எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 டிசம்பர், 2021

உதிர்தல்


கற்களின் மேல் குவியலாய்
உதிர்கின்றன இலைகள்
மேலாக உதிர்ந்த பூவொன்றும்
தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.

 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

வளியும் ஒளியும்

சூரியனாய் அமர்ந்திருக்கிறாய்
உன் பக்கமிருக்கும் நிலவும்
சுற்றிலும் கிடக்கும் தாரகைகளும்
மறைந்து விடுகிறார்கள்.
யாருமறியாமல்
காந்தக் கண்களால்
என்னைக் கவ்வி எடுத்து
ஒளிப் பறவையாய்ப் பறக்கிறாய்
உன் பிரகாசத்தில்
தோய்ந்த என் விழிகளும்
இரட்டைச் சூரியனாய்
ஒளிரத் துவங்குகின்றன.
அன்பின் கதகதப்பும்
கனிவின் வெம்மையும் சூழ
எங்குமே இருளற்ற
இன்னொரு பிரபஞ்சத்தில்
எனைக் கொண்டு சேர்க்கிறாய்.
வளியும் ஒளியுமாய்
அலகுகள் கோதி
வண்ணச் சிதறல்களோடு
வாழத் துவங்குகிறோம்.
 

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

காத்திருப்பு

கரைகாணாக் காதலில்
செய்யப்பட்டவள்தான் அவள்
ஆனாலும் அவளுள் இருந்த கடல்
உள்வாங்கி விட்டது.
மணற்செதில்களாய்க் கிடக்கும் அவளைச்
சூரியனும் சந்திரனும் வருடிச் செல்கிறார்கள் தினம்
இனி அவள் மலர ஒரு யுகம் ஆகலாம்
பிரபஞ்சத்தின் கருந்துளையில்
இனியொரு வெடிப்புக்காய்க்
காத்துக்கிடக்கிறது 
அவளது பிரியம் என்னும் விதை.
 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

நிறுத்துதல்

பேச்சை எப்படியோ 
ஆரம்பித்துவிட முடிகிறது. 
எங்கே நிறுத்துவது 
என்பதுதான் தெரியவில்லை. 

வேறொண்ணுமில்லையே 
என்று நீ கேட்கும்வரை 
பேசிவிடுவதுதான் 
வெட்கத்தில் மூழ்கடிக்கிறது என்னை.
 

சனி, 16 அக்டோபர், 2021

யாரோ.

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்.
தூது சென்ற நான்
அவர்களின் காதலைச்
சுமந்து நிற்கிறேன்.
கிளையாய் இலையாய்ப்
பூவாய் மலர்ந்து கிடக்கும்
அக்காதல் விருட்சத்தின்
ஆணிவேரும் சல்லிவேரும்
என்னுள் வேரோடிக் கிடப்பதை
எப்படிக் கெல்லி எறிவது.

8888888888888888888888

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்
தூதுசென்ற நான்
யாரோடு நிற்பது ?

 
Related Posts Plugin for WordPress, Blogger...