வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இருப்பு.


இந்தத் திரை அழகானது.
இழுத்துக் கட்டப்பட்ட
இரத்தினக் கம்பளங்களைப் போல
மென்மையாயும் மினுமினுப்பாயுமிருக்கிறது.

இரகசியத்தையும்
காற்றையும் கூடக்
கசியவிடுவதில்லை.

விக்கிரமாதித்தன் கதைத்திரைச்சீலை
போலல்லாது
இருபுறக் கதைகளையும்
கேட்டபடி இருக்கிறது .

திரை இருப்பதை உணரும் கணம்
திகைத்து நோக்கும் நீ
அந்தப்புறம் மெல்லக் கடக்கலாம்.
சாவகாசக் கணங்களில்  கூர்ந்து நோக்கலாம்
எதனால் ஆனது இதுவென..

அப்படியான ஒன்று
நம் இருவருக்கும் இடையில்
தேவைதான் என நினைக்கும்போது
அசையத் துவங்குகிறது திரை.

அக்கணம் கண்களும்
காதுகளும் முளைக்கிறது  அதற்கு.
முகரவும், உரையாடவும்
தொட்டுணரவும் தலைப்படுகிறது.

தடுப்புச் சுவராய் இருந்ததை
எது அசைத்ததென உணருமுன்
தடுப்பணை ஆகிறது.

இந்தத் திரை
தேவைதானென நினைக்கிறோம்,
குறுக்கே இருக்கும் வரை
உன்னிருப்பையும்
என் உயிர்ப்பையும்
உறுதி செய்வதால்.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))