சனி, 19 ஏப்ரல், 2014

தழும்புகளோடு பாதை.

அற்றும் அறாமலும் 
பற்றும் பற்றாமலும் 
தொங்கிக்கொண்டிருக்கிறது 
நீர்த்திரை. 
திரையைக் கலைத்துக் கலைத்து 
விளையாடுகிறது காற்று. 
காய்ந்த தடமாய்க் கிடக்கிறது 
தழும்புகளோடு பாதை. 
ஒற்றை மழை புதுப்பிக்கிறது 
பூமியின் ஈரத்தை. 
மலையின் முலை சுரந்து 
பொழியத்துவங்குகிறது அருவி. 
குருவிகள் கொத்தியது போக 
சாளக்கிராமங்களை உருட்டியபடி 
இறங்குகிறது நீர்ப் படுதா.. 
கலைக்க ஏலாமல் வேடிக்கையாய்க் 
கிளைத் தும்பிக்கையை நீட்டி 
நீருஞ்சித் தலையசைக்கின்றன விருட்சங்கள்.. 
கல்லாய்க் கிடப்பதா, 
கிளையாய் நீள்வதா,, 
நீரருவியாய்ப் பொழிவதாவென யோசித்துக் 
காற்றாய்க் கடக்கிறேன்..

3 கருத்துகள்:

  1. முடிவில் கவி மழையாய்ப் பொழிந்தது
    மகிழ்வளித்தது
    மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரமணி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி நிகண்டு.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))