எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நதி, மரம், சூரியன்.

ஓடிவரும் நதிநீரை
இலைதூவி வரவேற்கிறது மரம்.

வரவேற்கும் விருட்சங்களின்
வேர்வருடி இதமாக்குகிறது நதி.

நதியின் மேல் குதித்து
ஆனந்த நீராடுகிறது சூரியன்

குளியலாடும் சூரியனைக்
கரம் ஏந்திக் களிக்கிறது நதி.

மின்னும் நதியில் 
முகம் பார்த்துக் களிக்கிறது மரம் 

நதி வழி மரமேறி
ஊஞ்சலாடுகிறது சூரியன். 

கொஞ்சும் சூரியனோடும் கெஞ்சும் மரத்தோடும்
ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 


  

திங்கள், 12 அக்டோபர், 2020

ஞாபகச் சொட்டுகள்

ஒரே இடத்தில் 
உறைந்து கிடக்கும் 
எண்ண நீர்
உருகிக் கரைந்து
ஞாபகச் சொட்டுக்களாய் வடிய
வெகுநேரம் ஆகிறது. 

 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஜலதரங்க மழை

கருத்துத் திரண்டு
வலதும் இடதும் மோதி
மேளம் இசைக்கிறது
மேகம்

ஒன்றிலொன்று உருண்டு
முன்னும் பின்னும் புரண்டு
முரசொலிக்கிறது
இடி

வெளிச்சப் புல்லாங்குழல்களாய்ப்
பின்னிப் பின்னி இறங்கி
சாக்ஸபோனாகின்றன
மின்னல் கம்பிகள்

மரங்களைக் கிண்ணங்களாக்கி
இலைகளைக் கரண்டிகளாக்கி
ஜலதரங்கம் வாசிக்கிறது 
மழை

  

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சமரசங்களோடு வாழ்வது.

துளிர்க்கும்போதே ஓணான்களுக்கும்
துளிர்த்தபின் கத்திரிகளுக்கும்
துளிர்க்க ஏங்கி நீருக்கும்
துளிர்க்கரம் பிடித்தெழுப்பும் சூரியனுக்கும்
துளிர்ப்பிடி கருகிச் சருகாகும்போதும்
துளிர்த்த இடத்திலிருந்து ஒட்டறுந்து வீழும்போதும்
நன்றியும் பாசமும் காதலும் கொண்டு
மிதந்தும் பறந்தும் செல்ல வாய்ப்பதுதான்
சமரசங்களோடு வாழ்வது.

  

முள்முடி

கொரோனாவா
கதிர்வீச்சா
மூச்சுத் திணறலா
த்ராம்போஸிஸா
விதம் விதமாய்
முள்முடி மாட்டுவது 
வைரஸ் மட்டுமல்ல
பணவீக்கத்தில்
நசுங்கிக் கிடக்கும்
பொதுஜனமும்தான். 


  
Related Posts Plugin for WordPress, Blogger...