திங்கள், 3 செப்டம்பர், 2018

உடன் போகும் காலம் வரை..

மஞ்சள் மோகம்
முகிழ்த்தெழ
சிந்தூர நெற்றியும்
சிவப்போவியக் கரங்களும்
மெட்டி விரல்களும்
சன்னஞ்சன்னமாய்
ஓவியம் வரைகின்றன.

சிறுபொழுதும் பெரும்பொழுதும்
சிறுமூச்சும் பெருமூச்சும்
கலந்துகட்டி
பனிபூக்கப் பனிபூக்கச்
சூரியனும் சந்திரனுமாய்ப்
பிரசவிக்கின்றன.

நரையோடித்
திரையோடியபோதும்
மோகம் முப்பதும்
ஆசை அறுபதுமாம்.
பிடித்த பிரதிமையின்
தீராப் ப்ரேமைக்கு
நாட்காட்டி உரிக்கும் தாள்கள்
நலங்கூறும் பூங்கொத்தாம்.

மங்கலமும் மனையறமும்
மனமாட்சியும் பொலியும் மனம்
அபத்தங்கள் நிகழ்ந்தாலும்
அபவாதம் வந்தாலும்
அயர்ந்தும் போவதில்லை
துயர்ந்தும் போவதில்லை
உயிர் பிணைந்து முன்னிற்கும்
உடன்போகும் காலம் வரை.

  

2 கருத்துகள்:

  1. //உயிர் பிணைந்து முன்னிற்கும்
    உடன்போகும் காலம் வரை.//நல்ல உவமை/

    பதிலளிநீக்கு
  2. நன்றி விமலன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))