ஞாயிறு, 16 ஜூன், 2013

எனக்கு ஏன் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை..:-

எனக்கு ஏன் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை..:-
********************************

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
என்று சொல்லப்பட்டு வந்த ஊரில்
ஆறாவதுக்குப் பின்னும் ஆண்குழந்தைக்குக்
காத்திருக்கும் மனிதர்கள் நடுவில் பிறந்ததால்

சமத்தி என்ன பெத்தா
தலைச்சன் பொண்ணு பெத்தா என
என் தாய் புகழப்பட வேண்டிப் பிறந்ததால்.


காரைக்கட்டிடங்கள் நிறைந்த நகரில்
கள்ளிப் பாலால் கொல்லமுடியும் என
யாரும் பார்த்து அறியாததால்


மகனை அரசனாகக் கண்ட பெற்றோர்
மகளை ஆத்தாப் பொண்ணு எனத்
தன் தாயாகவே கண்டதால்

ராணி மங்கம்மாளும், வேலு நாச்சியாரும்
மங்கையர்க்கரசியும் பெருமைக்குரியவர்கள் என
படிப்பறிவின் மூலம் உணர்ந்ததால்

எந்த ஈராவிலும் ஆணுக்குக்
கருப்பை வழங்கப்படாததால்
என்னைப் போன்ற பெண்ணைப் பிறப்பிக்க
எனக்கும் கள்ளிப்பால் வழங்கப்படவில்லை.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))