எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்..



ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்..

ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்
ஊரின் குரல் ஓய்ந்துவிடும்.
குயில்கள் பேசுகின்றனவாம். ? பேசுமோ ?
அதுவும் ஊமைகள் ?
குதறப்பட்ட குயில்கள் அல்லவா ?
அதுதான் பேசுகின்றன போலும். !
அழகிய குயில்களைப் பெண்ணாக மதியாமல்
ஆடுமாடு வியாபாரம் பேசவந்திட்டால்
அவை என்ன செய்யும். ? பாவம். !
நாய் நரி பன்றியெல்லாம் பெண்பார்க்க வந்துவிட்டு
நாவினிக்க வயிறு நிறைய உண்டுவிட்டு
நாற்பதாயிரம் ரொக்கம் நாற்பது பவுன் நகை என்று
நாக்கூசாமல் கேட்டுவந்தால்
நற்குயில்கள் பேசாமல் என்ன செய்யும் ?
நல்லிதயம் கொண்டவள் மேல் அன்பு பூண்டு
நாள்தோறும் கள் குடியாமல் மனைக்குச் சென்றால்
ஊமைக்குயில்கள் அன்பு சொரியும். !
சக்கை வேறு சாறு வேறாய்ப் பிழிந்துவிட்டு
சக்கையை மட்டும் சகதியிலே தூக்கிப் போட்டால்,
சக்தியற்ற சிறுகுயில்தான் என்ன செய்யும்.
சக்தி பெற்றால் சிறிதளவு பேசச் செய்யும். !
ஆனால்
அது மிரண்டால் காடு கொள்ளாது. !
ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்
அவற்றின் பண்பைக் காணாமல்
பணத்தை மட்டுமே கண்ட
அழகை இரசிக்காமல்
ஆராதிக்கத் தெரியாமல்
ஆபரணத்தை மட்டும் கண்ட
காட்டுமிராண்டிகளை
ஆசைதீர நாலு வார்த்தை கேட்க விரும்பும். !
அந்த வார்த்தைகளிலே தன் கோபத்தை வெளிப்படுத்தும்.
அந்தக் குயில்கள் இசைக்கும் மௌனகீதம்
என் காதுகளில் விழுகின்றது.
எனவே அவை பேசப்போகும் நாள்
நெடுந்தூரமில்லை.
ஊமைக்குயில்களே பேசவாரம்பித்தால்
உலகின் குரல்கள் ஓய்ந்துவிடும்.
எனவே ஊமைக்குயில்களே !
விரைவில் பேச ஆரம்பியுங்கள். !

 -- 84 ஆம் வருட டைரி.

2 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...