புதன், 27 மே, 2020

உயிர்ப்பு.

சாமி பக்தையாகிவிட்டாள் செல்லி.
வீடே கோவிலாகிவிட்டது
தீப எண்ணெயும் தீப்பெட்டியும்
ஊதுபத்தியும் சாம்பிராணியும்
அவள் மளிகைக்கடை லிஸ்டில்
முதலிடம் பிடிக்கின்றன.
சமைத்து பாத்திரம்தேய்த்து
சமைத்து பாத்திரம்தேய்த்து
குணச்சித்திரப் பாத்திரமாகிவிட்டாளவள்.
உடுப்பது நைட்டியென்றாலும்
ஊர்ப்பட்ட துணிகள் தினம் துவைக்க.
காயைக் கழுவிக் கையைக் கழுவி
கழுவில் நிற்கிறது அவள் நேரம்.
முகத்தையே தொடாமல்
முகமறைந்து
முகமறந்து கிடக்கிறாள் செல்லி.
முகமறியா பலர்
கிருமிகளுக்குப் பலியாக
கையறுநிலையில்
குற்றவுணர்ச்சியோடு
குதறிப்போட்ட குடலாய்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே அவள் எழுத்துக்கள்.
ஒருவழியாய்
ஊரைச் சுற்றும் கொள்ளைநோய்
ஒழியும்போதுதான்
ஒளிந்திருக்கும் அவள்
உயிர்ப்போடு எழமுடியும்.

2 கருத்துகள்:

  1. விரைவில் நல்லதொரு விடிவுகாலம் பிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. ஆம் டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))