திங்கள், 19 செப்டம்பர், 2011

மறந்துவிட்டாயா..

மறந்துவிட்டாயா
நாம்
தமிழ் எழுத்தாளர்களைத்
தரப்படி பட்டியலிட்டதை..

மறந்துவிட்டாயா
நாம்
அரங்கேற்றம்
பாலசந்தரை விமர்சித்ததை.

மறந்துவிட்டாயா
நாம்
மேடைகளில்
புயலென முழங்கியதை..

மறந்துவிட்டாயா
நாம்
பெண் உரிமை பற்றிப்
பிரலாபித்ததை.

மறந்துவிட்டாயா
நாம்
இயல் இசை வாரத்தில்
ஷேஷகோபாலனின்
சங்கீதத்தை ரசித்ததை...

மறந்துவிட்டாயா
நாம்
ஹுசைனியின்
குதிரை ஓவியங்களைக்கண்டு
ஆச்சர்யப்பட்டதை..

மறந்துவிட்டாயா
நாம்
புங்கை மரத்தடியில்
மாவடுவும் வடையும்
பகிர்ந்துகொண்டதை.

மறந்துவிட்டாயா
நாம்
பருவத்தின் விறைப்பில்
பாரதியின் புதுமைப்பெண்ணாய்
இருந்ததை..

மறந்துவிட்டாயா
நாம்
சால்ட்டைக் கண்டுபிடிக்க
சோதனைச் சாலைகளில்
செய்த குறும்பை..

மறந்துவிட்டாயா
நாம்
கோலப் போட்டிகளில்
கோலங்களாகவே ஆனதை..

மறந்துவிட்டாயா
நாம்
கல்லூரி கல்லூரியாக
கவிபாடச் சென்றதை..

மறந்துவிட்டாயா
நாம்
வாழ்க்கையெனும் கடலுக்குள்
அலைகளாய்
வீசப்பட்டுக் கொண்டிருப்பதை..

மறந்துவிட்டாயா
நம் கனவுகளையும்
நனவுகளையும்...

அடி தோழி..!
பருவங்கள் மாறிவிட்டன..
நம் உருவங்கள் மாறிவிட்டன..
ஆனால் நினைவு மட்டும்
மாறலையே தோழி..!

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))