எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 மார்ச், 2015

நானே



நான் இரு கூறு
எனக்குள்ளேயே
இருவகைப் போராட்டங்கள்.
நானே நன்மை
நானே தீமை
நானே பொய்மை
நானே வாய்மை.

எனக்குள்ளே
ஒரு யுத்தம்
நடந்துகொண்டிருக்கின்றது.
கத்தியில்லாமல்
இரத்தத்துடன்.

எனக்குள்ளே
முடங்கி மடங்கிக்
கிடந்த ஒரு ஆத்மாவின்
கோபக் கத்தல்கள்.
செவிட்டுக் காதைக்
கிழித்துப் போடுகின்றது.

புதிது புதிதாய்ப்
புதுரத்தத்துடன்
ஜனித்துக்கொண்டே
இருக்கும் காயங்கள்
தழும்பாக ஆக முடியாமல்
காயங்களாகவே கிடக்கின்றன.
சுயமருத்துவம் செய்யக்கூடப்
ப்ரியமில்லை.

கிடக்கட்டும்
என்ன வந்துவிடப் போகின்றது ?
நான் ஒரு இருகூற்றுக்கல்
அலைக்கு அருகில்
குத்துக்காலிட்டிருக்கும் பாறை.

அலைஅடிக்க அடிக்கத்
திருப்பி அடிக்கமுடியாமல்
உள்ளே புகையும்
சின்னப் பாறை.

காற்று ஆக்ரோஷம் காண்பிக்கத்
திருப்பி ஆக்ரோஷம் காண்பிக்கத் தெரியாத
காண்பிக்க முடியாத சின்னப் புல்.

இந்தக் காற்றை எனக்குப் பிடிக்கவில்லை.
சலனப்பட்ட காற்று.
என்னையும் சலனப்படுத்துகின்றது.
இந்தச் சின்னப் பறவையின் வழியில்
குறுக்கிட்டுத் திசைமாறச் செய்கின்றது.

நானே ஆக்ரோஷிக்கும் அமைதி
நானே செத்துப்போன நிம்மதி
நானே நிசப்திக்கத் தெரியாத மௌனம்.
நானே கொட்டத் தெரியாத கோபம்
அள்ளத் தெரியாத சந்தோஷம்.
வெளிப்படுத்தத் தெரியாத நட்பு
உள்ளே பதுக்கி வைக்கத் தெரியாத ப்ரியம்.

4 கருத்துகள்:

kingraj சொன்னது…

அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... மிகவும் ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கிங் ராஜ்

நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...