செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உள்ளார்ந்த வாக்கியங்கள்



உன்னால் விமர்சனம்
எழுதமுடியவில்லை
எனக்குப் புரிகிறது.

என்னில் எடுத்துக்காட்ட
உவமைகள் இல்லை.
இரசித்துப் படிக்க இது
பொருள் பொதிந்தது இல்லை
இது வெறும் கட்டுரை
கவிதை கலந்த உரைநடை

உன் தடுமாற்றம் புரிகிறது
இதில் வார்த்தைத் தூவல்கள் இல்லை.
இதில் மனம் தொடும்
பசுவின் பட்டு ஸ்பரிசங்கள் இல்லை.  
இதில் இருப்பவை
வெறும் உள்ளார்ந்த வார்த்தைகள்.

ஏமாந்துபோன ஏக்கப்பட்ட
ஆசைப்பட்ட எப்போதாவது
திடீரெனக் கிடைத்த
நிகழ்ச்சிக் கலவைகளின் உளறல்கள்.
வெளிப்பாடுகள் இவை.

இவைகளுக்கு ஆதி இல்லை
அந்தம் இல்லை கோர்வை இல்லை
இவை உள்ளார்ந்த கேவல்கள்.
தாயிடம் குழந்தை
அழுதுகொண்டே சொல்லும்
சொற்துப்பல்கள்.

ஸ்நேகிதையிடம் வார்த்தைகளை
மென்று மென்று பின் பகிர்ந்துகொள்ளும்
களைத்த மனத்தின்
சோம்பற் முறிப்புகள்.

எங்காவது ஓரிடத்தில்
உற்சாகம் அவசரக் கோலமாய்த்
தெரித்திருக்கும்.
மாலை ஆவதற்குள் அதுவும்
கசங்கிப் போகும்.

இவை வெறும்
உள்ளார்ந்த வாக்கியங்கள்.
எனக்குப் புரிகிறது.
உன்னால் ஏன் விமர்சனம்
எழுத முடியவில்லை என்று.


2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))