எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எனது தாய்மொழி கவிதை ( பேபிலதா மிஸ்ஸுக்காக )



நுதல் பிறையல்ல இது

உன் நெற்றிப்பிரதேசங்களில்
உருவாகியிருக்கும்
வியர்வை மலை முகடுகள்
பாறைகள் சிதறுவதாய்த்
தெறித்து விழும்.

நானொரு ஊமைப் பேச்சாளன்
குருட்டுப் பார்வையொளியாளன்
எனது தாய்மொழி கவிதை

உனது நெற்றிச் சமவெளிகளில்
பாத்தி கட்டியிருக்கும் கவலை முடிச்சுகள்
குங்குமத் தீற்றல்கள்
சிகப்புக் கங்குகளாய்ச் சொலிக்கும்.

நானொரு வாய்திறவாப் பேச்சாளன்
எனது தாய்மொழி கவிதை

எல்லாத் தாள்களும் மையினால்
தீட்டுப்படும்போது
உனது நெற்றியும்
வியர்வையால் தீட்டுப்படுகின்றது.
சிந்தனைக் கோடுகள் கரம் முறிய
முதுமையை எழுதிச் சமர்ப்பித்திருக்கும்
நெற்றி உனது.

உப்புக்கரிக்கும் முத்துக்களைப்
பிரசவிக்கும் மஞ்சள் கடல் உனது நெற்றி
முன் நெற்றியில் விழுந்து புரண்டு
காற்றில் சிலும்பும் சுருள்முடி
கவலைகள் கருத்தரித்து முண்டியடிப்பதைப்
பறையடிக்கும்.

நானொரு ஊமைப்பேச்சாளன்;
எனது தாய்மொழி கவிதை

நெற்றிப் பொட்டுகள்
குழிவிழுந்த கிழவியின் கன்னமாய்
பள்ளத்தாக்குப் பரிதலாய்
சமாதானம் தேடும்
புருவப் பரிவாரங்கள்
அடிக்கடி நெரித்துக்கொள்ளும்.

முரண்டி முரண்டி மேலெழுந்து
வினாக்குறியை உடுத்துக்கொள்ளும்.

இட நெருக்கடியால்
அவதிப்படும் கறுப்புச் சேனைகளாய்
முள்ளம்பன்றியின் முதுகுக் குச்சிகளாய்
ரோமம் சிலிர்க்கும்.
நெற்றிக்குப் பரிவட்டம் கட்டும்
கறுப்பு நர்த்தகிகள்
சிந்தனை மேடைகளில்
சிருங்கார இசையமைக்கும்
முடியரசிகள்

நானொரு ஊமைப்பேச்சாளன்
கண் தெரியாப் பார்வையொளியாளன்
எனது தாய்மொழி கவிதை.

எல்லா நெற்றியும் பவுடர்களால்
க்ரீம்களால் பகட்டுகளால்
போர்வை போர்த்தப்படும்போது
உனது நெற்றிமட்டும்
கவலையால் முணங்கிக்கொண்டு
பக்தியை நிரப்பிக்கொண்டு
அகன்ற ஆழ இருள்வெளிகளில்
அக்கினித் தீற்றல்களில்
உறைபனியில் அடியில்
கடகடத்துக் கொண்டிருக்கும்

நானொரு ஊமைப்பேச்சாளன்
எனது தாய்மொழி கவிதை.


--பேபிலதா மிஸ்ஸுக்காக.

-- 83 ஆம் வருட டைரி.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...