டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
புதன், 25 ஏப்ரல், 2012
அலை
அலை அழைக்கிறது
சூரியன் தகிக்கிறது.
மூழ்கவா, காயவா..
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
மயக்கம்
வளையும் நாணலுக்குள்
மயங்கிக் கிடக்கிறது
காற்றும்..
திங்கள், 23 ஏப்ரல், 2012
மனிதப்புழு.
மண் மக்கிப் போகிறது
மனிதன் உருவாக்கியதெல்லாம்..
திரும்ப உண்ணத் துவங்குகிறான்,
மண்புழுவாகி..
சனி, 21 ஏப்ரல், 2012
மருதாணிப்பூத்தூக்கம்
சிவந்த மருதாணிக் கரங்களில்
வெளுத்துக் கிடக்கின்றன
உதிர்ந்த மருதாணிப் பூக்கள்
முன்னிரவுத் தூக்கம் கலைந்த அழகோடு.
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
துணிச்சலின் முனை.
புகழப்படும் போதெல்லாம்
முறிந்துவிடுகிறது என்
துணிச்சலின் முனை.
திங்கள், 16 ஏப்ரல், 2012
உப்புச்சுவை.
வியர்க்க விருவிருக்க
உப்பு மறந்து உனக்காய் நான் சமைக்க..
என் நெற்றி வியர்வை துடைத்து
முத்தமிட்டு உதடு மடித்து
உப்பைச் சுவைத்து
ஓரக்கண்ணால் நீ சிரிக்க
உவகையில் ஓயாமல்
நெஞ்சப்பாரடிக்கிறது..
குழந்தைச் சூரியன்..
பல வண்ணப் பறவைகளை
பச்சை மரங்களை
பழுப்பு நிறச் சாலைகளை
பனியுமிழ்ந்து பூசித்துடைத்து
தங்கநிறமாய் உயிர்ப்பிக்கிறது
குழந்தைச் சூரியன்.
வியாழன், 12 ஏப்ரல், 2012
சுனாமி
பாறைகள் விளைந்த
ரகசிய உலகில்
உலவிக் கொண்டிருக்கிறது
கடல்.
உப்புநீர்த் தகடுகளில்
ப்ரயாணிக்கிறது
உல்லாசக் கப்பல்.
சுமக்க விருப்பமில்லாமலோ
உணர்வு உராய்விலோ
உடைத்து விழுங்குகிறது’
உன்மத்தம் பிடித்த கடல்.
புதன், 11 ஏப்ரல், 2012
ரகசிய இறகு
உன் வார்த்தைகள்
நெகிழ்க்கும்
இறக்கைகள் பொருத்தி
யாருக்கும் தெரியாமல்
அறைசுற்றிப் பறந்து
வந்தமர்கிறேன்.
ரகஸ்யத்தை
அம்பலமாக்க
மூச்சுக்காற்றில் அலைகிறது
உதிர்ந்த சிறு இறகு.
பெண்புயல்.
துரத்தித் துரத்திக்
காதலிக்கிறாய்.
தாங்க முடியாததால்
பெண் பெயரிடுகிறோம்
புயலே உனக்கு..
திங்கள், 9 ஏப்ரல், 2012
ஊஞ்சல்
கும்மாளமிட்டாடும்
குழந்தைகளோடு
ஊஞ்சலாடிக் களிக்கின்றன
ஆலம் விழுதுகளும்.
சனி, 7 ஏப்ரல், 2012
இருப்பு.
காற்றாய், நீராய்,
விண்ணாய், மண்ணாய் ,
சிலசமயம் நெருப்பாகவும்
இருக்கிறது இருப்பு..
உயிர்த்தெழும் உண்மை.
உயிர்த்தெழுகிறது உண்மை ..
சிறையெடுத்திருந்த
பொய்க்கல்லைத் தகர்த்து..
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
பராக்கு.
எதுக்கோ கோவம்
எதுக்கோ சந்தோசம்
ஒன்றை மறந்து இன்னொன்றில்
பராக்குப் பார்க்கும் பிள்ளை..
முகநூலின் ஆட்டத்தில்..
திங்கள், 2 ஏப்ரல், 2012
காந்தர்வா
நீலமோ தாமரையோ
நித்திலப்பூவே
நிறைந்திருக்கிறாய்
நெஞ்சமெல்லாம்..
மீட்டு உன் புல்லாங்குழலை
அதே சங்கீதத்தை
காதொளித்துக் கேள்
கலக்குதடா உன் குறும்பு..
கண்மூடி நீ லயிக்க
கண் திறந்து நான் லயிக்க
காந்தர்வா கவர்ந்துகொள்ளவா
உன் கரம்பற்றிப் புல்லாங்குழலை
‹
›
முகப்பு
வலையில் காட்டு