வெள்ளி, 27 மார்ச், 2015

வியாபாரிகள்



அந்த வியாபாரிகள்
புதையல்களை
நஷ்டத்திற்கு விற்றுவிட்டுக்
கோணிப்பைகளுக்குக்
கணக்குப் பார்த்தார்கள்.

நிலவைத் துடைத்துத்
தூரப்போட்டுவிட்டு
நட்சத்திரப் பொறுக்கல்களில்
மூழ்கியிருந்தார்கள்

அந்தப் பூக்கள்
பூப்பதை நிறுத்திவிட்டு
மகரந்தப் பைகளை
எண்ணிகொண்டிருந்தன

சில குதிரைகள் சேணம் மாட்டியும்
இலக்கை மறந்து போயின

சந்தர்ப்ப ஊசியில் நுழைந்து
வாழ்க்கைத் துணியில்
நூல்களாய்க் காணாமல் போனார்கள்

மருதாணித் துகள்களைத்
தலைசுற்றிப் போட்டுவிட்டு
நெயில்பாலிஷ்களைப்
பத்திரப்படுத்தினார்கள்

எழுதி எழுதி
அழித்து எழுதி
கிழிபட்ட காகிதமாய்ப்
போனார்கள் அவர்கள்

விற்றவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தது
நஷ்டக் கணக்கு

அந்த மலைமுகடுகள்
பள்ளத்தாக்குகளாய்ச்
சமைந்து போயின

அவர்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
தாங்கள் சூடிக்கொண்டிருப்பது
வைரக்கிரீடங்களென்று
உள்ளே முள் குச்சிகள்
உறுத்தும்போதுதான் புரியும்

அவர்கள் பகுத்தறிவில்லா
ஜன்னல் போலானார்கள்
அந்த மரங்கள்
பழங்களை உதிர்த்துவிட்டு
காய்ந்த சுள்ளிகளைச்
சேமித்துக்கொண்டிருந்தது. 

-- 83 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))