வியாழன், 22 ஜனவரி, 2015

இருபத்து நாலாவது

கதவின் கைப்பிடியில் கை வைத்தவுடனே கைப்பிடித்து நட்பாகி விடுகிறாள் அவள்.தயங்கி நுழையும் என்னை அங்கீகரித்து செல்லச் சிநேகிதியாகிறாள். மெல்ல மெல்ல நானும் அவளும் ஈருயிர் ஓருடலாகத் துவங்குகிறோம்.

நான் காணும் கனவுகளை எல்லாம் தன் கனவாய்க் காண்கிறாள். சமைக்கும் எனக்கு நெருப்புக்காயம் பட்டால் ஜன்னல்காற்றாய் ஓடிவந்து பரிதவிக்கிறாள். தோளில் சாய்ந்து சிரிக்கிறேன். மடியில் விழுந்து அழுகிறேன்.

சந்தோஷத்தை இரட்டிக்கும் அவள் துக்கத்தில் கண்ணீராய் நனைகிறாள். கோபமோ சோகமோ சுமந்து தத்தளிக்கும் என்னைக் குழந்தையாக்கி மென்மடியில் தாலாட்டுகிறாள். நான் தவழ்ந்து நடந்து கிடந்து சுகித்து மோகித்து உணர எத்தனை இன்பலாகிரியும், துன்பச் சுவையும் தந்திருக்கிறாள்.

அவளை விட்டுப் பிரியும் முன் கண் கலங்கும். கண் துடைப்பாள். கை சோரும். கை கொடுப்பாள். உடல் தொய்யும். தெம்பளிப்பாள். பிடித்திருந்த கையை விட்டுப் போய்வா எனச் சிரிப்பாள். உயிரைப் பிரிவது போல தோல் என்பு மாம்சம் சதையாய் ரத்தம் கசியப் பிரிந்து வருவேன்.

அடுத்து ஒருத்தி இதே புன்னகையோடு என் வரவுக்காய்க் காத்திருப்பாள். இதே தொடர்கதைதான்.இப்படி எத்தனை எத்தனையோ சிநேகிதிகள் எனக்கு. விட்டு விட்டுப் பிரிந்தும் என்மேல் பாசமாய் இருந்ததற்கு நன்றிகளடி நட்புக்களே..

------ 24 ஆவது வீடும் நானும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))