எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

எஞ்சுதல்.

செவ்வலை மீன்களாய் 
மிதந்து வருகின்றன எறும்புகள்
காய்கறிக்குள் ஒளிந்திருக்கும்
புழு இழுக்க..

இழுத்து இழுத்துக் 
காணாமல் போகின்றன
எறும்புகளும் புழுக்களும்
காய்கறிக் கூடுமட்டும் எஞ்ச..
  

செவ்வாய், 29 டிசம்பர், 2020

எறும்பிலிருந்து அரவமாய்..

எங்கெங்கோ இருக்கும் 
தீனியைத் தேடியபடி
அலைகிறது எறும்பு மனம். 

வரிசைகட்டி
வளைந்தோடி
புற்றாய்ச் சேர்க்கிறது.

கரையான்கள்
கவிழ்ந்துண்ண
செம்மேனியாய்ச் சமைகிறது புற்று

துளைகளுக்குள் நாகம்புக
பாலூற்றி வணங்கத் தொடங்குகிறது
கால சர்ப்ப தோஷம்

எறும்பிலிருந்து திடீர் அரவமாய்
உயர்ந்தமண்
கடவுட் காட்சியாகிறது. 

  

சனி, 19 டிசம்பர், 2020

மனச்சாயம்.

கோரைப்பல் காட்டாமல்
வாலைச் சுழட்டாமல்
வாஞ்சாலையாய் இருப்பதுபோலவே
கிளம்புகிறது ஒரு பூதம்

வேஷமெனத் தெரிந்தாலும்
தின்னக் கொடுக்கிறேனென்னை.
வெளிறித் தோலுரியும் அதனுடன்
வெளுக்கிறது என் மனச்சாயமும். 
  

செவ்வாய், 15 டிசம்பர், 2020

காத்திருப்பு

அலைமேல் அலையடிக்க
விழுந்து எழுந்து
கால் நனைக்கிறது கரை.

அலைகள் அடங்கியவுடன்
முக்குளிக்கலாமெனக்
காத்திருக்கிறது கடல். 



  
Related Posts Plugin for WordPress, Blogger...