செவ்வாய், 29 மார்ச், 2016

ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம்



4. ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம் :-

சிவப்பு !
அஸ்தமனத்து அடிவானிற்கும்,
உதயத்தின் கீழ்வானிற்கும்
ஒரே இரத்தச் சிவப்பு !

கதவடைப்பு மேகங்கள்
துப்பாக்கித் தூசிகளால்
துளைக்கப்பட்டபோது
சிகப்பு மழைகள்.

ரத்த வெள்ளத்தில்
குப்பைகள் போல
தலைகளும் உடல்களும்
கை கால்களும்
அடித்துச் செல்லப்படுகின்றன.
வறுமைக்கடலை நோக்கி. 

இந்த அஸ்தமனம்
என்றும் நிலையானதல்ல. !
‘நாளை விடிவு வரும் ’
என்ற நம்பிக்கையுள்ளவர்க்கு !

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
அது அப்போது.

ஆனால் இங்கே
வினை விதைத்தவன்
பலனை அறுவடை செய்கிறான்.
தினை விதைத்தவன்
பசித் தீயால் வெந்து தணிகிறான்.

பிறப்பில் தொடங்கும் விதி
அவனை
இறப்பில் மூழ்கடித்தபின்தான்
கைவிடுகிறது.

இந்தக் கலியுகத்தில்
இந்தச் சிநேகத்துக்கு மட்டும்
இறுதி என ஒன்று
இருக்கிறதாவென்று தெரியவில்லை.

பிறக்கும்போதும் சரி
இறக்கும்போதும் சரி
உருவ ஒற்றுமைதான்
உடையும் ஒன்றுதான்

புயலுக்குப் பின்னே
அமைதியென்றொன்று உண்டல்லவா ?

ஆம் ! இந்த
அஸ்தமனத்தை விரட்ட ஒரு
உதயம் கண்விழித்துக் காத்திருக்கின்றது.

அஸ்தமனச் சிவப்பை விட
கீழ்வானம் சிவந்து
சுருண்டு
குமுறி எழும்போது
தோன்றும்
முடிவிலா உதயம். !

-- 85 ஆம் வுடைரி 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))