திங்கள், 9 மார்ச், 2015

வருடச் சேலையும் புத்தோடையும்.



இந்த வருடச் சேலைளை
நெய்வது யார் ?
நினைவுச் சரிகைகள்
துணுக்குகளாய்ச் சிதறினாலும்
மீண்டும் மீண்டும்
இழை இழுத்து ஒட்டிக்கொள்ள
நினைக்கும் அப்பாவி மனிதர்கள்.

அங்கங்கே பூக்களையும்
மகரந்தங்களையும்
பொதித்திருக்கும் இந்த
வருட மரங்களுக்கு
இலையுதிர் காலத்தில்
மட்டுமல்ல..
எல்லா நாட்களிலுமே
தாள் உதிர்காலம்தான்

மனித வாழ்வின்
இளமைக் காலங்கள்
திரும்ப வருவதில்லை.
ஆனால்
வருடத்துக்கு மட்டும்
மறுபடி மறுபடி
இளமைக்காலங்களை
அனுபவிக்க முடிகிறதே.

ஒரு வேளை
இது போன வருடத்தின்
சந்ததியோ.?
தாயை விழுங்கிப்
பிறந்த குழந்தையோ?

புதுவருடம்
வார்த்தைகளால்
சப்திக்கத் தெரியாத
சலசலக்க முடியாத
ப்ரிய மௌனம்.

ஊமைக்குள்
கிடந்தடிக்கும் மனத்துடிப்பு
வலியவந்து
மனம் தொடும் நட்பு.
பசுவின் ஸ்பரிசமாய்
மெல்லத் தொடும்
வார்த்தைத் தூவலாய்
ஜனித்த கவிதை.

விழி வாசகர்கள்
அன்னமாய்
நன்மைக்கருத்துக்களைப்
பெற்றுக்கொள்ள உதவும்
புத்தோடை. 

-- 83 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))