எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 ஜனவரி, 2015

பூமாலை



கரங்கள் குடைபிடிக்கப்
பாதங்கள் செருப்பணிந்து
மண் முகம் குதறிப்போடும்
மண் குமரிக்குப்
பூ(மழை)மாலை சூட்டப்படுகின்றபோது

அன்புகள் ஆகர்ஷித்துத்
தழுவ வரும்போது
தலைக்கு மேலே கறுப்புக்
க்ரீடம் அணிந்துகொண்டு
எதிர்ப்புத் தெரிவிக்கும்
முட்டாள் மனிதர்கள்.

அந்த மழை வீணே பொழிகிறது.

மனிதத் தழுவலுக்கு
ஆசையோடு வந்த அது
மண்ணையும் மரத்தையும்
கட்டையையும் கதிரையும்
மலர்களையும் முகம்மறைக்கும்
போலிப் போர்வைகளையும்
சன்ன விரலால் தொட்டுத் தொட்டு
உயிர்ப்பிக்க முயல்கிறது

வேஷம் போடத் தெரியாமல்
வெகுளியாய் வெள்ளந்தியாய்ப்
பொழிந்து கொட்டுகின்றது.

மனிதர்கள் கூட்டின்
மையத்தில் ஒடுங்கும் சிலந்தியாய்
இருளை நோக்கி ஓடிப் பதுங்கி
வெளிச்சத்தைக் கண்டு அலறும் கரப்பாய்
மழைத்துளி பட்டவுடன்
முதுகைக் கட்டட ஓரத்தில்
திணித்து நத்தையாய்
மிருகமாய் ஆகிப்போனார்கள்

கையில் துளிகளைச் சேகரித்துப்
பரவஸப்பட முடியாமல்
ஜன்னல் கதவுகளை
அறைந்து சாத்தித்
திரைகளை இழுத்து மூடி
அதனை அவமானப்படவைக்கும்
உணர்ச்சியற்ற மிருகமாய்

கத்திப் பேசியே பழக்கப்பட்ட
செவிட்டு மனிதர்க்கு அதன்
ஸங்கீத லயம் எங்கே
புரியப்போகின்றது. ?
ஆனாலும் அலுத்துக்கொள்ளாமல்
அந்த மழை பூமாலை
கட்டிக்கொண்டிருக்கும்

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...