பூந்தோட்டம்
பூந்தோட்டம் பார்த்தேனே
பூக்கள் எல்லாம்
சிரித்தனவே
மல்லி முல்லை ஜாதிப்பூ
வெள்ளைப் புன்னகை செய்தனவே,
பவளமல்லிக்குச் சிவப்பு காலு
அரளிப்பூவுக்குச் சிகப்பு உடலு
கொடிச்சம்பங்கிக்குப் பச்சை முகம்
செடிச்சம்பங்கிக்கு வெள்ளை முகம்
பல நிறத்தில் ரோசாப்பூ
மஞ்சள் பிங்க் ஊதா
டிசம்பர் பூவு
செண்டை கட்டும் கோழிக்கொண்டை
சிவப்பு வெல்வெட்டு உடம்பு அதுக்கு.
மகரந்தத்தை
நீட்டிக்கிட்டே
தலையாட்டுது
செம்பருத்தி
சூரியன் போகும்
திசையெல்லாம்
முகம் திருப்புது
சூரியகாந்தி
தண்ணிக்குள்ளே
தாமரைப்பூ
அதுக்கணைவா அல்லிப்பூ
குடை பிடிக்குது நாகலிங்கம்
நாட்டியமாடுது
நந்தியாவட்டை
ஊதா நிற வாடாமல்லி
மாசக்கணக்கில் வாடாதது.
வெள்ளை சாமந்தி மஞ்சள் சாமந்தி
விசேசம் வந்தா அணிவகுக்கும்.
பெருசு பெருசாப்
பூத்திருக்கும்
டேலியாப் பூவு கினியாப்
பூவு
அந்தியிலே மட்டும்
பூக்கும்
அழகழகாய் அந்திமந்தாரை
ஆரஞ்சு நிறக் கனகாம்பரம்
மனச மயக்கும் மரிக்கொழுந்து
கதம்பம் போல இணைஞ்சு நின்னு
கலகலப்பாச் சிரிக்குதுக.
பூவரசம்பூவும் ஆவாரம்பூவும்
புதருக்குள்ளே தாழம்பூவும்
காட்டு மல்லியும்
மணக்குது
பூந்தோட்டம் பொலியுது
மனுசர் நாமும் பூக்கள்
போல
மதம் சாதி இல்லாம
மனசைப் பார்த்துப்
பேசுவோம்
மக்கள் ஒண்ணாச்
சேருவோம்