சனி, 28 பிப்ரவரி, 2015

அப்பாவி அணில்கள்,



இவைகள் துருப்பிடித்துப் போன
கப்பல் கிடங்குகள்

மனவிறகு எரிய
விழி அரிசியிட்டு
இமைப்பானையில்
தளதளக்கும் உலைநீர்

சோறு பதமான பின்னும்
நீர் சலசலக்கும்.

இவைகள் அந்தரங்க வேர்கள்
அழுகிப் போன தாவரங்கள்.

பாதங்கள் பயணப்பட்டு
பயணப்பட்டுப் பட்டுத்தான் போயின.

இந்த நீர் துடைக்க
இமை மயிர்கள்
உப்பு எண்ணி
ஒதுங்கிப் போகும்.

வஸந்தத்தை மதிப்பதாய்
மகிழ்விப்பதாய்
மிதித்துப் போகும் வாகனங்கள்.

அலைபாயும் அணில்குஞ்சாய்
விழிக் கண்மணிகள்
மனிதப் பைகளுக்குள் நுழைந்து
நிம்மதித் தீனி தேடும்.

இந்த அணிலுக்கு
சந்தோஷக் கனிகளை
துன்பக் காய்களைக்
கொறிக்கத்தான் தெரியும்.

உலகம் இருட்டுக் கருப்பைக்குள்
கதகதப்பாய் இருக்கும்போது
சிற்றருவியாச் சலசலக்கும் மனது.

நீர்க்குமிழிகளைக்
கொலை செய்வதற்குத்தானே
இந்தக் காற்று படைக்கப்பட்டிருக்கிறது.

பொத்தல் பைகளைப் பார்த்து
ஆகா நமக்குத்தான்
வாசல் வைத்திருக்கின்றார்கள்
என நினைத்து ஏமாறிப் பின்
உண்மை உணர்ந்து திருதிருக்கும்
அப்பாவி அணில்கள்.

-- 83  ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))