செவ்வாய், 31 ஜனவரி, 2012

என் பிள்ளை யாழகிலன்.

புத்தகப் பிணங்கள்

எரிந்த யாழருகில்

புத்தனின் கண்ணீரோடு

உன் அழுகை..



பாசத்தால்

பற்றியெறிந்த என்னை

நீ தேடித் தேடித்

தாயாய்ப் பற்றி..



அன்றாடக் கடமைகளோடு

அவ்வப்போது தலை நீட்டும் நான்

உன் அழுகை கண்டு

பரிதவித்து.



பதில்களற்று கடக்கும் என்னை

பொய்யாக வருவதாக

போலியாக பேசுவதாக

சுவறெல்லாம் கிறுக்குவாய்..



பேர் மாற்றி ஊர் மாற்றி

ஒருநாள் பாலையும் மாற்றி

சென்றகணம் உனை தூக்கிப்

போட்டேன் இதயத்திலிருந்து.



பதறிப் பதறி நீ

கதறி நின்றபோது

வினவினேன்

நீ ஆணா பெண்ணாவென்று.



புத்தகங்களின் மிச்சத்தோடு

கருகிய யாழில் கிடக்கும் நீ

எரியாமலிருக்கவே அடையாளம்

மாற்றுவதாய் அரற்றினாய்.



ஷெல்லுக்கெல்லாம்

சிதை தப்பி

மனக்கசங்கல்களோடு

நிற்கும் யாழறுந்த அகிலமே



எடுத்தெறிந்ததற்கு வருந்தி

எடுத்தென் பிள்ளையாய்

அணைத்துக் கொண்டேன்

யாழகிலா உன்னை..

அன்னையர் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். . வாழ்க வையகம் போரின்றி.. வாழ்க வளமுடன்.


3 கருத்துகள்:

  1. என் தய் எனக்குப்பிறந்தாள் என்பதை நான் சுமக்கன்றேன் மறுபடியும் நினைவுகளாய் அம்மா..
    நன்றி என்னுயிர் தாயே..

    பதிலளிநீக்கு
  2. என் தாய் எனக்குப்பிறந்தாள் என்பதை நான் (சுமக்கின்றேன்] மறுபடியும் நினைவுகளாய் அம்மா..
    நன்றி என்னுயிர் தாயே..

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))