எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

மேகத் தோணி.

மேகத் தோணி மிதக்கிறது
துடுப்பில்லாமல்.
கன்னத்தில் கைவைத்து
எட்டிப் பார்க்கிறது நிலவு
எப்போது தரையிறங்குவோமென.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

முதுமைச் செதிலும் வேரும்.

சில வருடங்களுக்கு முற்பட்ட
நாம் இல்லை இப்போது
நம் கிறுக்கல்களில்
தூசு படிந்திருக்கிறது.
முதுமைச் செதில் உதிர
அதன் மேலேயே ஒப்பனை செய்து கொள்கிறோம்
பேசத் தெரியாத உனக்கு
இன்று வார்த்தைகள் மிச்சமில்லை
மரத்தைப் போல உலுக்கிக்கொண்டே இருக்கிறாய்
எல்லாவற்றிலும் விட்டு விடுதலையாகி
நீ வேராய் எஞ்சும் தருணத்துக்காய்க் காத்திருக்கிறேன்
கிளையா அதில் கிளியா எனப் பகுக்கமுடியாமல்.
நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி
வலம் வந்துகொண்டிருக்கின்றன
சூரியனும் சந்திரனும்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கரடியும் பட்டாம்பூச்சியும்.

*தெரிந்தவர் தெரியாதவர்
பேதமற்று இதழ் மலர்கிறது.
பேருந்தின் முன்சீட்டில்
பூத்த குழந்தை.

**************************************

 
*இறக்கைகள் உண்டு..
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.
*வார்த்தைகள் ஸ்தம்பித்த
மௌன உரையாடல்
தொடர்ந்து செல்கிறது
தன்னைத் தான் விடுவித்து
நாட்காட்டி திசைகாட்டி இன்றி
கனத்துச் சோம்பியிருக்கும்
கரடியைத் தூக்கிப் பறக்கும்
பட்டாம்பூச்சியின் பின்.
 

நவரசம்.

*எதனாலும் உன்னால்
வீழ்த்த முடியாது என்னை.
நான் தாங்கி இருப்பது
அன்பெனும் பேராயுதம்..

*வாழ்வின் பக்கங்களில்
அர்த்தம் தேடிச் சலிக்கிறது
மனம்

*வெறுப்புமிழ்ந்து செல்கிறது
மனப்புழு.
உழல்வதன்முன்னும்பின்னும்
கசப்பின் கரகரப்போடு நீள்கிறது
உண்டதன் மிச்சம்.


*பசிய ரேகைகளாய்
சுருங்கிக்கிடக்கிறது
குளத்தின் வயோதிகம்.


*வண்ணச்செதில்களாய்க் கட்டிடங்கள்

இரவில் நீந்திக்கொண்டிருக்கின்றன
கரையோர நீரில்.
 
*எல்லார் கரத்திலும் ஒரு கண்ணாடி
உலகைப் பார்க்க அல்ல
தன்னை மட்டுமே பார்க்க
 
*விளையாடும்போது
சேர்த்துக்கொள்ளும் குழந்தைகள்
வேகப்படும்போது விட்டுவிடுகிறார்கள்.
  
*பொம்மியின் கைப்பிடியில்
பொம்மை அகப்படும்வரை
நான் அவள் கைப்பொம்மை.
 
*அன்பைத் தேடுமிடத்தில் ஞானமும்
ஞானம் தேடும் இடத்தில் அன்பும் கிடைக்கிறது.
 
  

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பிஞ்சு எச்சில்.

சாத்தியங்களுக்குள்
சாமர்த்தியமாய் மறைத்துக் கொள்கிறோம்
எங்கள் பற்குறிகளும் நகக்குறிகளும்
அவற்றின் தடங்களும்
சொற்ப நாட்களுக்குப் போதும்.

வருடங்களாய்க் காத்திருந்தவளுக்கு
வருடல்கள் நினைவுச் சின்னங்கள்.
விதம்விதமான இனிப்பிலிருந்து
இச்சுகள் வரை திகட்டிக் கிடக்கிறதென்மேல்.

வேகமாய் வரும் டாக்ஸியின்
கதவை அறைந்து மூடுகிறேன்
அடுத்த வஸந்தகாலத்தில்
திறந்துகொள்ளலாமென்று.
நினைவின் மூட்டைகளைப் போலக் கனக்கின்றன
வருடத்துக்கான பொருளின் மூட்டைகள்.

ஃப்ளைட்டின் கதவுகள் விசாலமானவை
அழகிகளும் அவர்கள் வழங்கும்
போர்வைகளும் போதுமானதாயில்லை
குஞ்சுக் குளிர்ப் பாதங்களும்
பிஞ்சு எச்சிலும்பட்ட
என் கன்னத்தில் வழியும்
கண்ணீரைத் துடைக்க.

புதன், 24 ஆகஸ்ட், 2016

என் ப்ரிய அப்பாவுக்கு,



என் ப்ரிய அப்பாவுக்கு,

என் நினைவுத் தாள்களில்
உங்கள் பிறந்தநாள்
ப்ரியத் தாமரையாய்
மலரும்.

மறக்கமுடியுமா
இந்நாளை.
நாற்பத்துமூன்று
வருடங்களாக
உங்கள் பிறந்ததினம்
வருகிறது.
என் நினைவின் கருவிலோ
புதுப்பரிமாணங்களில்
புதிதுபுதிதாய் நீங்கள்
ஜனித்துக்கொண்டே
இருக்கின்றீர்கள் அப்பா !
உங்கள் ஜனனம்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

அப்பா..!
நாங்கள் ஊர்க்குருவிகளாய்த்தான்
இருந்தோம்.
எங்களை வழிநடத்தி
உயரவைத்த
இராஜாளி நீங்கள்.

வளர்தலும் தேய்தலும்
நிலவுக்குண்டு
ஆனால்
உங்கள் அன்போ
வளர்தல் மட்டுமே அறிந்தது.

ப்ரச்சனைகள் என்ற
அலைகளுக்குள்ளும்
காற்றுக்குள்ளும் சிக்கியும்
கலங்காமல்
எங்களைக் கரை சேர்த்த
மாலுமி நீங்கள்.

அப்பா !
உங்க நினைவு
காயாத ஓவியமாய்
இன்னும் என்னுள்
புதிதாய்..

அப்பா!
உங்களைப் புகழ முயன்று
நான் தோற்றுப் போகின்றேன்.
நீங்களே ஒரு கவிதை.
உங்களுக்கும் ஒரு கவிதையா. 

-- 86 ஆம் வுடைரி. 

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

வசந்தங்கள் பிறக்கின்றன வருடந்தோறும். :_



வசந்தங்கள் பிறக்கின்றன வருடந்தோறும். :_

மரத்தின் கிழவாய்கள்
என்னை மென்று துப்ப
தளிர்நடை பயின்றேன்.
சலனம் அடங்கிட்ட
மனக்குளத்தில்
ஆசைக்கல்லெறிந்து
ஆட்டம் பார்க்காதே !
அது அசிங்கம். !
வெளியே கூறிவிட்டால்
வெறுமையாகிவிடுமோவென
உள்ளத்துப் பேழையில் பதுக்கியுள்ளேன்.
அடக்கமுடியாமல்
திணறும்போது
கொட்டிவிடலாம் வெளியில்
எனத் தோன்றும்.
பின்பு இரகசியங்கள்
பெட்டகத்தில் உறங்க வேண்டும்.
பிறர் வாய்களால்
உசுப்பப்படக்கூடாது எனத்
தோன்றும்.
இருதலைக் கொள்ளி
எறும்பாய்
உற்சாக வெள்ளம்
பொங்கு நுரையுடன்
குமிழுடன் வெடிக்கும்.
அன்பு செய்வதை
நண்பர்களிடம் கூடக்
கூறக் கூடாது.
ஏனெனில்
அவர்களும்
ஒருநாள் என்னை
எள்ளி நகையாடலாம்.
நான் அன்பு செய்வது
உனக்குக்கூடத் தெரியக்கூடாது.
ஏனெனில்
நீ கூட மாறலாம்.
நான் விரும்புவது
எனக்கு மட்டுமே
தெரிந்ததாக
புரிந்ததாக
உடையதாக
எனக்கு மட்டுமே உரியதாக
இருக்க வேண்டும்.
நான் சிரித்தால் சிரித்து
நான் அழுதால் அழுது
என்னோடு மகிழ்ந்து
துன்ப வெள்ளத்தில்
இருந்து கரையேற்றி
என்னுடன் இருந்து
நான் சொல்வதற்கெல்லாம்
தலையாட்டி
இவ்வளவு தேவையில்லை.
நீ உன் அன்பைப் புலப்படுத்த. !

அந்த அளவு புரிந்துகொள்ளாத
முட்டாள் நானல்ல. !
அடிபட்டவனுக்குத்தானே
அடுத்தவன் வலி புரியும்.
நான் அவர்களைப் போல
உன்னை ஏமாற்ற முடிவு
செய்யவில்லை.
உன் காயத்திற்கு அன்போடு
மருந்து போட முன்வருகின்றேன்.
தயவுசெய்து என்னைத்
தெய்வமாக்காதே !
ஏனெனில் தெய்வங்கள்
கல்லால் செய்யப்படுவது
அவை கல்லாகவே
இருக்க வேண்டுமென்பதற்குத்தான்.
எனக்காக எனக்கும் சேர்த்து
என்னைக் காண நீ
துடிப்பதையும்
யுகக்கணக்காய்ப்
பகீரத்தவம் செய்வதையும்
கண்டு சந்தோஷிக்கிறேன்.
என் முகத்தைக் காண நீ துடிப்பது
புரிந்து ரொம்பவும் இன்பத்தில்
அதிர்கின்றேன்.
என் காத்திருத்தல் முடிந்துவிட்டது.
எனக்காக நீ என்னை
எதிர்பார்த்துக் காத்திருக்கத்
தொடங்கி விட்டாய்.
நான் எதிர்பார்த்ததுதானே இது. !
பிறர்போல் நானுன்னை ரொம்பக்
காக்க வைக்க மாட்டேன்.
எனக்காக நீ அழுவதையும்
என் மௌனம் கண்டு
அரற்றுவதையும்
என்னைக் கண்டு 
புன்னகை பூப்பூப்பதையும்
என் புன்சிரிப்பைக் கண்டு
துள்ளுவதையும்
எனக்காக
எனக்காகவே
எனக்காக மட்டுமே
நீ ஆடுவதையும்
பாடுவதையும்
காணக்காண
நான் உன்னை
மீண்டும் மீண்டும்
விரும்புகின்றேன்
உனக்காகவே. !
உன் இந்த
வெறித்தனமான
பைத்தியம் பிடித்த
இதயப்பூர்வமான
காட்டுத்தனமான
உன் அன்புக்காகவே. !

-- 84 ஆம் வருட டைரி. 

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்..



ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்..

ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்
ஊரின் குரல் ஓய்ந்துவிடும்.
குயில்கள் பேசுகின்றனவாம். ? பேசுமோ ?
அதுவும் ஊமைகள் ?
குதறப்பட்ட குயில்கள் அல்லவா ?
அதுதான் பேசுகின்றன போலும். !
அழகிய குயில்களைப் பெண்ணாக மதியாமல்
ஆடுமாடு வியாபாரம் பேசவந்திட்டால்
அவை என்ன செய்யும். ? பாவம். !
நாய் நரி பன்றியெல்லாம் பெண்பார்க்க வந்துவிட்டு
நாவினிக்க வயிறு நிறைய உண்டுவிட்டு
நாற்பதாயிரம் ரொக்கம் நாற்பது பவுன் நகை என்று
நாக்கூசாமல் கேட்டுவந்தால்
நற்குயில்கள் பேசாமல் என்ன செய்யும் ?
நல்லிதயம் கொண்டவள் மேல் அன்பு பூண்டு
நாள்தோறும் கள் குடியாமல் மனைக்குச் சென்றால்
ஊமைக்குயில்கள் அன்பு சொரியும். !
சக்கை வேறு சாறு வேறாய்ப் பிழிந்துவிட்டு
சக்கையை மட்டும் சகதியிலே தூக்கிப் போட்டால்,
சக்தியற்ற சிறுகுயில்தான் என்ன செய்யும்.
சக்தி பெற்றால் சிறிதளவு பேசச் செய்யும். !
ஆனால்
அது மிரண்டால் காடு கொள்ளாது. !
ஊமைக்குயில்கள் பேசவாரம்பித்தால்
அவற்றின் பண்பைக் காணாமல்
பணத்தை மட்டுமே கண்ட
அழகை இரசிக்காமல்
ஆராதிக்கத் தெரியாமல்
ஆபரணத்தை மட்டும் கண்ட
காட்டுமிராண்டிகளை
ஆசைதீர நாலு வார்த்தை கேட்க விரும்பும். !
அந்த வார்த்தைகளிலே தன் கோபத்தை வெளிப்படுத்தும்.
அந்தக் குயில்கள் இசைக்கும் மௌனகீதம்
என் காதுகளில் விழுகின்றது.
எனவே அவை பேசப்போகும் நாள்
நெடுந்தூரமில்லை.
ஊமைக்குயில்களே பேசவாரம்பித்தால்
உலகின் குரல்கள் ஓய்ந்துவிடும்.
எனவே ஊமைக்குயில்களே !
விரைவில் பேச ஆரம்பியுங்கள். !

 -- 84 ஆம் வருட டைரி.

Related Posts Plugin for WordPress, Blogger...