புதன், 17 டிசம்பர், 2014

பெண்ணாய் வாழ்தல் :-



பெண்ணாய் வாழ்தல் :-

தேடுதல் அற்ற இடத்தில்
யாசிப்பதற்கென்ன
தெய்வமற்ற இடத்தில்
வேண்டுதலென்ன

இன்றும் தொலையாமல்
கிடக்க வைப்பதெது
முழுகியபின்னும்
முழுகாமல் மிதக்கவைப்பதெது.

பறக்கும் குதிரைகளிடத்து
பொதிசுமப்பவற்றின் வேண்டுகோளென்ன
ஒன்றைப் பறக்கவும் ஒன்றைச்சுமக்கவும்
வைத்தது யாது.

அகக்காரணிகளில் அன்பிருந்தும்
புறக்காரணிகளின் புறக்கணிப்பா
புரட்டிப் புரட்டிப் போட்டாலும்
புரிந்தது ஒன்றுதான்.

ஆசைகளற்றபோதின் தேடுதலும்
தேடுதல்களற்றபோதின் வாழ்வும்
சுருங்கிப் போதலாம்.

கரணை கரணையாய்க்
காய்ப்பேறிக்கிடக்கிறது
கிளை கிளையாய்
வாழ்ந்த வாழ்வோ வளர்ந்த வடுவோ.
தேடித் தேடிச் செதுக்கிக்கொள்
புராதனச் சின்னமாகிவிடாமல்.


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))