வியாழன், 12 பிப்ரவரி, 2015

முகாரி வீணைகள்



இந்த வீணைகளை
உடைத்துப் போடுங்கள்
இவை
முகாரியையே
மொழியாகக் கொண்டவை.

பொறுமையில்லாமல்
குரைத்துத் தள்ளும்
குடமறுந்த வீணைகள்

தந்தி அறுந்தும்
தானென்று ஆடும்
தரம் கெட்ட வீணைகள்

சுருதிக்கட்டையில்லாத
இதைத் தூரப் போடுங்கள்.
தூசியப்பிப் போகட்டும்.

மொட்டை மரங்கள்
காற்றுக்கரம் வாசிக்கும்
நாதமறுந்த வீணைகள்.

மலையோரங்கள்
அருவிகளை வரி விரல்களால்
வருடி வருடி வெறும் குடத்தில்
வீணை வாசிக்க முயற்சிக்கும்.

மேகங்கள் ஆகாய வீணையில்
தந்தி தேடிச் சலிக்கும் விரல்கள்.
மரங்கள் மண் வீணையில்
சுரக்கட்டை தேடி
வேர்விரல் சலித்துப் படுக்கும்.

ஆறுகள் கடலை மீட்டினாலும்
அவற்றில் பிறப்பதென்னவோ
அபஸ்வர ஸ்வரங்கள்தான்.

துடைப்பங்கள் கூடக்
குப்பைச் சுரங்களைச் சேர்த்து
மண் வீணையில்
சுத்தச் சந்தங்களை
உருவாக்கத்தான் முயல்கின்றன.

பூக்கள் கூட
செடி வீணைகளில்
வாடிய நாதமாய்
சுருங்கிச் சிதையும்.

நல்ல வீணைகள் கூட
சில இருக்கலாம்
ஆனால் இப்போது
மாசுபடிந்த வீணைகளே
அதிகம்.

மானபங்கப்பட்டும்
மண்டையைச் சுழற்றி ஆடும்.
இந்த வீணைகளை
உடைத்துப் போடுங்கள்
இவை
முகாரியையே
மொழியாகக் கொண்டவை.

-- 82 ஆம் வருட டைரி.

5 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))