எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

காத்திருப்பு

கரைகாணாக் காதலில்
செய்யப்பட்டவள்தான் அவள்
ஆனாலும் அவளுள் இருந்த கடல்
உள்வாங்கி விட்டது.
மணற்செதில்களாய்க் கிடக்கும் அவளைச்
சூரியனும் சந்திரனும் வருடிச் செல்கிறார்கள் தினம்
இனி அவள் மலர ஒரு யுகம் ஆகலாம்
பிரபஞ்சத்தின் கருந்துளையில்
இனியொரு வெடிப்புக்காய்க்
காத்துக்கிடக்கிறது 
அவளது பிரியம் என்னும் விதை.
 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

நிறுத்துதல்

பேச்சை எப்படியோ 
ஆரம்பித்துவிட முடிகிறது. 
எங்கே நிறுத்துவது 
என்பதுதான் தெரியவில்லை. 

வேறொண்ணுமில்லையே 
என்று நீ கேட்கும்வரை 
பேசிவிடுவதுதான் 
வெட்கத்தில் மூழ்கடிக்கிறது என்னை.
 

சனி, 16 அக்டோபர், 2021

யாரோ.

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்.
தூது சென்ற நான்
அவர்களின் காதலைச்
சுமந்து நிற்கிறேன்.
கிளையாய் இலையாய்ப்
பூவாய் மலர்ந்து கிடக்கும்
அக்காதல் விருட்சத்தின்
ஆணிவேரும் சல்லிவேரும்
என்னுள் வேரோடிக் கிடப்பதை
எப்படிக் கெல்லி எறிவது.

8888888888888888888888

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்
தூதுசென்ற நான்
யாரோடு நிற்பது ?

 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கற்கண்டு

துளித்துளியாய்
மொட்டுவிடத் தொடங்குகிறது மழை
மரங்களிலிலிருந்து வெண்பூக்கள்
உதிர்கின்றன.
வாடைக்காற்று உவகையுடன்
தழுவிச் சுழல்கிறது.
பால்கனியில் பாலாவி படர்ந்து
சிலிர்க்க வைக்கிறது என்னை.
இதழில் வீழ்கிறது ஒருபெருந்துளி
கற்கண்டாய்.
இதென்ன பேரவஸ்தையென
சுண்டிவிட எத்தனிக்கிறேன்.
இரு இரு.. பொறு..பொறு..
அது நான்தான் என்கிறாய்
 
Related Posts Plugin for WordPress, Blogger...