திங்கள், 25 மே, 2015

ஒரு ஊன்றுகோல்



ஒரு ஊன்றுகோல்
தள்ளாடுகிறது.
வஸந்தகாலம் கடந்து அது
இலையுதிர் காலத்தில்
பயணிக்கிறது.
பற்றுதல் தேடிச் சாணியிலும்
லத்தியிலும் மணலிலும்
தாரிலும் குட்டித் தேங்கல்களிலும்
சிமிட்டித் தரைகளிலும்
தண்டவாளத்தோரக் கப்பிகளிலும்
பூங்காவோரப் பெஞ்சுகளிலும்
இடையறாமல் நடக்கிறது
தீண்டல்களில் துவள்கிறது
காலில் காயம்பட்டு
இருட்டிலும் வெளிச்சத்திலும்
உடல் தோலுரிந்தும் உழைக்கிறது.
வெள்ளிப் பூண் கழண்டு
வெளிப்பூச்சகன்று
கிழடு தட்டிக்
கன்னம் கவலை வரித்துக்
கிடக்கின்றது
பாதம் அழுக்காக்கி
நீர் மூழ்கிக் கழுவி
மண் நடந்து
பசித்துக் கிடக்கிறது.
வெள்ளித் தாலி இழந்து
வார்னிஷ் சொத்திழந்து
விதவையாகிப் போனது
ஒரு கைத்தடி
கதியிழந்து
கண்ணீர் சாத்தி நடக்கிறது.

-- 82 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))