எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஆகஸ்ட், 2025

பூந்தடம்

பூங்காவை விட்டு வந்தபின்னும்
பாதங்களில்
பூந்தடம்..

புதன், 2 ஜூலை, 2025

குளிர்ச் சுனை

வழக்கம்போல் இல்லை
இன்றைய பகல்

எருமையைப் போல் நகரும் வெய்யில்
குளிர்ச் சுனைக்குள்
ஊறிக் கிடக்கிறது

பறவைகளில் கூச்சல் இல்லாமல்
வாடிக்கிடக்கிறது மாலை

தப்பும் நினைவுகளைக்
கோர்த்துவிடத் துடிக்கிறது இரவு

திங்கள், 2 ஜூன், 2025

காணாமல் போதல்

காணாமல் போகவேண்டுமென்பது
அவளது நெடுநாள் ஆசை.
எங்கிருந்து தொலைவது
எதிலிருந்து தொலைவது
எப்போது தொலைவது
வசதிகள் அவளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தன.
வெளி உலகம் பற்றிய பெரும் பீதி
அவளைப் பற்றிக் கொண்டிருந்தது.
உடல் நலம் வேறு தன் திட்டப்படி எல்லாம்
அவளை நகர்த்திக் கொண்டிருந்தது
திரும்பிய புறமெல்லாம் சுவர்.
திரை கூடிய ஒருநாள்
எந்த யத்தனமும் இல்லாமலே
தான் யாரென்பது கூட மறந்து
அவள் காணாமல் போயிருந்தாள் 

வெள்ளி, 2 மே, 2025

அஞ்சலி

ஏதோ ஒரு பத்திரிக்கையின்
அஞ்சலியில்
அவள் தன் முகத்தை
நிதானமாகப் பார்த்தாள்
எத்தனையோ முறை
இறந்திருக்கிறாள்
எனினும் இது
உறுதி பூர்வமான அறிவிப்பு.
அவள் நம்பியவர்கள்
துரோகமிழைத்தபோது,
ரகசியமாய்க் காதலித்து
ரகசியமாய் உறவுகொண்டு
அதை அவளறியாமல் உலவவிட்டபோது,
அரவணைத்து
முதுகில் குத்தியபோது,
அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தியபோது
எனப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது
அவளது இறப்பு.
யாருமறியாமல் இறந்து உயிர்த்தவள்
நரையோடிய புகைப்படம்
பார்த்துக் கவலை கொண்டாள்,
"இளவயதுப் படம் போட்டிருக்கலாம்"

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நா தாங்கி

நிசப்தக் கதவில்
உள்பூட்டோ வெளிப்பூட்டோ
நா தாங்கிதான்
கனத்துக் கிடக்கிறது
Related Posts Plugin for WordPress, Blogger...