எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 அக்டோபர், 2021

நிறுத்துதல்

பேச்சை எப்படியோ 
ஆரம்பித்துவிட முடிகிறது. 
எங்கே நிறுத்துவது 
என்பதுதான் தெரியவில்லை. 

வேறொண்ணுமில்லையே 
என்று நீ கேட்கும்வரை 
பேசிவிடுவதுதான் 
வெட்கத்தில் மூழ்கடிக்கிறது என்னை.
 

சனி, 16 அக்டோபர், 2021

யாரோ.

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்.
தூது சென்ற நான்
அவர்களின் காதலைச்
சுமந்து நிற்கிறேன்.
கிளையாய் இலையாய்ப்
பூவாய் மலர்ந்து கிடக்கும்
அக்காதல் விருட்சத்தின்
ஆணிவேரும் சல்லிவேரும்
என்னுள் வேரோடிக் கிடப்பதை
எப்படிக் கெல்லி எறிவது.

8888888888888888888888

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்
தூதுசென்ற நான்
யாரோடு நிற்பது ?

 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கற்கண்டு

துளித்துளியாய்
மொட்டுவிடத் தொடங்குகிறது மழை
மரங்களிலிலிருந்து வெண்பூக்கள்
உதிர்கின்றன.
வாடைக்காற்று உவகையுடன்
தழுவிச் சுழல்கிறது.
பால்கனியில் பாலாவி படர்ந்து
சிலிர்க்க வைக்கிறது என்னை.
இதழில் வீழ்கிறது ஒருபெருந்துளி
கற்கண்டாய்.
இதென்ன பேரவஸ்தையென
சுண்டிவிட எத்தனிக்கிறேன்.
இரு இரு.. பொறு..பொறு..
அது நான்தான் என்கிறாய்
 

புதன், 29 செப்டம்பர், 2021

இனிது

உன் நினைவுகளில் 
நான் உறையும்போது
காலமும் உறைந்து விடுகிறது
கடிகாரத்தின் முட்கள்
என்னை உருக்கும்போது
ரோஜாக்களாய் நிரம்பிக்
கிடக்கிறது உன் ஞாபகம்.
எவ்வளவு மறைத்தும்
என் முகம் வழி
பூத்து விடுகிறாய் நீ.
கசியும் காற்றில்
உன்னை முகர்கிறேன்.
நீயாக நுழைந்து
நானாக மாறிவிடும்
உன் வாசனைகளுடன்
வாழ்வது இனிது.

 

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பழக்கதோஷம்

மரங்கள் காத்திருக்கின்றன
பறவைகள்தான்
ஓய்வெடுக்க நேரமில்லாமல்
உணவுத் தேட்டையில்.
கூடுகளில் முட்டைகள்
தாமே பொறிந்து வருகின்றன
சிறு சிறகு கோதி
விழுந்தெழுந்து தாமே பறக்கக் கற்கின்றன
குஞ்சுகள் பறந்தபின்னும்
தாய்ப்பறவைகள்
பழக்கதோஷத் தேட்டையில்
பறந்துகொண்டே இருக்கின்றன. 

 
Related Posts Plugin for WordPress, Blogger...