வியாழன், 27 மே, 2021

பூக்களோடு பூக்களாய்..

தாமரைகளோடு
அல்லிகளும் மலர்ந்திருக்கின்றன..
பூக்களோடு பூக்களாய்ப்
பூத்திருக்கிறது குளமும்.
கயல்களோடு
குதிக்க இடமில்லாமல்
தவிக்கிறது சூரியன்.
ரீங்காரத்தோடு
இனம்புரியாமல்
அலைகின்றன வண்டுகள்.
வாசனைப் பாலாவியோடு
தண்ணென்றிருக்கிறது வாவி.
எல்லா இதழ்களும்
விரிந்து விடுகின்றன
தண்டுகளோடு 
தண்டுகளாய்த் துழாவிப் 
பூக்களோடு பூக்களாய்
முகம் விரிக்கும்போது..

வெள்ளி, 21 மே, 2021

மொக்கு

மெல்லத் துளிர்விடுகிறது
ஒரு மொக்கு
இலையுதிர் காலத்துக்குப் 
பின்னுமொரு வசந்தம்.
எங்கோ இருக்கும்
தேனியின் நாசியிலும்
வசந்தத்தின் பெருமூச்சு.
புறப்பட்டு வருகிறது
அலைந்து அலைந்து
தேடித் தேடி
தனக்காய்ப் போதவிழத்
தொடங்கியிருக்கும் முகை நோக்கி. 
ரீங்காரம் மனம் கொய்ய
சிறகடிப்பு சிலிர்க்க வைக்க
தேன் சுரக்கும் இதழ்களோடு
மடல் மடலாய்
விரியத் தொடங்குகிறது மொக்கு.

திங்கள், 17 மே, 2021

மந்தை

கொள்ளை நோய்ச் செய்திகளைப்
பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்
பின்னிருந்த சிம்மாசனம் 
காணாமல்போய் இருந்தது.
துரட்டிக் கம்புகளுக்குள் ஓடும்
ஆட்டுமந்தையில்
காணாமல் போயிருந்தேன்.
தழைகள் கிடைத்தன
அப்படியே உண்பதா
காய்ச்சிக் குடிப்பதா..
 

வியாழன், 6 மே, 2021

மறதி மிகச் சிறந்த வியாதி

மறதி 
மிகச் சிறந்த வியாதி.

ஒவ்வொரு முறையும்
சுழற்சி முறையில் வாய்ப்பு

கொள்ளை கொள்ளையாய்அடித்த
குடும்பச் சொத்துக்கள்
பரம்பரை பரம்பரையாய்த் தொடர

சுற்றி இருப்போரின் கைப்பாவையாய்ச்
சேர்த்து வைத்தவர்கள்
கடலோரச் சமாதிகளில் உறைய

இறப்பின் தேதிகள் கூட
கூட இருப்பவர்களால்
நிர்ணயிக்கப்படுகின்றன.

இராமனோ இராவணனோ
ஆண்டவன் யாரானால் என்ன

கொள்ளை கொடுத்தவர்கள்
தற்காலிக ஞாபக மறதியில்

மறதி 
மிகச் சிறந்த வியாதி.