திங்கள், 6 ஏப்ரல், 2015

காயாசம் பூணாமல்



காக்கைக் கரைச்சல்களுக்குள்
உடலிருத்திக் கொண்டிருக்கும்.
மனசு காயாசம் பூணாமல்
சடாமுடி சொருகாமல்
மரப்பாதுகை டக்கிடாமல்
சன்யாசக் கோலம் பூணும்.

விரக்திச் சாம்பல்
உடல் குளிப்பாட்டும்.
அத்தனையும் அள்ளிச் செருகி
மனப்பூவேந்தி
கவிதைச் செடி காத்திருக்கும்

காயசண்டிகைகளின்
மிதிபடுதல்களிலிருந்து தப்பிக்க
முனிவனின் வரவு பார்த்து
நாவல்கனி ப்ரார்த்திக்கும்.

கேள்விக்குறிகளை
அசட்டையாய் உதறிப்போடுவதற்காக
வியப்புக்குறி தீட்டிக் கொள்ளும்.

பாவாடை முடிச்சாய்
தினம் சிக்குப்பட்டு அறுந்து
சிக்குப்பட்டு அறுந்து போகும்.

வெளிச்சப்பாதுகை பார்த்து
இருட்டுள் அகலிகைக்கல்லாய்
மனசு குந்தியிருக்கும்.

தூக்கப் புரளல்களில்
துக்கப் புரளல்களில்
சேறு அப்பிக் கொள்ளும்.

சாலையோரக் கம்பங்களென
உடல் நிற்கும்.
கறுப்புத் தார் எங்கும்
உருகி வழிந்தோடும்.

காதோரம் கரித்துப்போகும்
குளவி ரீங்கரிப்புகள்
கொசுக்கள்
தோல்களில் காரித் துப்பும்.
இரண்டு விரல்களால்
துடைத்துவிட்டு
மனம் சும்மாயிருக்கும்

பின் மண்டை சொறிந்து
முகம் முழுக்க
அசட்டுக்களை வழிக்கும்
முகம்பார்த்து மனசரிக்கும்.

-- 82 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))