எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

கிறுக்குகள்:-



கிறுக்குகள்:-

கண்ணோடு கண் ஊடுருவி
மெல்லக் கிட்ட நெருங்கி
அடுத்த நிறுத்தத்தில் இறங்கி
மலருக்கு மலர் தாவும்
காதல் கிறுக்குகள்.

கண்களை மேகத்துள்
பதியனிட்டு விட்ட
சிந்தனைக் கிறுக்குகள்.

டேபிள்களுக்குள்
டைப்ரைட்டருக்குள்
பேப்பருக்குள் பேனாவுக்குள்
முகத்தை நட்டுக்கொண்ட
எழுத்தாளக் கிறுக்குகள்

என்னால்தான் இமயமலை
ஏந்திரிச்சு நிக்குது என்கும்
தற்பெருமைக் கிறுக்குகள்

திருவிழாக் கூட்டத்துள்
பின் வந்து பின்ச் பண்ணி
ஒளியும் காமக் கிறுக்குகள்

தூக்கத்தில் எழுப்பினால் கூடக்
கடகடவெண்டு ஒப்பிக்கும்
மனனக் கிறுக்குகள்

பட்டாம்பூச்சியைப் பிடிப்பதைப் போல
எழுத்துக்களைப் பொறுக்கிப் பிடிக்கும்
புத்தகக் கிறுக்குகள்

புதியதை விரும்பாத
படைக்கத் தெரியாத
மரபுக் கிறுக்குகள்

இராத்திரி நேரம் பிசாசு
உலாவரும்போது
குஷி பிய்த்துத் தள்ள
எழுதித் தள்ளும்
கவிதைக்கிறுக்குகள்.

நம்முடைய படைப்புகள்
சாகாவரம் பெறும் எனப்
பேதைத்தனமாய் எண்ணும்
ஏமாளிக்கிறுக்குகள்.

திட்டமிட்டுத் திட்டமிட்டு
எதையும் செய்யப்பழகிவிட்ட
இயந்திரக் கிறுக்குகள்

யாரையுமே லென்ஸ்
போட்டுக்கொண்டு பார்க்கும்
சந்தேகக் கிறுக்குகள்

திறமையிருந்தும்
வெளிக்காண்பிக்கத் தெரியாத
ஊமைக்கிறுக்குகள்

புத்தி பேதலித்த
புத்திசாலிக் கிறுக்குகள்.

இவர்கள் சித்தபிரம்மைக்காரர்கள் அல்ல.
சுத்தப் பைத்தியங்கள்.

உனக்குப் பிடித்திருப்பதும்
பைத்தியம்தான்
ஆனால்
உள்ளத்தில் நிரம்பியிருந்தும்
கொட்டத் தெரியாத
அன்புப் பைத்தியம் நீ.

-- 82 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

எல்லோரும் ஏதோ ஒன்றில்
நிச்சயம் அடங்கி விடுவோம்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இமயமலை...

அட...!

வாழ்த்துக்கள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...