம் வாசிக்கிறது 
மழை

  

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சமரசங்களோடு வாழ்வது.

துளிர்க்கும்போதே ஓணான்களுக்கும்
துளிர்த்தபின் கத்திரிகளுக்கும்
துளிர்க்க ஏங்கி நீருக்கும்
துளிர்க்கரம் பிடித்தெழுப்பும் சூரியனுக்கும்
துளிர்ப்பிடி கருகிச் சருகாகும்போதும்
துளிர்த்த இடத்திலிருந்து ஒட்டறுந்து வீழும்போதும்
நன்றியும் பாசமும் காதலும் கொண்டு
மிதந்தும் பறந்தும் செல்ல வாய்ப்பதுதான்
சமரசங்களோடு வாழ்வது.

  

முள்முடி

கொரோனாவா
கதிர்வீச்சா
மூச்சுத் திணறலா
த்ராம்போஸிஸா
விதம் விதமாய்
முள்முடி மாட்டுவது 
வைரஸ் மட்டுமல்ல
பணவீக்கத்தில்
நசுங்கிக் கிடக்கும்
பொதுஜனமும்தான். 


  
Related Posts Plugin for WordPress, Blogger...