எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

காதல் குளிர்.



சுகமான ரோஜா வரிகளுக்கிடையில்
இந்த முட்களையும்
இடைச்சொருகுவது ஏன்?
அன்பு வாடைக்காற்று
அதிகமானால்தானே குளிரும்.

*********************************
 
பற்றாக்குறை
உனக்கும் சுயமுண்டு
என்னிடம் தவிர

கண்ணாடியில் முகம் பார்த்தேன்
அட
கலங்குவது என் கண்கள் மட்டுமல்ல
உன் உருவமும் கூடத்தான்.

ஒரு சின்ன விண்ணப்பம்.
என் பட்ஜெட்டை மட்டும்
பற்றாக்குறையாகவே போடு
அன்பு காய அருகேயே
இருக்கின்றேன்

உனக்கென்ன குளிர்காய்ச்சலா
குளிரிச் சுருண்டு கிடக்கின்றாய்
கூதற்சுவாலைகள் என்னை
விறைக்க வைக்கின்றன.

**********************************

என் உதடுகள் மெல்ல அசங்கின
விகசிப்பது அவை மட்டுமல்ல
கசங்குவது உன் பெயரும்தான்

நிறையக் கேட்க எனக்கு
விருப்பம்தான்
என்றைக்குக் காது குளிரச்
சொல்லப் போகின்றாய்.

ஆகாயம் மஞ்சள் பூசி நீலம் அணிந்து
கறுப்புப் போர்த்தி மறுபடியும்
மஞ்சள் பூசி நீலம் அணிந்து
கறுப்புப் போர்த்தி எத்தனைதரம்
வேஷங்கட்டிக் கொண்டிருக்கிறது.
என்றைக்குச் சொல்லப் போகின்றாய்

மெத்தை விரித்து அதற்குச் சமுக்காளம்
போர்த்தித் தலையணை பொருத்திப்
போர்வை ஒதுக்கி ( நோட்டை விரித்துக்)
குப்புறக் கவிழ்ந்து தினம் நடக்கும்
என் பேனாத் தவத்துக்கு
உன் தரிசனம் எப்போது.?

தனக்கு மட்டும் தந்த தரிசனம் என
எண்ணிப் புளகித்துப் போகும்
முட்டாள் பக்தை நான்
நீ ஒரு டி வி ஸெட் என்பது
மறந்து போகின்றது.

சின்னக்குழந்தை தயக்கத்துடன்
பின் சாய்ந்து தடுமாறி
உடல் நிமிர்த்தித் தட்டித் தட்டிச்
சுவர்பிடித்து கால்பதித்து
முன் நகரும் சின்ன ஆசைகள்.

நீயொரு வீடியோ காஸட்
பிடித்தவர்களிடம் திரும்பத் திரும்ப
உன்னைப் போட்டுக் காண்பிப்பதில்

**    **    **   **   **   **

அன்பை அள்ளிப் போட்டுக்
குடம் நிறைய நீர் அடைத்து
இடுப்பில் அணைத்துச் சுமந்து வருகின்றேன்
அவசரத்தில் பாதி இடுப்புவழி பயணம் செய்து
கால் நனைத்துப் போகின்றது.
குடம் இன்னும் தளும்புகின்றது
குறை குடமல்லவா
நீர் குடம் அடித்துக் குடம் அடித்து
மௌனித்துப் போகும்
குடம் சும்மாடு விட்டிறங்கி
கலயம் அமர்ந்து மூடி மாட்டும்.


4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை சகோ ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...!

முதலில் குளிர்...!

முடிவில் அப்பாடா...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...