எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2020

நிற்றல்

கிளையாட்டிக் கொண்டிருக்கின்றன
தோட்டத்து மரங்கள்
தலையாட்டிப் பார்க்கிறான்
குட்டித் தம்பு.
கழுத்து நின்றதும்
மரம் பார்ப்பதில்லை அவன்
ஆனாலும் தம்போக்கில்
கிளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன மரங்கள்.

  

திங்கள், 28 செப்டம்பர், 2020

வெய்யில் வளையங்கள்

வெய்யில் வளையங்கள்
பூமியின் மீது விழுகின்றன.
அவ்வளையத்துள் நழுவி
உருண்டோடும் பந்தாய் பூமி.
  

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

நிழல் வாழ்வு

நிழல் வார்த்தைகள்
உன் பின்னே 
ஓடி வருகின்றன.
விடியலில் 
உன் மதுக்கோப்பைக்குள்ளும்
இரவில் உன் வாயினுள்ளும் 
குடியிருக்கும் அவை
சாராயம் ஏறுவதுபோல்
சரசரவென ஏறுவதும்
பின் நாற்றத்தோடு வீழ்வதுமாய்
வாழ்கின்றன.
என்னடா இந்த நாறப் பிழைப்பென
அவை நாராசத்திலிருந்து கூவுவதை
ஒருபோதும் சட்டை செய்ததில்லை நீ.
இருந்தும் சொற்கள்
எச்சமாய் விழுந்தும் எழுந்தும்
இருந்தும் இல்லாமலும்
நிழல் வாழ்வில்.


  

வியாழன், 24 செப்டம்பர், 2020

இனிக்கும் வேம்பு

கதவைத் திறந்ததும்
குதூகலிக்கின்றன கிளைகள்
வரவேற்கவும் வழியனுப்பவும்
பூச்சொரிகின்றன
வாலாட்டி அமரும் 
குருவிகளுக்குத் தேனும்
சிலவற்றுக்குக் கொட்டையும்
சிலவற்றுக்குப் பழமும். 
வேம்பும் இனிக்கிறது
எல்லாப் பறவைகளுக்கும். 

  

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நிரம்புதல்

இரை எடுத்த பெருமகிழ்வில்
தொப்பையை அசைத்து
அமர்கின்றன பறவைகள்
வயிற்றை நிரப்பிய குதூகலத்தில்
வாயாடிக் கொண்டிருக்கின்றன கிளைகள். 

  
Related Posts Plugin for WordPress, Blogger...