வியாழன், 31 மார்ச், 2016

உலா



என்னுடல் அழிந்துபட்டால்
என் கவிதைகள் உயிருடன்
ஒளி பெற்று
உலா வரும். !
அதற்காகவாவது என் உயிர் போகட்டுமே. 

-- 82 ஆம் வருட டைரி. 

செவ்வாய், 29 மார்ச், 2016

ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம்



4. ஒரு அஸ்தமனத்தில் தோன்றும் உதயம் :-

சிவப்பு !
அஸ்தமனத்து அடிவானிற்கும்,
உதயத்தின் கீழ்வானிற்கும்
ஒரே இரத்தச் சிவப்பு !

கதவடைப்பு மேகங்கள்
துப்பாக்கித் தூசிகளால்
துளைக்கப்பட்டபோது
சிகப்பு மழைகள்.

ரத்த வெள்ளத்தில்
குப்பைகள் போல
தலைகளும் உடல்களும்
கை கால்களும்
அடித்துச் செல்லப்படுகின்றன.
வறுமைக்கடலை நோக்கி. 

இந்த அஸ்தமனம்
என்றும் நிலையானதல்ல. !
‘நாளை விடிவு வரும் ’
என்ற நம்பிக்கையுள்ளவர்க்கு !

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
அது அப்போது.

ஆனால் இங்கே
வினை விதைத்தவன்
பலனை அறுவடை செய்கிறான்.
தினை விதைத்தவன்
பசித் தீயால் வெந்து தணிகிறான்.

பிறப்பில் தொடங்கும் விதி
அவனை
இறப்பில் மூழ்கடித்தபின்தான்
கைவிடுகிறது.

இந்தக் கலியுகத்தில்
இந்தச் சிநேகத்துக்கு மட்டும்
இறுதி என ஒன்று
இருக்கிறதாவென்று தெரியவில்லை.

பிறக்கும்போதும் சரி
இறக்கும்போதும் சரி
உருவ ஒற்றுமைதான்
உடையும் ஒன்றுதான்

புயலுக்குப் பின்னே
அமைதியென்றொன்று உண்டல்லவா ?

ஆம் ! இந்த
அஸ்தமனத்தை விரட்ட ஒரு
உதயம் கண்விழித்துக் காத்திருக்கின்றது.

அஸ்தமனச் சிவப்பை விட
கீழ்வானம் சிவந்து
சுருண்டு
குமுறி எழும்போது
தோன்றும்
முடிவிலா உதயம். !

-- 85 ஆம் வுடைரி 

மதியழகன் முகபாவம்



3. மதியழகன் முகபாவம் :-

பூமித்தாயின் தாலாட்டில்
சந்திரக் குழந்தை
வானத் தொட்டிலில்
தூங்குகின்றது.

மேகக் குவியல்கள்
மூடியதால்
சந்திரக் குழந்தை தும்ம
பரந்து சிதறிக்கிடக்கும்
எச்சிற் துளிகளோ
நட்சத்திரங்கள். !

சூரியத் தந்தைக்குப்
பயந்துகொண்டு
பூமித் தாயின்
நிழல் முந்தானையில்
மாதமொருமுறை
மறைந்துகொள்கிறானோ ?

இரவில் ஆடித்திரிந்து
அழகு காட்டி மயக்குபவன்
குறும்பு சேஷ்டை புரிபவன்
பகலில் ஓடி ஒளிந்து
விளையாடுவதேன் ?

இரவு தோறும்
குளக் கண்ணாடியில்
தன்னுடைய
உருவக் கலங்கல்களைப் பார்த்து
கீற்றுப் புன்னகை புரிகிறானோ ?

-- 85 ஆம் வுடைரி 


திங்கள், 28 மார்ச், 2016

மதுர நாயகி துதி.



அம்மா என்றழைத்தாலே மதுர நாயகி
ஆசையுடன் அரவணைப்பாள் மதுர நாயகி
இல்லையென்னாது அம்மா மதுர நாயகி
ஈந்திடுவாள் அனைவர்க்கும் மதுர நாயகி.
உள்ளத்தில் கோயிலானவள் மதுர நாயகி
ஊக்கம்பல அளித்திடுவாள் மதுர நாயகி
எங்கும் நிறைந்திருப்பவளே மதுர நாயகி
ஏழையென்னாலும் அம்மா மதுர நாயகி
ஐம்புடன் நடத்திடுவாள் மதுர நாயகி
ஒப்பற்ற தெய்வத்தாயே மதுர நாயகி
ஓயாது நலம்புரியும் மதுர நாயகி
ஸ்ரீ மதுரநாயகித் தாய்க்கு அடிமையின் சமர்ப்பணம்.

-- 85 ஆம் வுடைரி 

ஞாயிறு, 27 மார்ச், 2016

மதுர நாயகி.



மதுர நாயகி அம்மா மதுர நாயகி
மங்களம் நிறையத் தருபவளே மதுர நாயகி
மதுரம் நிறைந் திருப்பவளே  மதுர நாயகி
மனக் கவலை தீர்ப்பவளே மதுரநாயகி

மனமுருகிக் கும்பிட்டாலே மதுர நாயகி
மக்கட் செல்வம் அளித்திடுவாள் மதுர நாயகி
மாதர் மன உறுதி பெற மதுர நாயகி
மயக்கம் தீர்த்து அருள்புரிவாள் மதுர நாயகி.

-- 85 ஆம் வுடைரி