ஈழப் பெண்களே...
நீங்கள் கற்புக்குப் போராடியபோது
இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள்.
நீங்கள் கண்ணீர் சிந்திய நாட்களில்
இங்கே கடையடைக்கும் உற்சவங்கள்.
நீங்கள் பசித்திருந்த வேளைகளில்
இங்கே கள்ளுக்கடைத் திறப்புக்கள்.
பிறந்தநாள் விருந்துகள்.
குப்பைத்தொட்டிக்குப் படையலிடும்
நாகரீகக் காட்டுமிராண்டிகள்.
உங்களுக்கு உதவி செய்ய முடியாத
எங்களது பொன்னான நேரங்கள்
திரையரங்குகளில் செம்மையுடன் கழிகின்றன.
உங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவியலா
எங்களது கறுப்புப் பணங்கள் இரும்புப்
பெட்டகங்களில் உறங்குகின்றன.
உங்களுக்கு உறைவிடங்கள்
அளிக்க முடியாதவை எங்களது
நகர நரகங்கள்.
உங்களை நினைத்துப் பார்க்காத
நினைத்தாலும் நினைவில் நிறுத்த
முடியாதவை எங்களது உப்பு மனங்கள்.
நாங்கள் மறத்தமிழர்கள்
மானுடத்தின் கேவலங்கள்.
இலங்கையில் நீ அடிமை மட்டும்தான்.
வழிப்பயணத்தில் நீ அகதி.
இங்கு வந்த பின்னோ
ஏழை ஈழத்தமிழா.. நீ .. நீ.. “ அனாதை.”