எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2020

சுழல்

ஒவ்வொரு அடியாக
இரும்பான உடல்தூக்கி
ஏறுவது கடினமானதுதான்
பறவையைப் போல
கால்வளைத்து
எளிதாக இறக்கிவிடும்
சுழல்படிகளில்

  

திங்கள், 23 நவம்பர், 2020

வழி

சுங்கச்சாவடியின்
தடுப்புக் கம்பி
மந்திரவாதியின் கோலாய்
நிமிர்ந்து வழிவிடுகிறது
ஃபாஸ்டாகை வாசித்ததும். 
  

வியாழன், 19 நவம்பர், 2020

தழைதல்

தழைந்து தழைந்து
எட்டிப் பார்க்கும் 
கிளைகளை வெட்டிவிடலாம்
தழையத் தழைய
படுமுடிச்சேறி
தாழ்ந்து செல்லும் வேர்களை..?
  

செவ்வாய், 17 நவம்பர், 2020

இழுவை

இழுவை
இறைத்திறைத்து ஊற்றியும்
நிரம்பிக் கொண்டிருக்கிறது கிணறு.
திணறித் திணறித்
தத்தளித்து மூழ்குகிறது வாளி
முக்குளித்து மேலேறுகிறது
கயிறில் தொற்றி.
சகடையையும் கிணற்றையும்
இணைத்திழுத்து இணைத்திழுத்துக்
களைத்து கிடக்கிறது இழுவை.
  

நித்தமும் நித்தமும்

கன்மவினை தொடர
மனிதப் பிறப்பெடுத்தாலும்
மாறுவதில்லை
பன்றியின் இயல்பு
அல்லதை உண்டு
அல்லதாய் செழிக்குமதன்
மாமிசம் உண்பார்க்கும்
அதேதான் தொற்றும். 
நிந்தனையில்லை
நித்தமும் நித்தமும்
நிஜமென்றுணர்ந்ததாலதன்
நிலைபற்றி உரைத்தேன்
  

திங்கள், 16 நவம்பர், 2020

அரக்கு.

சில துளிர்கள்
அரக்காகவே கருத்தரிக்கின்றன
செடிக்குத் தண்டமாய்
பூமிக்குப் பாரமாய்
உதிர்க்கவும் இயலாமல்
ஒட்டவும் இயலாமல்
திகைத்துப் போய் நிற்கின்றன
இயலாமைச் செடிகள். 
  

எஞ்சுதல்

உடல் ஒரு தாவரம்
மூளைதான் கிளைகள்
சிந்தனை இலைகள் விரிகின்றன
பசுமையாய்...
சில பழுப்பேறி உதிர்கின்றன.
எப்போதோ நாசியேறி
சில ரோஜாக்களும் மல்லிகைகளும்
முல்லைகளும் முகிழ்க்கின்றன.
பூவேறிப் பிஞ்சேறிக் 
காயேறிக் கனியுதிர்ந்து
முதிர்ந்து மேலுரிக்கும்போது
எஞ்சுகின்றதொரு மரக்கொம்பு.
  

வியாழன், 12 நவம்பர், 2020

தூரத்துப் பச்சைகள்

வளைந்து நெளிந்து செல்கிறது சாலை
வாய்க்காலின் நெளிவு சுளிவுகளைக் கற்று.
கால் நனைத்துக் கொண்டிருக்கின்றன வீடுகள்,
விலகி இருக்கக் கற்கின்றன தோப்புகள்.
எல்லாவற்றிலும் பாய்ந்து கைநரம்பாய் வெடித்துப் பின்
காணாமல் போகிறது ஒரு பச்சைப் பாம்பு. 
மலைகள் காற்றோடு சூரியனையும்
தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.
வாய்க்காலின் அன்பில் மூழ்கிக் கிடக்கிறது வயல்.
பொன்வண்ண வெய்யிலில்
வயலெங்கும் பாவி மீன் பிடித்துண்கிறது கொக்கு
தலையசைத்துக் களித்துக் கொண்டிருக்கின்றன
தூரத்துப் பச்சைகள்.
 
  

செவ்வாய், 10 நவம்பர், 2020

கூந்தல் நாகம்

தழைந்து கிடக்கிறது தாழை
கூடவே இழைந்து கிடக்கின்றன 
கரு நாகங்களும்
மூலக்கூறு இணைப்புப்போன்ற
நாகசடைப் பின்னல்களில் 
மடிப்பு மடிப்பாய்
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன 
வெட்டுப்பட்ட மடல்கள்.
தாழைக்குள் கிடக்கும் கருநாகமாய்
ஒளிந்து கிடக்கிறது அசையாமல்
வளைந்து நெளியும் கூந்தலும்

  

வெள்ளி, 6 நவம்பர், 2020

கருத் துகள்கள்

வண்டுகள் வந்தமரப்
பூக்களுக்குள்ளிருந்து
எட்டிப்பார்க்கின்றன மகரந்தங்கள்
பூப்பூவாய்ப் பூப்பூவாய்ப்
பறந்தலையும் வண்டுகளோடு
பூந்தூறலாய்ப் பயணப்படுகின்றன
செடிகளின் கருத் துகள்களும் ..

Related Posts Plugin for WordPress, Blogger...