சனி, 11 அக்டோபர், 2014

ஒரு நெருப்பு ரோஜாவுக்கு நினைவாஞ்சலி



11.12.84.

TO OUR BELOVED PROFESSOR MISS. PADMASANI.[DEPT OF PHYSICS]

இன்று ஒரு நெருப்பு ரோஜாவுக்கு நினைவாஞ்சலி :-

இன்று
பசுமை பூசிச் சிலிர்க்கும்
அந்த வயல்கள்
கிழடு தட்டும்.

வானில் பூக்கும்
எல்லா வானவில்களும்
காணாமல் போகும்.

ஆனால்
அந்த ஒற்றைப் பறவை
இவ்வளவு விரைவில்
முடங்கிப் போனதேன்.

எத்தனையோ விதைகளுக்கு
நீரூற்றிப் பயிற்றுவித்த
அந்தத் தோட்டக்காரன்
இன்று பொறுப்பை
உதறிவிட்டுக் கடவுளிடம்
ஓடியது ஏன்

இங்கே தவிப்பது
மனங்கள் மட்டுமல்ல
உயிரற்ற ஜடப்பொருள்களும்தான்.

பௌதீகத் துறையின்
வாயிற்கதவுகள் தினம் தினம்
கேள்வி கேட்டு இன்று
க்ரீச் என்று ஓலமிட்டு
வாய்மூடி மௌனாஞ்சலி
செலுத்துகின்றன.

எங்கே அந்த வேர்?
இந்தச் செடியை இத்தனை
நாளாய்த் தழைக்கவிட்டு
இன்று
அறுந்து போனால்
கருகிப் போனால் இந்தத்
தாவரங்கள் எங்கு செல்லும். ?

எங்கே இந்த
மக்கு மாணவனைச் ‘
செல்லமாய் மண்டையில்
தட்டிய விரல்கள்.?
நாங்கள் நெருப்புக்கு
வாரிக்கொடுத்துவிட்டு
வயிறெரிந்து கிடக்கின்றோம்

வேர்களுக்காக ஏங்கிய நீர்
இன்று எந்த வேர்களைத் தேடி
விண்ணகம் சென்றது

இந்தத் தாவரங்கள்
இன்று நீரை மட்டுமல்ல
சூரிய ஒளியையே இழந்தன.

எங்கே அந்தத் திறமை
பொருந்திய அறிவாற்றல் ?
முழுதாய் அனுப்பிவிட்டு
இப்போது
புகையோவியமாய் ஆன
உன்னைக் கண்டு
உன்னிடம் புலம்புகின்றோம்.

கேட்கின்றதா
இந்தப் பறவைகளின் ஓலம்.


2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))