எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 டிசம்பர், 2023

ஆசுவாசம்.

கற்களின் வெடிப்பிலிருந்து
பச்சை இரத்தநாளமாய்க் 
கிளைத்தெழுகின்றன தாவரங்கள்.
கரியமிலம் உண்டு
பிராணவாயு விடுத்து
ஆசுவாசமாய் மூச்சு விடுகிறது பூமி.

திங்கள், 23 அக்டோபர், 2023

அம்மாவான அம்மு

பிரியா விடைகொடுத்து
வீடெங்கும் பொம்மைகளோடு
விளையாட விட்டுவிட்டு
வேலைக்குச் சென்றுவிடுகிறாள் அம்மா.


உணவூட்டித் தாலாட்டி
ஒவ்வொரு பொம்மையையும்
உச்சிமுகர்கிறாள்
அம்மாவான அம்மு. 

வியாழன், 28 செப்டம்பர், 2023

உச்சிக்கும் பூமிக்கும்..

சூரியக் கனலிலிலிருந்து
பிரிந்து பறக்கின்றன
சாம்பல் மேகங்கள்.

பறவைகள் இங்குமங்குமாய்
விசிறிக் கொண்டிருக்கின்றன 
வெளிறிய வானத்தை

மரக்கிளைகளை முட்டி 
மறைந்துவிடுகிறது 
ஆகாய விமானம்

கழுத்திலும் கண்ணோரத்திலும்
கோடிடும் முதுமைச் சாலையாய்ப்
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன.

பருவத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்
காகபுஜண்டராய்க் கண்காணித்து அலுக்கிறது
உச்சிக்கும் பூமிக்குமாய்ப் புதையும் மனது. 


செவ்வாய், 13 ஜூன், 2023

கடின நெடி

ஒரு உன்மத்தம்தான் உன்னைச் செலுத்துகிறது
ஒன்றை உன் உரிமையானதாய்க் காட்ட.
விழுதைப் போலப் பற்றி இருக்கிறாய்
விழுந்துவிடலாம் என்றாலும்.
நீ பூசிக்கொள்ளும் ஒவ்வொரு சிரிப்பிலும்
வாழ்ந்த கணங்களின் கடின நெடி.
கடக்கின்றவர்க்குப் பழைய கள் என்றாலும்
உன் கரங்களில் எப்போதும் புதிய மொந்தை
மனச்சுரப்பில் நீயாய்ச் சுரந்து நீயாய்ச் சேமித்து
நீயே மாந்தி நீயே மயங்கி
காலங்கள் கடக்கட்டும் உன் சிந்தை மயக்கத்தில்
தெளியலாம் என்றேனும் அன்று 
உன் முன் பாளைகள் வெடித்திருக்கும்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

பெருக்கம்

மஞ்சளும் சந்தனமும்
கொட்டிக்கிடக்கிறது
சொல்கேட்ட கல்யாண விநாயகர் சந்நிதியில்.

பரிட்சை வேண்டுதல்களை ஏற்று
வேல்கொண்டு வினைதீர்க்கக் காத்திருக்கிறார்
நெல்லி மரத்து விநாயகர்

திருமண பந்தத்தில் தானும் மாட்டாமல்
மாட்ட விரும்பாதவரையும் ரட்சித்து
ராம ராம என்கிறார் ஆஞ்சநேயர்

எல்லாரும் எம்மக்கள்தான்
என்கிறாள் சூலத்தோடு அமர்ந்திருக்கும்
காளியம்மா. 

சுற்றி வருகையில் நூறாண்டுகளாய்க்
கொட்டிக்கிடந்த நெல்லி இலைகளும்
சிறுமுட்களும் நெருடுகின்றன பாதத்தை.

கோவில்களுக்குப் பின்
தகரப் பாதுகாப்பில் மறைந்திருக்கிறது
தாமரைக் குளம்

சுற்றிலும் பனையடிக் கருப்பர், 
பதினெட்டாம்படிக் கருப்பர், 108 பிள்ளையாருடன்
புதிதாய் எழுந்தருளி இருக்கிறார் யோக சனீஸ்வரர்.

எங்கள் ஐயாவின் காலத்திலிருந்து
நாங்கள் பல்கிப்பெருகியதைப் போல் 
நெல்லி மரத்தாரும் தன் படை பட்டாளத்தைப் பெருக்கியிருக்கிறார்.

ஐயா உம் அணிவகுப்பு அருமைதான், பெருமைதானெனத்
தினம் வரும் சூரியனோடு சிலாகித்துச்
சுற்றி வந்து மகிழ்ந்து நிறைகிறோம் நாமும். 
Related Posts Plugin for WordPress, Blogger...